பிரதம மந்திரியின் தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான முக்கிய தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது குறித்த ஆட்சியரின் செய்திக்குறிப்பில், இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்திற்காக 29.09.2023 அன்று நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்தப்படவிருந்த YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் மத்திய அரசால் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேற்படி எழுத்துத் தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித் தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https: //scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http: //socialjustice.gov.in) தொடர்ந்து கவனித்து கல்வி உதவித் தொகை பயன்களைப் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.