ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல், உடனடியாக நடவடிக்கை எடுக்க அமித்ஷா உத்தரவு.!
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கியது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்ற போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர். மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலையடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்குடன் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை வேண்டும் என்றும் அமித்ஷா டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.