தென்காசியில் 6 கிலோ எடை கொண்ட வயிற்று கட்டியை அகற்றி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் வயிற்று கட்டியை அகற்றிய மருத்துவக் குழுவினர்கள் அனைவரையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் வெகுவாக பாராட்டினர். திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சம்பன்குளத்தில் வசித்து வருபவர் 39 வயதான பெண் சயீது மீராள். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஒரு மாதமாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு தனியார் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடையம் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் அவரை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு வந்த பெண்ணுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வயிற்றில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஸ்கேன் செய்ததில் வயிறு முழுவதும் கட்டி ஆக்கிரமித்திருப்பதை கண்டறிந்தனர். மேலும் புற்று நோய்க் கட்டிக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. மகப்பேறு மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. நோயாளியின் சர்க்கரை அளவு குறைக்கபட்டது. பின்னர் அவருக்கு பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை 13.04.2022 அன்று மேற்கொள்ளப்பட்டது. மயக்க மருத்துவர் சுரேஷ் மில்லர், அறுவை சிகிச்சை மருத்துவர் சொர்ணலதா ஆகியோர் முன்னிலையில் மருத்துவர் கார்த்திக் மற்றும் மருத்துவர் ஜெரின் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் கர்ப்பப்பை அருகே இருந்த சுமார் 6 கிலோ அளவிலான கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி வயிற்று வலி நீங்கி நலமுடன் உள்ளார். நோயாளி பயன்பெறும் வகையில் சிறப்பாக பணியாற்றிய நுண் கதிர் துறை சிறப்பு மருத்துவர்கள் மரு.ராமர், மரு. ஷமீமா, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் குழு, மயக்க மருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு, அறுவை சிகிச்சை செவிலியர் செல்வி, அறுவை அரங்கு தொழில் நுட்பவியலாளர் சதீஷ் மற்றும் இதர மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு. ராஜேஷ் ஆகியோர் வெகுவாக பாராட்டினர். தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் உயர்தர அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது. இதன் மூலம் தென்காசி மாவட்ட மக்கள் இந்த வசதியை அதிகமான அளவில் பயன்படுத்தி பயன்பெறுமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.