தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மீன் தூள், மீன் எண்ணெய் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை ஜூலை 1, 2017-முதல் செலுத்த வேண்டும் என தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழக படகுகளை நாட்டுடமையாக்கக் கூடாது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஆக. 24 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.29), ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவ சங்க நிர்வாகிகள் போஸ், தேவதாஸ், சேசு ராஜா, சகாயம் ஆகியோர் தலைமையில் ரயில் மறியலுக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு பேரணி சென்றனர்.ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் போலீசார் ரயில் மறியலுக்கு முயன்ற மீனவர்களை அரசு மருத்துவமனை அருகே தடுத்து நிறுத்தினர். மறியலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,அரசு மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக நகர் செயலாளர் கே.இ.நாசர் கான், காங்கிரஸ் நகர் தலைவர் ராஜா மணி, தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்க மாநில செயலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
8
You must be logged in to post a comment.