நபிகளாரின் போதனைகள் அறவழிக்கான அறிவுரைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாக திருநாள் வாழ்த்து..
நபிகளாரின் போதனைகள் மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் தியாக திருநாள் வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம், சகோதரத்துவம், அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்! ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் அறவழிக்கான கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன. நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.