இந்திய தேசத்தின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தில்லையாடி வள்ளியம்மை மற்றும் கஸ்தூரிபாய் காந்தி ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது.இந்த கண்காட்சியினை நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி 22.02.2022 மாலை துவக்கி வைத்தார். இந்த புகைப்பட கண்காட்சியில் தில்லையாடி வள்ளியம்மையின் அரிய புகைப்படங்கள், அவரின் நினைவு சின்னம் போன்ற படங்களும் மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்தூரிபாய் அவர்களின் அரிய புகைப்படங்களும் இவர்களுக்காக அரசு வெளியிட்ட தபால் தலைகள் போன்ற ஏராளமான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் இந்திய விடுதலைப் போரில் தில்லையாடி வள்ளியம்மையின் பங்களிப்பு மற்றும் கஸ்தூரிபாய் காந்தி அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை பற்றி மாணவ மாணவிகளிடம் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி எடுத்துரைத்து வருகிறார். இக் கண்காட்சியை ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர். பிப்.22 முதல் துவங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காட்சியினை மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.