மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் நாகப்பட்டிணம் மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதனை அஜோய் பவனில் வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்ததாவது..
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு வீழ்த்தப்பட வேண்டும். பா.ஜ.க வீழ்த்தப்படவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் வீழ்ந்து சர்வாதிகாரம் தலைதூக்கும். கூட்டாட்சியை, மதசார்பின்மையை காப்பாற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க நிச்சயமாக வீழ்த்தப்பட வேண்டும். தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கில் கச்சத்தீவு பிரச்சனையை தற்போது பிரதமர் மோடி எழுப்புகிறார். கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்களுக்காக பிரதமர் மோடி என்ன செய்தார்.?
தமிழகம் பெரியார் மண், சமூக நீதி மண் அங்கே மதவாதத்துக்கு இடமில்லை. இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டும்” என டி.ராஜா தெரிவித்தார்.
You must be logged in to post a comment.