நெல்லை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மரபு சார்ந்த வரலாற்று பயணம் மேற்கொண்டு பழங்கால வரலாற்று தொன்மைகளை அறிந்து கொண்டனர். இந்த பயணத்தில் வரலாற்று தொன்மைகள், அதன் முக்கியத்துவம் குறித்தும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி கல்லூரி மாணவிகளிடம் விளக்கி கூறினார். திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும்திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்க கல்லூரி தமிழ்த்துறையும், இணைந்து மரபுசார் பயணம் மேற்கொண்டனர். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்களை பார்வையிட்டனர். அரும் பொருள்களை பாதுகாக்கும் முறை பற்றியும், கற்சிற்பங்களின் தன்மை அவற்றை பாதுகாக்கும் முறை பற்றியும் காப்பாட்சியர் மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டனர். அதன் பின் மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியம் அமைக்கும் பணிக்காக நடந்து வரும் அகழாய்வு பணியினை கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். இவர்களுக்கு ஆய்வு மாணவர் அருண் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், அதன்காலங்கள் குறித்தும் விளக்கமளித்தார். தொடர்ந்து வல்லநாடு அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைககு சென்றனர். மருதூர் அணை மிக நீளமான அணைக்கட்டு சுமார் 4 ஆயிரம் அடி நீளம் கொண்டது. பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதால் இதனை பாம்பணை என்றும் கூறுவார்கள். அணைக்கட்டினை கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். மாணவர்களுக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி மற்றும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் விளக்கமளித்தனர்.அதன் பின்னர் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சான்றிதழ்களை கிராம நிர்வாக அதிகாரி கலியாவூர் முத்து குமார், முனைவர் கந்தசுப்பு, காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் வழங்கினர். அதன் பின் மரபு சார் பயணத்தின் அனுபவத்தினை மாணவ மாணவிகள் பகிர்ந்து கொண்டனர். இந்த மரபு சார் பயணத்தில் தெட்சண மாற நாடார் சங்க கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கிரிஜா, தமிழ்த்துறை பேராசிரியர்கள் முருகவேல், சோனா கிறிஸ்டி, முனைவர் சவரிராயம்மாள், பால்மோகன், சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.