கலைஞரின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி “கலைஞர் தமிழ்” என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜூன் மாதம் நெல்லையில் நடைபெறுகிறது. இதற்கான ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக கவிஞர் பேரா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மேனாள் முதல்வர் செம்மொழி வேந்தர் டாக்டர் கலைஞரின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி நெல்லையில் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பாக கலைஞர் தமிழ் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் தொடர்பாக பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனரும், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளருமான கவிஞர் பேரா என்ற பே.இராஜேந்திரன் தெரிவித்திருப்பதாவது: “மேனாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செம்மொழி வேந்தர் டாக்டர் கலைஞரின் 99-ஆவது பிறந்த நாளான ஜூன் மாதம் முதல் வாரத்தில் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பாக நெல்லையில் “கலைஞர் தமிழ்” என்ற பொருண்மையில் முழு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்ச்சான்றோர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம். கலைஞரும் திருக்குறளும், கலைஞரும் சங்கத்தமிழும், கலைஞரும் தொல்காப்பியமும், கலைஞரும் திரைத் தமிழும், கலைஞரும் இதழியல் தமிழும் போன்ற தலைப்புகளில் 5-பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகளை தமிழில் பிழையின்றித் தட்டச்சு செய்து யூனிகோட் அல்லது பாமினி எழுத்துருவில் வேர்ட் (WORD) டாக்குமெண்டாக மட்டுமே [email protected] என்ற இ மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் 20.05.2022-க்குள் வந்து சேர வேண்டும். நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ISBN எண்ணுடன் ஆய்வுக் கோவையாக வெளியிடப்படும். கருத்தரங்கின்போது ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளை அமர்வுகளில் கலந்து கொண்டு வாசிக்க வேண்டும். கருத்தரங்க நிறைவில் சிறப்பு விருந்தினர்களால் கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்படும். இவ்வாறு பொதிகைத் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் கவிஞர் பே.இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.