Home செய்திகள்உலக செய்திகள் இயற்பியல் சரித்திரத்தில் முக்கிமான இடிதாங்கியைக் கண்டுபிடித்த அமெரிக்க அறிவியலாளர், பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1706).

இயற்பியல் சரித்திரத்தில் முக்கிமான இடிதாங்கியைக் கண்டுபிடித்த அமெரிக்க அறிவியலாளர், பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1706).

by mohan

பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin) ஜனவரி 17, 1706ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தாயரித்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் குடும்ப ஏழ்மையின் காரணமாக பிராங்கிளினை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்க்ளின் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார். பிராங்கிளினுக்கு இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் ஈடுபாடு இருந்தது. அந்த அவருடைய பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது.

வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துத் தீர்த்து ஆனந்தம் அடைவார். நிறைய வாசித்ததால் எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது. பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா சென்றார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க இதழ்களில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. 1720 ஆம் ஆண்டு பென்சில்வேனியா கெசட் (Pennsylvania Gazette) என்ற இதழை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் பிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து புவர் ரிச்சர்ட்ஸ் அல்மனாக் (Poor Richard’s Almanack) என்ற இதழைத் தொடங்கினார். மிகவும் மாறுபட்ட பாணியில் வெளிவந்த அந்த இதழ்தான் அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது.

அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்கு செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். ஆரம்பத்தில் புறக்கனிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்தவர் மின்னலில் கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதை பட்டம் ஆய்வின் மூலம் நிரூபித்தார்.

மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அனியும் ஒரே கண்ணாடியான வெள்ளெழுத்துக் கண்ணாடி (bifocal lens) பிராங்கினின் கண்டுபிடிப்பாகும். தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம். அறிவியல் துறையில் பெரிய பங்களிப்பைச் செய்த அவர் காகிதப் பணத்தின் இன்றியமையாமையை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார். சந்தா முறையில்(subscription) நூல்களை வாங்கி படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தார். பிலடெல்பியாவின் தபால் துறையின் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார்.

1730ம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது. இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழகம் 1749ம் ஆண்டு அவர் நிறுவியதுதான். அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் பிராங்கிளின். பிராங்கிளின் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது அரசு. அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார். இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் அரசியலறிவைப் பயன்படுத்தி பிரான்சின் உதவியைப் பெற்றார். அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த பிரான்சும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது.

அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1789ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் பிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது. பெஞ்சமின் பிராங்கிளின் உதிர்த்த பல பொன்மொழிகளை இன்றும் பல பேச்சாளர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்.

இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர் பிராங்கிளின். சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் பிராங்கிளினின் படம் இடம்பெற்றிருந்தது. இடிதாங்கியைக் கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்கிளின் ஏப்ரல் 17,1790ல் தனது 84வது அகவையில் பென்சில்வேனியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!