நிலக்கோட்டை அருகே புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேக்கம்! நோய் பரவும் அபாயம்! எஸ்டிபிஐ பரபரப்பு குற்றச்சாட்டு..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வழியில்லாமல் தேக்கம் அடைந்து பல வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதனால் சிலர் நோய் வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இம்ரான் என்பவரின் குடும்பமே சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தக்பீர் அலி கூறுகையில்;
கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை முக்கியமாக சாக்கடை நீர் செல்வதற்கு வழியில்லாமல் வீடுகள் முன்பு தேங்கி நிற்பதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என பலரும் நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேங்கி கிடக்கும் கழிவுநீரால் ஊர் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பதில் இல்லை. புதூர் மக்களை அரசும், அதிகாரிகளும் புறக்கணிக்கின்றனரோ என எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தினம் தோறும் குறைந்தது நான்கு முறையாவது கோட்டூர் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜ் இவ்வழியாக தான் சென்று வருகிறார் அவரும் இந்த பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை. கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் துப்புரவு பணியாளர்கள் செல்கின்றனர் ஆனால் புதூருக்கு மட்டும் வருவதே இல்லை.
மாவட்ட நிர்வாகமும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் இந்த ஊருக்கு முறையான சாக்கடை வசதிகளை செய்து தரவேண்டும் வாரத்திற்கு இரண்டு முறையாவது துப்பரவு பணியாளர்கள் வந்து சுத்தம் செய்து ஊர் மக்களை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் கிராம மக்களை ஒன்று திரட்டி நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று கூறினார். இந்நிகழ்வில் நிலக்கோட்டை நகர தலைவர் சபீன், கிளை தலைவர் மாசித், முபாரக், ஷகீத், யாத் அலி, ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.