இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதி மக்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்கப்பெறாமல் சிரமப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சிகளின் உதவி இயக்குநருக்கு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார். இதன்படி, கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் மேற்கொண்ட துரித நடவடிக்கை மூலம் சிக்கல், பேய்க்குளம், சிறைக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு லாரி மூலம் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், கோடையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளும் விதமாக தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகளுடன் ஆலோசிக்கப்பட்டு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தினமும் 89.81 கன மி.லி., குடிநீர் விநியோகிக்க கணக்கிடப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 39 கன மி.லி., , ஊரக வளர்ச்சித் துறை ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 6.57 கன மி.லி., என தினமும் 45.57 கன மி.லி., குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களின் தேவைக்கேற்ப உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் 41.77 கன மி.லி., குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகம் செய்வதற்கு சிரமமான கிராமங்களில் மக்கள் பாதிக்காதவாறு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
.
You must be logged in to post a comment.