தென்காசியில் குரூப்-।। மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு; மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் தகவல்..
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி II தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.
இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி II-ல் உள்ள உதவி ஆய்வாளர் (தொழிலாளர் துறை). இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் (நிலை II) உள்ளிட்ட பதவிகளில் உள்ள 507 காலி பணியிடங்களுக்கும் மற்றும் தொகுதி IIA-ல் உள்ள தணிக்கை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர் (கூட்டுறவுத் துறை) உள்ளிட்ட பதவிகளில் 1820 காலி பணியிடங்களுக்கும் மொத்தம் 2327 காலி பணியிடங்களுக்கான குரூப்II/IIA தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு 19.07.2024 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். முதல்நிலைத் தேர்வு 14,09.2024 அன்று நடைபெறவுள்ளது. தேர்வு நடைமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் வயது வரம்பு போன்ற கூடுதல் விவரங்களை https:// www.tnpsc.gov.in என்ற இணையத் தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
TNPSC குரூப்-II/IIA தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2024 (திங்கட்கிழமை) அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து இலவச புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளன. இப்போட்டித் தேர்வுக்கான அறிமுக வகுப்பு 01.07.2024 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, கதவுஎண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 01.07.2024 அன்று காலை 10.00 மணிக்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் 13.07.2024 அன்று நடைபெறும் TNPSC குரூப்-I தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு மாநில அளவிலான முழு மாதிரி தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 02.07.2024, 05.07.2024 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்