கடையம் பகுதியில் தரமற்ற அரிசி விநியோகம் செய்வதை கண்டித்து அரிசியுடன் ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை கடையம் யூனியனுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையம் யூனியனுக்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தரமற்ற அரிசியுடன் வந்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடையம் ஆணையாளர் முருகையா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் ஆகியோரிடம் புகார் அளித்தார். இதில் கடையம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தங்கராஜா, ஆழ்வை வார்டு செயலாளர் ஆர்எஸ் பாண்டியன் உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து எம்எல்ஏ பூங்கோதை செய்தியாளர்களிடம் பேசிய போது திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி நான் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து வருகிறேன். இதில் முக்கியமாக உள்ளாட்சி துறை, உணவு துறை, போக்குவரத்துறை, சுகாதார துறை இந்த நான்கு துறைகளின் மீது மக்கள் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர். எல்லா துறைகளும் முடங்கி கிடக்கின்றன.
ஆனால் இந்த நான்கு துறைகளும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்றன. ஆலங்குளம் தொகுதி மற்றும் கடையம் முழுவதிலும் ரேசன்கடைகளில் விநியோகம் செய்யபடும் அரிசி கருப்பரிசி, பழுப்பரிசி என தரமற்ற முறையில் மக்களுக்கு வழங்கபடுகின்றன. இந்த அரிசிகளை மக்கள் உண்ண முடியாமல் ஆடு மாடுகளுக்கு கொடுத்தால் அது கூட உண்ண மறுக்கிறது. விலையில்லா அரிசி எனகூறி மக்களை இந்த அரசு வஞ்சிக்கிறது. ஆலங்குளம் மற்றும் கடையம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு மும்முரம் காட்டும் இந்த அரசு ரேசன் கடைகளை திறப்பதில் கவனம் காட்டுவதில்லை என குற்றம் சாட்டினார். தளபதி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மக்கள் குறைகள் தீர்க்கப்படும் என்றார்.
மேலும் விவசாயிகளை தொந்தரவு செய்யும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வராதவண்ணம் வேலி அமைக்க அரசை வலியுறுத்துவேன் என்றும் கூறினார்.
You must be logged in to post a comment.