மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்ற விழாவில்,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், ”கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக 486 பயனாளிகளுக்கு ரூ.59.75 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.விழாவிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர், தலைமை வகித்தார்.மாநகராட்சி மேயர்இந்திராணி பொன்வசந்த், முன்னிலை வகித்தார்.இவ்விழாவில்,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசு, ஆதரவற்றோர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், வாய்ப்புகள் குறைந்தோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் மனிதநேயத்துடன் பல்வேறு அரசு திட்டங்களையும், பாதுகாப்பு சட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக, சமூக நீதி, மகளிர் மேம்பாடு, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் நடப்பாண்டிற்கான வரவு – செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சமுதாய பற்று, பொதுமக்கள் மீது கொண்ட பற்றுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள, முற்றிலும் ”திராவிட மாடல்” பட்ஜெட். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கு உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாகபெயரளவில் மட்டுமே திட்டமாக இருந்து வந்துள்ளது. அதனை, நிர்வாக ரீதியாக சீர்செய்து தொடர்ந்து செயல்படுத்துவது சிரமமான காரியமாகும். மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண் கல்வியை ஊக்குவித்திடும் வகையில் இதனை கல்வி உதவித்தொகை திட்டமாக நடைமுறைப்படுத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும். கல்வி வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேறுகின்ற சமுதாயமே அனைத்து நிலைகளிலும் உயர்ந்த சமுதாயமாக அமையும் என, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.முன்னதாக,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை மதுரை மாவட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள 6 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாவட்டத்தில், ஏற்கனவே 38 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தம் 44 எண்ணிக்கை 108 ஆம்புலன்ஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல் படுத்தப்பட்டுள்ளன.இவ்விழாவில், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் .சுகி.பிரேமலதா , மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.வெங்கடாசலம் , சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சௌந்தர்யா , 108 ஆம்புலன்ஸ் கிட்ட மண்டல மேலாளர் ஆர்.பிரசாத் உட்பட மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.