மலிவான விலையில் பொருள் தருவதாக வாட்ஸப் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம் காவல் துறையின் உதவியுடன் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதுமனை பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவர் பூஜை பொருட்களை ஹோல்சேல் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பூஜை பொருட்களை மலிவான விலையில் பெறுவதற்கான Google Play Store ல் ஓர் Business App அவரது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதில் பூஜை பொருட்கள் தொடர்சியாக தேடி வந்துள்ளார். பின்பு அவரது WhatsApp க்கு தெரியாத எண்ணிலிருந்து அவர் தேடிய 30 ஆயிரம் மதிப்பிலான பூஜை பொருளை ரூபாய் 15 ஆயிரத்திற்கு தருவதாக கூறி முன்பணம் ரூ 5,000 கட்டுமாறு கூறியுள்ளனர். கணேசன் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ரூ 5 ஆயிரம் பணத்தை Google Pay ல் (27.01.2022) அன்று அனுப்பி உள்ளார். சிறிது நாட்களுக்கு பிறகு தான் அவர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டார் என தெரியவந்தது. இது குறித்து கணேசன் (18.02.2022) அன்று தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தலைமையில், காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி மற்றும் உதவி ஆய்வாளர் (தொலைத்தொடர்பு) செண்பக பிரியா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை தொடர்ந்து மேற்படி பணம் மீட்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் முன்னிலையில் தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.