புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக உறுதிப்படுத்த வேண்டும். கிராமப்புற அஞ்சல் ஊழியர் களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல் படுத்தி, அரசு ஊழியராக அங்கீகாரம் வழங்க வேண்டும். எழுத்தர், தபால்காரர், நான்காம் பிரிவு பதவிகளில் உள்ள அனைத்து காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். புதிய தொழில்நுட்பத்தில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். 2015-ல் நடந்த சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும். காசுவல் ஊழியர்களுக்கான புதிய ஊதியத்தை வழங்க வேண்டும். அஞ்சல் பணியில் தனியார்மயம், கார்ப்பரேட் மயம் மற்றும் வெளி பணிகளை கைவிட வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி உயர்த்தப்பட்ட தபால்காரர், மெயில் கார்ட் பதவிகளுக்கு உயர்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், 3-ம் பிரிவு, தபால்காரர் மற்றும் 4-ம் பிரிவு, கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. அஞ்சலக 3-ம் பிரிவு கோட்ட செயலாளர் அ.அருள்ராஜன், 4-ம் பிரிவு கோட்ட செயலாளர் சி.பெரியசாமி, கிராமப்புற ஊழியர் சங்க கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், 4-ம் பிரிவு மாநில செயலாளர் ஜி.கண்ணன், 4-ம் பிரிவு கிளைச்செயலாளர் பி.கோவிந்தன், கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ்.ராமராஜ், 4-ம் பிரிவு துணைச் செயலாளர் எஸ்.சிவசங்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
You must be logged in to post a comment.