இராமேஸ்வரத்தில் சென்னைக்கு இன்று (10.4.19) மாலை 5:00 போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. 6:30 மணியளவில் பரமக்குடி அருகே மஞ்சூரை கடந்த போது டீசல் நெடி காற்றில் பரவி பயணிகளுக்கு மூக்கடைப்பு ஏற்படுத்தியது. ரயிலின் வேகத்திற்கேற்ப இன்ஜினில் இருந்து டீசல் ரயில் பெட்டிகளில் பரவியது. பரமக்குடி நிலையத்தை ரயில் நெருங்கிய போது டீசல் பரவல் அதிகரித்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். மாலை 6:45 மணியளவில் பரமக்குடி நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இன்ஜினை பார்த்த போது டீசல் கசிவு ஏற்பட்டது தெரிந்தது.
இதையடுத்து டீசல் கசிவை நிறுத்த டிரைவரின் முயற்சி பலனளிக்கவில்லை. ரயில் வேகத்தில் இன்ஜின் பெட்டியில் இருந்து கசிந்த டீசல் காற்றில் பரவியதால் பயணிகள் பொதுப் பெட்டி, ஏசி பெட்டிகள் என 7 பெட்டிகளில் டீசல் படர்ந்தது. இதனையடுத்து ரயில்வே தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தல் படி ராமேஸ்வரத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டது. இரவு 9:20 மணியளவில் இன்ஜின் இணைக்கப்பட்டு இரண்டே முக்கால் மணி நேரம் தாமதமாக 9:30 மணியளவில் பரமக்குடி நிலையத்தில் இருந்து ரயில் மீண்டும் கிளம்பியது. இதனால் நாளை (11.4.2019) காலை 6:30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய ரயில் காலை 9:00 மணியளவில் செல்லும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.