மதுரையை சேர்ந்த ஆத்மராவ் மகள் அம்ரிதாவுக்கும் திருச்சியை சேர்ந்த பாலகுமாருக்கும் இன்று காலை மதுரை பாலரங்காபுரம் இதில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது.இத்திருமணத்திற்காக இவர்கள் கொடுத்த அழைப்பிதழில், ‘அன்புடையீர், கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வழங்கும் மொய்ப்பணம், அன்பு இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது உறவினர், நண்பர்களை ஆச்சரியப்படுத்தியது.தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் மொய்யை குறி வைத்தே நடத்தப்படுகிறது.இச்சூழலில் மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.திருமண விழாவுக்கு நாமும் சென்றோம். மொய் எழுதும் மேஜை அருகே காகித உறைகளையும் பேனாவும் வைத்திருந்தார்கள். மொய் வைக்க நினைபவர்கள் தங்கள் பெயரை எழுதி தொகையை உறைக்குள் வைத்து அருகிளுள்ள பானைக்குள் போட்டு சென்றார்கள். யார் எவ்வளவு பணம் என்பதையும் குறிப்பிடவில்லை. அவர்கள் வைத்த மொய்யை நோட்டிலும் எழுதவில்லை.இதுகுறித்து மணமகளின் தந்தை ஆத்மராவிடம் பேசினோம், “என் மகள் திருமணத்துக்கு வர்ற மொய்ப்பணத்தை அப்படியே ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுக்கனும்னு முடிவு பண்ணேன். குடும்ப உறுப்பினர்கள் முதல்ல இதுக்கு ஒத்துக்கல. இத நான் பப்பளிசிட்டிக்காக பண்ணல, மன திருப்திக்காகவும் இதைப்பார்த்து இன்னும் பல பேர் ஆதரவற்றோர்களுக்கு உதவ முன் வரணும் என்கிற எண்ணத்தாலும்தான். எவ்வளவு மொய்ப்பணம் வந்தாலும் அதை மொத்தமா கொடுக்கப் போறோம்.” என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.