தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது, தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுஉள்ளது.மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கு ஜுன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மன நிலையோடு கல்வி கற்பார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Category:
செய்திகள்
தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியுள்ளது.இதன் எதிரொலியால், தமிழகத்தில் வரும் 1, 2, 3ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, தமிழகத்தில் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து, 3ம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல், கடலோரப்பகுதிகளில் 3ம் தேதி வரை 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளில் இருந்து மக்களை காக்க வேண்டும்-பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் அறிக்கை..
by Askar
written by Askar
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் ரம்மி என்பது ஆக்டோபஸின் கரங்களைப் போல, அதை விளையாடத் தொடங்குபவர்களை சுற்றி வளைக்கக் கூடியது என்பதற்கு தினசீலனின் செயல்கள் தான் எடுத்துக்காட்டு ஆகும். மயிலாடுதுறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மியில் தினசீலன் இழந்துள்ளார். பணத்தை கடனாக கொடுத்தவர்கள், அந்த பணத்தை திரும்பக் கேட்டதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தினசீலனின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானம் பேசி தினசீலனை மீட்டுள்ளனர். அதன்பின்னர் அவரை சில மாதங்களுக்கு முன் சுவாமிமலையில் தங்கும் விடுதியில் பணியில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கும் விடுதியின் வருமானத்தை எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்துள்ளார். அதன் பிறகு மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10ம் தேதி ஐகோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு மிகவும் அரிதாக நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது தொடர்கதையாகி விட்டன. கடந்த மே 14ம் தேதி முதல் மே 29 வரையிலான 15 நாட்களில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழ்வதை தடுக்க முடியாது.
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததற்கு பிறகு கடந்த 6 மாதங்களில் மொத்தம் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் பாதி பேர், அதாவது 6 பேர் கடந்த மாதம் 29ம் தேதிக்கும், மே மாதம் 29ம் தேதிக்கும் இடைப்பட்ட ஒரு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் சுப்ரீம் கோர்ட்டில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. தமிழக அரசு இனியாவது விழித்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற வேண்டும்; அதன் மூலம் தற்கொலைகளில் இருந்து மக்களை காக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் மதுரை அப்போலோ மருத்துவர்கள் சாதனை..
மதுரை அப்போலோ மருத்துவமனை தனது பயணத்தில் தொடர்ச்சியாகப் பல வெற்றிப்படிகளைக் கடந்து வருகிறது. அதில் மற்றொரு சிறப்பம்சமாக தற்போது 50க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் மருத்துவத்துறையில் தனது நிபுணத்துவத்தையும் நிலைநாட்டியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக 50க்கும் மேற்பட்டோருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து அவர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. தென்தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையைக் கொண்டு சேர்ப்பதில் அப்போலோ மருத்துவமனை என்றும் முன்னிலை வகிப்பதையும் இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், இளங்குமரன் கூறுகையில், ”ஒவ்வொரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையிலும் ஒரு மனித உயிர்க் காப்பாற்றப்பட்டு அவரின் குடும்பத்திற்கு ஒரு புது நம்பிக்கையை அளிக்கிறது. சிகிச்சைப் பெற வரும் ஒவ்வொரு நபரையும் துல்லியமாக ஆராய்ந்து அவருக்கு ஏற்றாற்போல சிகிச்சை அளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தச் சாதனையானது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் எங்களின் நிபுணத்துவம் தொடர்ச்சியாக மேம்பட்டு வருவதை அறியலாம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று காடவர் டோனார் எனப்படும் இறந்தவரிடம் இருந்து கல்லீரல் தானம் பெறப்பட்டு செய்யப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை. மற்றொன்று வாழும் கொடையாளியிடம் தானம் பெற்று செய்யப்படும் அறுவை சிகிச்சை. பொதுவாக கல்லீரலில் இரண்டு பாகங்கள் உண்டு அதில் ஒரு பாகத்தைத் தானமாக எடுத்தாலும் அது மீண்டும் உயிர்ப்பித்து வளரக் கூடிய தன்மையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
“50க்கும் மேற்பட்ட கல்லீரல் அறுவை சிகிச்சைகள் என்பது எண்ணிக்கை சார்ந்த சாதனை என்பதைக் காட்டிலும் அது எங்களின் அதிநவீன வழிமுறைகள் மற்றும் கனிவான சேவையின் வாயிலாகத் தென் தமிழக மக்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மருத்துவ சேவையின் தரத்திற்கான எல்லையை விரிவுபடுத்துவதிலும் வருங்காலத்தில் தொடர்ச்சியாகப் பல மைல்கல்களை எட்டுவதிலும் அப்போலோ உறுதியுடன் இருக்கிறது. மேலும் தென் தமிழகத்தில மதுரை அப்போலோ மருத்துவமனை கல்லீரல் சிகிச்சைக்குப் பிரத்யேகமான மருத்துவமனை என்று சொல்லிக் கொள்வதில் நங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.” எனக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், மதுசூதனன் கூறினார். அப்போலோ மருத்துவமனையின் மதுரை மண்டல தலைமைச் செயல் இயக்குனர் நீலகண்ணன், மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் பிரவீன் ராஜன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் இளங்குமரன், மதுசூதனன், குலசேகரன் மயக்கவியல் நிபுணர், கல்லீரல் நிபுணர் குமரகுருபரன் ஆகியோருடன் குடலியல் சிகிச்சை நிபுணர் ராஜேஷ் பிரபு, மார்க்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோரும் உடனிருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் ஏழு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு; மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 07 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு; மாவட்ட எஸ்.பி அதிரடி..
தென்காசி மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த 07 நபர்கள், மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சங்கரன்கோவில் சுடலையாண்டி என்பவரின் மகன் சுரேஷ்(27) மற்றும் வல்லம் பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிகளான பெருங்கோட்டூர் பிச்சையா என்பவரின் மகன் மாரிசாமி (38), வல்லம் சந்தனகுமார் என்பவரின் மகன் இசக்கி முத்துப்பாண்டி (20), கண்ணன் என்பவரின் மகன் பிரவீன் குமார்(23), இசக்கித்துரை என்பவரின் மகன் சுபாஷ் (26), கண்ணன் என்பவரின் மகன் சந்தோஷ் (24) மற்றும் பிச்சையா என்பவரின் மகன் சந்தனகுமார் (45) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
written by Abubakker Sithik
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் பொருளாதார சிக்கல்களின் காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போகிறது. இது போன்ற மாணவிகளின் கல்லூரி கனவை நிறைவேற்றும் பொருட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் (புதுமைப்பெண்) திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்கள் கல்லுாரி படிப்பை முடிக்கும் வரை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுவருகிறது. இதுவரை தென்காசி மாவட்டத்தில் 3829 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். தற்போது இத்திட்டமானது அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, கல்லூரி நிர்வாகம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் ரூ.1000 உதவிதொகை பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட அரசு பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்த “தமிழ்ப்புதல்வன்” என்னும் திட்டம் நடப்பு நிதியாண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி தொடரும் தகுதியுடைய மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது கல்லூரியில் உள்ள புதுமைப்பெண் திட்டபொறுப்பு அலுவலர்களிடம் தங்களது விவரங்களை பதிவு செய்து இத்திட்டத்தினை பயன்படுத்தி உயர்கல்வி பயின்று முன்னேற்றமடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ.சுகந்தி ‘கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார். மேலும் மாணவி அ.சுகந்தி தெரிவிக்கையில் விவசாயிகளிடையே ஒழுங்கு முறை விற்பனைகூடம் பற்றியும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு பற்றியும் விழிப்புணர்வு இருப்பதில்லை என்றும் வழிவழியாக விவசாயிகள் பாரம்பரிய சேமிப்பு முறையினையே பின்பற்றுகிறார்கள் என்றும் ஒழுங்கமுறை விற்பனை கூடங்களில் உள்ள பல்வேறு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு அறியாத ஒன்றாகவே உள்ளது என்று கூறினார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி திருவாடானை, முதுகுளத்தூர் மற்றும் இராஜசிங்கமங்களம் ஒழுக்கமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. எட்டிவயல் குளிர்பதன சேமிப்பு கிடங்கு பற்றியும் மின்னனு தேசிய வேளாண் சந்தை திட்டம் (e-NAM) மின்னணு பரிவர்த்தனை பற்றியும் விவரிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் கிராமப்புற விவசாயிகள் கலந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001025087-large.jpg?resize=1024%2C768&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த பெண் தலைமை காவலரின் மகன்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..
written by Abubakker Sithik
யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகன்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு..
பசிபிக் ஆசியன் யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகனை பாராட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார். தாய்லாந்தில் நடைபெற்ற 3 வது பசிபிக் ஆசியன் யோகா போட்டியில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் சைலா அவர்களின் மகன் முகில்வர்ஷன் (14) என்பவர் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240529_094550_0000-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240529_090618_0000-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240529-WA0024-large.jpg?resize=1024%2C682&ssl=1)
இந்நிலையில் யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த சிறுவன் முகில் வர்ஷனை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டி மேலும் பல பதக்கங்களை வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோனேரி கிராமத்தில் பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பருத்தியைத் தாக்கும் பல்வேறு விதமான பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்தும்,பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் முக்கியத்துவம்குறித்தும் விளக்கினார்.மேலும் மாணவி தாமரைச்செல்வி தெரிவிக்கையில் இராமநாதபுரத்தில் விளையும் பணப்பயிர்களுக்குள் குறிப்பிடத்தக்க ஒன்று பருத்தி. பருத்தியை அதிகம் தாக்கும் பூச்சிகளான சிவப்புகறைப் பூச்சி,டஸ்கி பருத்தி பூச்சி, இலை சுருள் பூச்சி, சார் உறிஞ்சும் பூச்சி முதலியவற்றை கட்டுப்படுத்துவது என்பது கடினம். ஆகவே ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது அவசியம் பூச்சிதாக்கத்தினைத் தாங்கி வளரக்கூடிய ரகங்களை வளர்த்தல், பூச்சிக்கொல்லிகளுடன் விதை நேர்த்தி, பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல், கிரைசோபர்லா இறைவிழுங்கி எட்டருக்கு 1000 விடுதல், இனக்கவர்ச்சி பொறி உபயோகித்தல், வெள்ளை ஈதொல்லைக்கு மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பயன்பாடு, ஹெச். ஏ.என். பி. வி வைரஸ் வயலில் அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வகை மேலாண்மை முறைகளை கையாளும் பொழுது, பூச்சிகளின் தாக்கமும் வீரியமும் குறைந்து, அதிகமாக மகசூல்பெறலாம் என்றார். இதில் கிராமப்புற விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001019993-large.jpg?resize=1024%2C743&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திரைப்பட நடிகர் ஃபஹத் ஃபாசில் 41 வயதில் ஏடிஹெச்டி எனும் மூளை சார்ந்த மனநலப் பிரச்சனை தனக்கு கண்டறியப்பட்டிருப்பதாகக் கூற,அந்த டாபிக் வைரலாகி இருக்கிறது! டாக்டர். ஃபரூக் அப்துல்லா விரிவான விளக்கம்..
by Askar
written by Askar
திரைப்பட நடிகர் . ஃபஹத் ஃபாசில் 41 வயதில்
ஏடிஹெச்டி எனும் மூளை சார்ந்த மனநலப் பிரச்சனை தனக்கு கண்டறியப்பட்டிருப்பதாகக் கூற,
அந்த டாபிக் வைரலாகி இருக்கிறது.
ஏடிஹெச்டி ( ADHD ) என்பது
அட்டென்சன் டெஃபிசிட் ஹைப்பர் ஏக்டிவ் டிசார்டர் என்பதன் சுருக்கமாகும்.
அந்தப் பெயரின் நேரடி தமிழாக்கம்!
கவனக்குறைவுடன் கூடிய அதீத துறுதுறுப்பை உண்டாக்கும் மூளை மனநலம் சார்ந்த பிரச்சனை என்பதாகும்.
பெரும்பாலும் இந்த பிரச்சனை , குழந்தைப் பருவத்தில் கண்டறியப்படும்.
சிலருக்கு வளர் இளம் பருவத்திலும் இன்னும் சிலருக்கு ஃபஹத் கூறுவது போல வயது முதிர்ந்த நிலையிலும் கூட கண்டறியப்படலாம்.
இதில் இரண்டு வகை உண்டு!
டைப் ஏ என்பது
துறுதுறுப்பற்ற கவனக்குறைவு
( INATTENTION WITHOUT HYPERACTIVITY)
அறிகுறிகள்!
கவனக்குறைவு:
வழிமுறைகளை பின்பற்றுவதில் கவனக்குறைவு ஈடுபாடின்மை
யாருடனும் கலந்து பழகாமல் / வெட்கத்தை அதிகம் வெளிப்படுத்துவது.
எளிதாக கவனச்சிதறலுக்கு உட்படுவது.
வழிமுறைகளுக்கு ஒத்துவராத இயல்பு.
முறையாக தனது பொருட்களைப் பேணாமை.
தனது உடமை மீது கவனமின்மை.
எதைக் கூறினாலும் மெதுவாக கூறப்படுபவற்றை உட்கொள்ளல்.
டைப் பி என்பது
கவனக்குறைவற்ற துறுதுறுப்பு
( HYPERACTIVITY WITHOUT INATTENTION)
அறிகுறிகள்!
எப்போதும் அதீத துறுதுறுப்பு.
ஒரு இடத்தில் உட்காராமல் அங்கும் இங்குமாக துறுதுறுவென இருப்பது.
அதீத பேச்சு.
சத்தமாகப் பிறரிடம் பேசுதல்.
தங்களது முறைக்காக காத்திருக்காமல் குறுக்க குறுக்க அடுத்தவரை பேச விடாமல் பேசுவது.
விரைவில் சினம் கொள்வது.
இப்படியான அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் பள்ளி கல்வியிலும் கவனக்குறைவுடன் இருப்பார்கள். கூடவே அதீத துறுதுறுப்புடனோ அல்லது தொய்வாகவோ இருப்பதால்
பெற்றோர்கள் இவர்களை மருத்துவர்களிடம் காட்டி மனநல மருத்துவர்களிடம் பரிந்துரை பெற்று சிகிச்சை பெறுவார்கள்.
ஏடிஹெடி எனும் இந்த நிலைக்கு
சிறப்பான முன்னேற்றம் தரும் மருத்துவ சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
மாத்திரைகள்!
மனோதத்துவ சிகிச்சை முறைகள்
ஆற்றுதல்படுத்துதல் சிகிச்சைகள்
என நல்ல முன்னேற்றம் கண்டு நோயைக்குணப்படுத்த முடியும்.
இப்போது வயதானவர்களுக்கு வரும் ஏடிஹெடி குறித்து காண்போம்
நான் கேட்கும் பின்வரும் ஆறு கேள்விகளுக்கு உங்களின் விடை என்ன என்று சிந்தியுங்கள்
கடந்த ஆறு மாதங்களாக
உங்கள் வாழ்க்கையில் நடந்த விசயங்களில்
இந்த ஆறு கேள்விகளை ஒப்பிட்டுப் பாருங்கள்
முதல் கேள்வி!
ஒரு ப்ராஜெக்ட் செய்து முடிக்கும் போது அதன் இறுதி வடிவத்தில் அதை முடிக்கும் போது கடினமாக உணர்ந்தீர்களா?
இரண்டாவது கேள்வி!
சரியான வழிமுறையில் செய்து முடிக்க வேண்டிய விசயத்தில் , வரிசைப்படி செயலாற்றுவதில் கடினத்தன்மையை உணர்ந்தீர்களா?
மூன்றாவது கேள்வி!
நீங்கள் சந்திக்க வேண்டிய நபர்கள் அல்லது முடிக்க வேண்டிய விசயங்கள் அல்லது அப்பாய்ண்ட்மெண்ட்களை மறந்தீர்களா?
நான்காவது கேள்வி!
அதிகமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய விசயங்களை அதன் கடினத்தன்மை கருதி தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தீர்களா? அல்லது அந்த செயலை செய்யாமல் தவிர்த்தீர்களா?
ஐந்தாவது கேள்வி!
நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிலையில்
உங்கள் கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பீர்களா? கைகளை பிசைந்து கொண்டே இருப்பது.. நாற்காலியில் இங்குமங்கும் அலைந்து கொண்டே இருப்பது.. ஆகியவற்றை செய்வீர்களா?
ஆறாவது கேள்வி!
நீங்கள் அதீத துறுதுறுப்புடன் இருப்பதாகவும் / சில விசயங்களை உங்களது கட்டுப்பாட்டுக்கு மீறி செய்து விடுவதையும் உணர்கிறீர்களா?
மேற்கூறிய ஆறு கேள்விகளில் நான்குக்கு மேலான கேள்விகளுக்கு
அடிக்கடி அப்படித்தான் தோணுது
என்று நீங்கள் கூறுவீர்களானால்
நீங்களும் மனநல மருத்துவரிடம் சென்று தங்களுக்கு ஏடிஹெச்டி பிரச்சனை இருக்கிறதா? என்பதை உறுதி செய்து சிகிச்சை பெறுவது நல்லது.
முறையான மருத்துவ மனநல சிகிச்சை பெறுவதும் மூலமும்
உணவு – உடற்பயிற்சி – உறக்கம் – உள அழுத்தம் ஆகியவற்றை சரி செய்வதன் மூலமும் இந்த பிரச்சனையின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
உங்களின் மனதுக்குப் பிடிக்காத செயல்களில் ஈடுபடும் போது
கவனக்குறைவால் அடிக்கடி தப்பு செய்கிறீர்களா?
யாரேனும் பாடம் நடத்தும் போது அல்லது உங்களுடன் நேருக்கு நேர் உரையாடும் போது கூட கவனச் சிதறல் ஏற்படுகிறதா?
வீட்டில் உங்களது பொருட்களை அடிக்கடி வேறு இடங்களில் வைத்து விட்டு தேடுகிறீர்களா?
வெளிப்புற சத்தங்கள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் உங்களின் செயல்களில் குறுக்கீடு செய்கின்றனவா?
ஒரு மீட்டிங் நடக்கும் போது நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டிய சூழல் இருக்கும் போதும் அடிக்கடி நாற்காலியை விட்டு எழுந்து செல்கிறீர்களா?
எத்தனை முறை பதட்டமாகவும் அதீத துறுதுறுப்புடன் இருப்பதாக உணர்ந்தீர்கள்?
தங்களால் ஓய்வு நேரத்தில் கூட ரிலாக்சாக இருக்க முடியவில்லையா?
பொது இடங்களில் தேவைக்கும் அதிகமாக பேசுகிறீர்களா?
உரையாடலில் பிறர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கே பேசி அவரது வாக்கியங்களை நீங்கள் முடிக்கிறீர்களா?
உங்களுக்கான முறை வரும் வரை காத்திராமல் முந்திக் கொண்டு உங்களது கருத்துகளை பேசுகிறீர்களா?
அடுத்தவர் பணியில் பிசியாக இருக்கும் போது அவரது பணியில் குறுக்கீடு செய்கிறீர்களா?
மேற்சொன்ன பல கேள்விகளையும்
கேட்டு அதற்கு பதிலளித்துப் பாருங்கள்
பல கேள்விகளுக்கு ஆமா நான் இப்டி தான் பண்ணிட்டு இருக்கேன். அடிக்கடி இது தான் நடந்துட்ருக்கு என்று கருதினால்
ஏடிஹெச்டி குறித்து விழிப்புணர்வு பெற்று மனநல மருத்துவரிடம் நேரில் சென்று காட்டி
மனநலப் பிரச்சனை இருப்பதாக வரும் உறுதிப்படுத்தினால்
சிகிச்சை பெறவும்
நன்றி;
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்: குழந்தைகள் உள்பட 18 பேர் பலி- நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்..
by Askar
written by Askar
அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்: குழந்தைகள் உள்பட 18 பேர் பலி- நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்..
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை புயல் பந்தாடியது.
அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த பல கார்களை புயல் கவிழ்த்து போட்டது. மேலும் அங்குள்ள ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்கும் பணியில் இறங்கினர். அப்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே புயல் காரணமாக அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே சுமார் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவித்தனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனி அடிவாரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அகற்றம்..
by Askar
written by Askar
பழனி அடிவாரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அகற்றம்..
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கபட்டது. கிரிவலப்பாதை அடைக்கப்பட்டு கிரிவலப் பாதையில் இருந்து ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. அடிவாரம் பகுதிகளில் எந்த ஒரு ஆக்கிரமிப்பு கடைகள் இல்லாதவாறு அகற்றி வருகின்றனர்.இதே போல இன்று அருள்ஜோதி வீதி ,அய்யம்புள்ளி சாலை , தேவர் சிலை ,சரவணப் பொய்கை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் மீண்டும் வைக்கப்பட்டால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப தரப்படாது எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.இதில் வட்டாட்சியர் சக்திவேலன் டிஎஸ்பி தனஜெயன் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் அடுக்குமாடி கட்டிட பணியின்போது சாரம் விழுந்து விபத்து; நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை..
by Askar
written by Askar
மதுரையில் அடுக்குமாடி கட்டிட பணியின்போது சாரம் விழுந்து விபத்து; நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை..
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டு இருந்த இரும்பு சாரம் திடீரென பலத்த காற்று காரணமாக சரிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது.
தொடர்ந்து உயர் மின் அழுத்த கம்பியின் மீது விழுந்தது. மேலும் நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் அப்பகுதியில் இல்லாத காரணத்தினால் அசம்பாவிதம் சம்பவம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மிண்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
செய்தியாளர் வி. காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம்!-தமிழ்நாடு அரசு அறிவிப்பு..
by Askar
written by Askar
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நேற்றுவரை 82.82.702 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும் 75.87,865 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலை கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜூன் முதல் வாரம் வரை நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூன் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வைகோ உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் – துரை வைகோ அறிக்கை..
by Askar
written by Askar
மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசியில் அழைத்து வைகோ உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை வைகோவை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு வைகோ அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்கள். வைகோ மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள். சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வைகோவின் உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட அற்பத்தனமாக முயற்சிக்கிறார்கள். வைகோவுக்கு எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார். எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ் இப்பொழுது நடைபெறுகிற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார்.
தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்.
எனவே வைகோ பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள். கழகத் தோழர்கள் உள்ளிட்ட தலைவரின் மீது அன்பு கொண்ட பலர் ஆர்வ மிகுதியிலும், கவலையிலும் தலைவரை நேரில் சந்திக்க வருகிறோம் என, என்னிடம் தெரிவித்து வருகிறார்கள்.
நம்முடைய வருகையால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதால், யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று தலைவர் வைகோ இல்லம் திரும்புவார். அதன்பிறகு கழகத் தோழர்கள் அவரை சந்திக்கலாம். அதுவரை, நேரில் வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
வைகோ மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், தலைவர் வைகோவின் சுவாச காற்றாக விளங்கும் மறுமலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் என் நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டதில் கார் பழுது பார்க்கும் கடை தீப்பிடித்து எரிந்து நாசம். ,
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டல்பட்டி கிராமத்தில் சங்கம்பட்டியைச் சேர்ந்த மலைராஜன் என்பவர் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில் நள்ளிரவு மின்சாரம் வந்த நிலையில் பவர் அதிகம் வந்ததால் கடையில் இருக்கும் வயர் ஸ்டார்ட் ஆகி கடையில் தீ பரவியது.இதில் கடைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.காலையில் வழக்கம் போல் கடையைத்திறந்த மலைராஜன் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானதைக்கண்டு திடுக்கிட்டார்
.இது குறித்து உசிலம்பட்டி காவல்துறைக்கும் மின் வாரியத்திலும் புகார் அளித்துள்ளார்.மேலும் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்று உசிலம்பட்டி பகுதியில் மின் வோல்டேஜ் பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படும் அவல நிலை உள்ளதாகவும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மலை ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உசிலை மோகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்..
by Askar
written by Askar
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்..
நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சரணிதா (32). கடந்த 2016 ஆம் ஆண்டு டாக்டர் உதயகுமார் என்பவரிடம் திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் கோயம்புத்தூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சரணிதா மேற்படிப்பு (எம்.டி) இறுதி ஆண்டை முடித்து 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருந்து வந்தார். பயிற்சிக்காக வந்த சரணிதா அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வந்தார்.
இந்த நிலையில், சரணிதா தனது கணவரிடம் பேசிவிட்டு காலை டிபன் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். உதயகுமார் தனது மனைவிக்கு மதியம் போன் செய்துள்ளார். சரணிதா போன் எடுக்காததால் பெண்கள் விடுதியில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்யும் கமலா என்பவரை அழைத்து அறைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அறைக்குள் இருந்த சரணிதாவிடம் இருந்து பதில் ஏதும் வராததால் இது குறித்து காவல் கட்டுப்பாட்டுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டாக்டர் சரணிதா லேப்டாப் சார்ஜரை பிடித்தப்படி இறந்து கிடந்தார்.
அதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரணிதா லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது சார்ஜர் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உக்கடம் மீன் மார்க்கெட்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு கொள்ளையனுக்கு வலைவீச்சு..
by Askar
written by Askar
உக்கடம் மீன் மார்க்கெட்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு கொள்ளையனுக்கு வலைவீச்சு..
கோவை உக்கடம் அருகே உள்ள லாரி பேட்டையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் உள்ளது.
இந்த மீன் மார்க்கெட்டிற்கு கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மீன்கள் வாங்க வருவது வழக்கம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை முதல் மதியம் வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மீன் மார்க்கெட்டிற்கு வருவர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் ரஞ்சிதம் என்பவர் மார்க்கெட்டிற்கு வரும்போது, மர்ம நபர் ஒருவர் திட்டமிட்டபடி அவரது கழுத்தில் இருந்து சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தஞ்சையில் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் வழங்கும் விழா !
by Baker BAker
written by Baker BAker
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் திருச்சி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் , திருச்சி கே கே நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை அலுவலகம் , கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் முதல்கட்டமாக தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன . இதற்கான தொடக்க விழா திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது . இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, ரிப்பன் வெட்டி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் . திருச்சி மாநகரில் மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலர்கள் , மாநகர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் , மாநகர காவல் ஆணையகரத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் , ஆயுதப்படை வளாகத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் , மகளிர் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பெண்கள் ஆகியோரின் நலன் கருதி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் பெண்கள் ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் , 5 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தி சானிடரி நாப்கின் பெற்றுக்கொள்ளலாம் என்றும் காவல் ஆணையர் காமினி தெரிவித்தார் . இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில் பணிபுரியும் மகளிருக்கு ஏற்படும் மாத சுழற்சியின் போது அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை ஒவ்வொரு பிரிவாக பொருத்தி வருகிறோம் . ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் , மாவட்ட காவல் அலுவலகம் , ஆயுதப்படை வளாகம் , போக்குவரத்து ஒழுங்குபிரிவு அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் , சென்னை திருவல்லிக்கேணியில் அரசு மகளிர் பள்ளியிலும் இந்த இயந்திரங்களை பொருத்தியுள்ளோம் . தற்போது திருச்சியில் முதல்கட்டமாக நாகு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன , வரவேற்ப்பை பொருத்து அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த இயந்திரம் விரைவில் பொருத்தப்படும் என்றனர் . திருச்சி மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார் , மாநகர ஆயுதப்படை ஆய்வாளர் எம்,ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர் . இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையைச் சார்பாக 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தவும் உயிர் காக்கும் முதலுதவி பற்றியும் விழிப்புணர்வை. திடீர் குழு பிளாஸ் மாப் நடனமாடி விளக்கமளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை கிளீன் தஞ்சை இயக்கத்தின் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல் தொடங்கி வைத்தார். மாலையில் பொது மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர். இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர ஊர்தி நிபுணர்களுக்கு பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழுடன் மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவ சேவை வாரத்தைக் கொண்டாடும் வகையில் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு முதலுதவி உபகரணங்கள் மற்றும் கையேடு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு தஞ்சை மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குனர் டாக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கான பயிற்சி மற்றும் ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவணவேல் செய்திருந்தார். மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் பிரவீன் மற்றும் மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர். அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர் ஆசிக் மீரான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
You must be logged in to post a comment.