இராமநாதபுரம், நவ.3 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராமேஸ்வரம் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தார். இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 64 மீனவர்கள், 10 விசைப்படகுகளை மீட்டு தரக்கோரி உண்ணாவிரதம், ரயில் மறியல் போராட்டத்திற்கு மீனவர்கள் இன்று (நவ.3) அழைப்பு விடுத்திருந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்குப்பின்னர் கலெக்டர் கூறுகையில், மீனவர்களின் பிரச்னை குறித்து , மத்திய அரசிற்கு மாநில அரசு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நவ.8 அன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் இலங்கை கடற்படை பிடித்த 64 மீனவர்கள், விசைப்படகுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மீட்டு தருவதில் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக உண்ணாவிரதம், ரயில் மறியல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கவும், மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் பொழுது கடலோர காவல் துறை ரோந்து படகுகள் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யவும், இலங்கை கடற்படை பிடித்துச் சென்று நல்ல நிலையில் உள்ள படகுகளை மீட்டு கொண்டு வர அரசுக்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியை ஏற்று ரயில் மறியல் போராட்டத்தை தள்ளி வைப்பதாக ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் ராமேஸ்வரம் காவல் துணைக்கண்காணிப்பாளர் உமா தேவி, மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.