நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய நபர்! அதிரடியாக கைது செய்த போலீசார்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பிள்ளையார் நத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
பிள்ளையார் நத்தம் கிராமத்தை சேர்ந்த குகன் என்பவரை விஏஓ ராஜ்குமார் ஒரு நிலம் சம்பந்தமாக விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜ்குமார் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது அலுவல் சம்பந்தமாக வந்துள்ளார். பின்னர் தனது சக ஊழியர்களோடு பேசிக்கொண்டு இருந்த போது குகன் என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து விஏஓ ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் கொடுத்த நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத் குகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டார். அதன் பின்னர் வழக்கு பதிவு செய்து நிலக்கோட்டை போலிசார் குகனை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.