தென்காசி வடக்கு மாசி வீதி குடிநீர் தொட்டியினை நகராட்சி நிர்வாகம் மாற்றியமைக்க கூடாது; நகராட்சி துணைத் தலைவர் அனுப்பிய பரபரப்பு மனு..
தென்காசி வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியினை நகராட்சி நிர்வாகம் மாற்றியமைக்க கூடாது என தென்காசி நகராட்சி துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அரசு முதன்மை செயலர் D.கார்த்திகேயன் IAS, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகம் சென்னை, மாவட்ட ஆட்சியர் தென்காசி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், திருநெல்வேலி ஆகியோருக்கு தென்காசி நகராட்சி துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா அனுப்பியுள்ள மனுவில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளையும், குறைகளையும் பரிசீலித்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவே பொதுமக்கள் எங்களை வாக்களித்து நிர்வாக பொறுப்புகளுக்கு அமர்த்தியுள்ளனர்.
அத்தகைய பொதுமக்களின் கோரிக்கைகளில் ஒன்றான வடக்கு மாசி வீதி தென்காசி நகரில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியினை தனிநபர் வருமான வசதிக்காக நகராட்சி நிர்வாகம் மாற்றியமைக்க கூடாது என்பதாகும். பொது மக்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனை மனு எனக்கும் வரப்பெற்றேன். இது விசயமாக நகராட்சி அலுவலர்களிடம் முறையாக பேசி பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் தொட்டி விசயத்தில் முடிவெடுங்கள் என பல முறை சொல்லியும் செவி சாய்க்காமல் கட்டுமான பணியினை தொடங்கி நடத்தி வருவதால் தாங்கள் ஆய்வு செய்து தவறுகள் நடக்கா வண்ணம் தடுத்திட வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்