தென்காசி மாவட்டத்தில் போலிபத்திரம்,போலி ஆதார்கார்டு மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் 3.67 ஏக்கர் நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை கிராமத்தைச் சேர்ந்த புகார் தாரருக்கு பாத்தியப்பட்ட சுமார் 3.67 ஏக்கர் நிலத்தை எதிரிகள் ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆதார் அட்டைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்தும் போலி பத்திரபதிவு செய்து மோசடி செய்துள்ளது சம்பந்தமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கினை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் சந்திசெல்வி விசாரணை செய்து மேற்படி வழக்கில் ஆள்மாறாட்ட நபர்களை ஏற்பாடு செய்த திருநெல்வேலி மாவட்டம், கூனியூர், திருவள்ளுவர் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவரை கடந்த 18.04.2022-ம் தேதி கைது செய்தும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய போலி ஆதார் அட்டைகளை தயார் செய்த கல்லிடைக்குறிச்சியில் மாருதி ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் 51/1 ரயில்வே லைன் தெருவைச் சேர்ந்த பால்ச்சாமி மகன் சுப்பிரமணியன் என்பவரையும், ஜெயராஜ் என்பவரின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்த பத்தமடை, அம்பேத்கர் நகர், 6 – வது தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் சுதந்திரநாதன் என்பவரையும் கடந்த 29.4.2022-ம் தேதி கைது செய்தும், இவ்வழக்கில் குற்ற சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தூத்துக்குடி, செயின்ட் மேரீஸ் காலனி, 4 வது தெரு, சந்தனராஜ் மகன் மகாராஜா என்பவரை கடந்த 17.05.2022-ம் தேதி கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேற்படி இந்த குற்ற செயலுக்கு மகாராஜன், ராமச்சந்திரன், சுப்பிரமணியனுடன் கல்லிடைகுறிச்சி வண்ணார்க்குடித் தெருவைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் இளையராஜா என்பவரும் உடந்தையாக இருந்து போலியான ஆதார் அட்டைகளை தயார் செய்தும் போலியான ஆள்மாறாட்ட நபர்களை ஏற்பாடு செய்தும் மோசடி செய்துள்ள விபரம் தெரிய வந்ததது. மகாராஜன், இளையராஜா ராமச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் இடம் விற்று தருவதாக கூறி மக்களிடம் அவர்களுடைய இடத்தின் அசல் அல்லது நகல் பத்திரங்கள், பட்டா, வில்லங்க சான்றிதழ் மற்றும் ஆதார்கார்டு ஆகியற்றை பெற்று அவர்களுக்கே தெரியாமல் போலியான ஆதார்கார்டுகள் மற்றும் ஆள்மாறாட்ட நபர்களை ஏற்பாடு செய்து மோசடியாக பத்திரபதிவு செய்து அதை விற்பனை செய்து லாபமடைந்து மோசடி செய்து வருகிறார்கள். மேற்படி வழக்கில் எதிரிகளிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதே நபர்களுடன் மேலும் பலர் சேர்ந்து வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சங்களை ஏமாற்றி பெற்றுக் கொண்டு Bio Data மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதார் கார்டுகளை வாங்கிக் கொண்டு நேர்காணல் அழைத்து செல்வது போல் சென்னைக்கு அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வெளியில் வைத்து Interview நடத்தி வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து வருகின்றனர். மேற்படி நபர்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இது போன்று வேலை வாங்கித் தருவதாகவும், இடத்தை விற்று தருவதாகவும் கூறி மோசடி செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மக்கள் குறை தீர்க்கும் தொலைபேசி எண்ணான 9385678039 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிய படுத்தவும். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவில் கைது செய்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் சந்திசெல்வி மற்றும் உதவியாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவலர்களுக்கும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.