ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது சுல்தான் மனைவி சித்திக் பரீதா பேகம், 60. இவர் கடந்த 2012 ஜூலை 4 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடல் நலக்குறைவால் இறந்திருக்கலாம் என சந்தேக மரணம் என ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், மதுரை நகை கடையில் திருட்டு நகைகளை அடகு வைத்த போது சாத்தூரைச் சேர்ந்த அருணாசலம் 21, ராஜா 22, மாரீஸ்வரன் 25, ராஜேஷ் கண்ணன், ராமேஸ்வரம் நம்பு மாரி ஆகியோர் சிக்கினர். விசாரணையில், சித்திக் பரீதா வீடு அருகே வண்ண மீன் வியாபாரம் செய்து வந்தனர். தொழில் விருத்திக்காக சித்திக் பரீதாவிடம் கடன் வாங்கியிருந்தனர். கொடுத்த பணத்தை சித்திக் பரீதா , அவர்களிடம் திரும்ப கேட்டு வந்தார். இந்நிலையில் 2012 ஜூலை 7ல் வீட்டில் தனிமையில் இருந்த சித்திக் பரீதாவின் முகத்தை தலையணையில் அமுக்கி கொலை செய்தது தெரிந்தது. இது தொடர்பாக அருணாசலம் உள்பட 6 பேர் மீது ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இறுதி விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், அருணாசலம், ராஜா, மாரீஸ்வரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
9
You must be logged in to post a comment.