எங்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பிஸ்கட் இரண்டே நாளில் முழுவதும் தீர்ந்து விடும். அதன் பின்னர் உணவு கிடைக்காமல் போய்விடும் சூழ்நிலை உள்ளது. எனவே அரசாங்கத்திடம் பேசி எங்களை அழைத்துச் செல்லுங்கள் என உக்ரைனில் சிக்கித்தவிக்கும் கடையநல்லூர் பகுதி மாணவ மாணவிகள் பெற்றோருக்கு கண்ணீர் மல்க வீடியோ எடுத்து அனுப்பியுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை காதர் முகையதீன் குத்பா பள்ளிவாசல் தெருவில் குடியிருக்கும் ஹமீது பாதுஷா என்பவரது மகன் சாகுல்கமீது , கடையநல்லூர் நடு அய்யாபுரம் தெருவைச் சேர்ந்த அக்பர்அலி மகன் அப்துல் அஜீம், அட்டை குளம் தெருவைச் சேர்ந்த அஹ்மது அலீ -ஜுகைரா தம்பதியர் மகள் சல்வா அப்ரீன், நடு அய்யாபுரம் தெருவைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் ஜியாத், அதே தெருவைச் சேர்ந்த அமீனுத்தீன் மகன் அப்துர் ரஹ்மான், நடு அய்யாபுரம் தெருவைச் சேர்ந்த முகமது கனி மகன் முகம்மது நதீம், அட்டை குளம் சின்ன தெருவை சேர்ந்த சேக் உதுமான் மகன் கன்ஸுல்லாஹ், ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த சேக்உதுமான் மகன் அனஸ்,நத்கர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செரீப் மகன் ஆசாத் , புளியங்குடி வலையர் 6-வது தெருவில் குடியிருக்கும் கோதரி மகன் அப்துல்லாஹ் உட்பட 10 மாணவர்கள் உக்ரைனில் கார்கிவ் தேசிய மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். அங்கு நடந்து வரும் போர் சூழல் காரணமாக வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு மிக அருகிலேயே குண்டு மழை பொழிவதாக அச்சத்துடன் கூறுகின்றனர். “எங்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பிஸ்கட் இரண்டே நாளில் முழுவதும் தீர்ந்து விடும். அதன் பின்னர் உணவு கிடைக்காமல் போய்விடும் சூழ்நிலை உள்ளது. எனவே அரசாங்கத்திடம் பேசி எங்களை அழைத்துச் செல்லுங்கள் என உக்ரைனில் சிக்கித் தவிக்கும் கடையநல்லூர் பகுதி மாணவ மாணவிகளின் அழுகுரல் ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். உக்ரைன் போர்ச் சூழலில் சிக்கித் தவிக்கும் தங்களின் பிள்ளைகளை மீட்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையநல்லூர் பகுதியை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி சமூக செயல்பாட்டாளர்கள் குறிச்சி சுலைமான் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.