25
விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக கூறி கடந்த சில தினங்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எட்டயபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் செய்தியாளரிடம் கூறும்போது திங்கட்கிழமை மதியம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். அமைச்சர் கடம்பூர் ராஜூ 50 ஆயிரம் வாக்குகள் இலக்கு நிர்ணயிப்பதாக கூறியுள்ளார். விளாத்திகுளம் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் ஆட்டு சந்தையில் கைப்பிடித்து வாங்குகின்ற ஆடு, மாடுகள் இல்லை என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன். இது மக்களுடைய மனங்களின் இந்த நாட்டில் நல்லது செய்யக்கூடியவர்களுக்காக வழங்கப்படுகிற தீர்ப்பு.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் அனைத்துக்கு அனுமதி வழங்குவதற்காக சதுரடிக்கு ரூ.3 பேரம் பேசி வாங்கி, ரூ.2320 கோடி ஊழல் செய்வதற்கான ஆதரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் விளாத்திகுளம் தொகுதியில் வெற்றி பெற்றால் பன்னீர்செல்வத்துக்கு நீதிமன்றத்தில் சவுக்கடி கொடுப்பதற்காக எட்டயபுரம் மக்கள் தயாராக இருக்கின்றனர். இதனை ஊடகங்கள் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். ஆதாரம் இருக்கிறது.
பன்னீர் செல்வம் அதிமுகவின் கொள்கையை மீறி உள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தனது குடும்பத்தினர் யாருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் குடும்பத்தில் யாருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. தன் குடும்பத்துக்காக சுயநலத்துக்காக இருக்கிற பன்னீர்செல்வம், அவருடன் இருந்து கட்சியை வழிநடத்துபவர்களும் இந்த கட்சியை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இந்த கட்சியை யாரும் ஏமாற்ற முடியாது. விளாத்திகுளம் தொகுதி இந்த முறை வாக்கு கொடுத்தால், அதிமுக தலைமையை எட்டயபுரம் நிர்ணயம் செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் தலைமைக்கான ஒரு தேர்தல். இந்த தேர்தலில் மக்கள் சரியாக வாக்களித்தால், பொதுச்செயலாளரை மிக வேகமாக தேர்வு செய்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகாலம் இந்த கட்சியை வாழ வைப்போம், ஆட்சி பொறுப்பை ஏற்ப வைப்போம்.
எடப்பாடி ஆட்சி நடத்தியபோது, இது ஒரு ஊழல் சர்க்கார் என பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருந்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்களை அடமானம் வைத்து, எடப்பாடி அரசிடம் சென்று துணை முதல்வர் பதவி பெற்றுக்கொண்டு விஞ்ஞானி ரீதியில் இந்த ஆட்சியில் என்ன ஊழல் செய்ய முடியும் என பார்த்து, அதற்கு முன்னால் அரசாணை பிறப்பித்து தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கு சதுரடிக்கு ரூ.3 வாங்கி, என எத்தனை ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பார் என பார்த்துக்கொள்ளுங்கள்.
இதுதொடர்பாக அறிக்கை கொடுக்க பணம் கொடுத்தவர்களே தயாராக உள்ளனர். அவரை பற்றிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அவரது தரவுகள் யார் யாரிடம் பணம் கேட்டார்கள் என்பதற்கான ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் செய்த ஊழலுக்கு கூட்டு சதி இருக்கிறது என்பது விரைவில் நிர்ணயமாக போகிறது. ஆவணங்களை பத்திரிகை ஊடகங்களில் வெளியிட்டால் அதனை அழிப்பதற்கான முயற்சிகள் நடக்கும். எனவே, ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர்களுக்கான தண்டனையை எட்டயபுரம் மக்கள் பெற்றுக்கொடுப்பார்கள். தர்மயுத்தம் நடத்துகிறேன் என கூறி 6 மாத காலத்தில் அதிமுக தொண்டர்களை அடமானம் வைத்து விட்டு துணை முதல்வர் பதவி வாங்கி இந்த கட்சியையும், ஜெயலலிதாவின் ஆன்மாவையும் ஏமாற்றிய தமிழகத்தின் முதல் குற்றவாளி பன்னீர்செல்வம்.
அதிமுகவுக்கும் எனக்கும் தான் குடும்ப சண்டை. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து தூக்கி ஏறிகிற காலம் வரும். அதற்கான காலத்தை மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
தர்மன் தன் நாட்டை இழந்து, வீட்டை, சகோதரர்கள், மனைவியை இழந்து தர்மத்துக்காக 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றார். ஆனால் இவர் நாட்டில் இருக்கக்கூடிய நிலத்துக்கு சதுரடி ரூ.3 கமிஷன் வாங்குவதற்காக 6 மாதத்தில் தொண்டர்களை விற்று எடப்பாடியிடம் சென்றார். இந்த குற்றச்சாட்டுகள் முதல்வருக்கு தெரியுமா என்று விபரம் தெரியவில்லை. விரைவில் விளாத்திகுளம் தொகுதி மக்கள் சார்பில் முதல்வரிடம் நடவடிக்கை எடுக்க கோருவோம். மந்திரி சபையில் இருந்து இந்த தேர்தல் முடிந்த பின்னர் அவர் நீக்கப்பட்டால் விளாத்திகுளம் தொகுதி மக்கள் பெருமைப்படுவார்கள்.
புலனாய்வு துறையில் உள்ள எனது நண்பர்கள் பன்னீர்செல்வம் நடவடிக்கை நான்கைந்து மாதங்களாக கண்காணித்து மைக்ரோ டேப் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெரிய சறுக்கல் நடைபெற போகிறது. பாரதத்தை யார் ஆளுகிறார்களோ அவர்கள் பன்னீர்செல்வத்தை சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது. தர்மயுத்தம் நடத்தும்போது, பெரியகுளத்தில் கோயில் கட்டி இருக்க போகிறேன் என் கூறினார். ஆனால், பெரியகுளத்தில் கோயில் கட்ட முடியாது. பாளையங்கோட்டை ஏற்கனவே தயாராக இருக்கிறது.
சுயநலவாதிகளுக்காக இந்த கட்சியை விட்டுக்கொடுக்க முடியாது. சுயநலவாதிகளை அப்புறப்படுத்துவதற்கான தேர்தலாக கருதுகிறோம். இந்த தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல். இந்த தேர்தலில் தான் உண்மையாக அதிமுக விளாத்திகுளம் தொகுதியில் தொண்டர்களின் வேட்பாளர் வெற்றி பெற போகிறார் என்றார்
You must be logged in to post a comment.