Home செய்திகள்உலக செய்திகள் முதலில் மின்னஞ்சல் (MAIL) என்பதைக் கண்டுபிடித்த, மின்னஞ்சலின் தந்தை தமிழரின் பெருமைக்குரியவர் சிவா ஐயாதுரை பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2, 1963).

முதலில் மின்னஞ்சல் (MAIL) என்பதைக் கண்டுபிடித்த, மின்னஞ்சலின் தந்தை தமிழரின் பெருமைக்குரியவர் சிவா ஐயாதுரை பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2, 1963).

by mohan

வி.ஏ.சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) டிசம்பர் 2, 1963ல் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். தனக்கு அகவை 7 இருக்கும் பொழுது தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் படங்களுக்கு இயக்கமூட்டல் (அசைபடமாக்கல் animation) துறையில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் எ.ஐ.டி-யில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவில் சென்று படிக்க, 2007-2008 ஆம் ஆண்டுக்கான புல்பிரைட்டு மாணவர் படிப்புதவி விருதைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு இவர் உயிரியப் பொறியியல் (biological engineering) துறையில் எம். ஐ. டி யில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார்.

1996 இல் ஐயாதுரை மில்லேனியம் புரொடக்சன்சு (Millennium Productions) என்பதன் தலைவராக இருந்த பொழுது ஆர்ட்ஃசு-ஆன்லைன்.காம் (Arts-Online.com) என்பதையும் ஆர்வர்டு-இசுக்கொயர்.காம் (Harvard-Square.com) என்னும் இரண்டு மின் குழுமங்களை உருவாக்கினார். இந்தப் பட்டறிவின் அடிப்படையில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்: 1996ல் நியூயார்க்கின் ஆல்வொர்த்து பதிப்பகத்தார் (Allworth Press, New York) வெளியிட்ட “Arts and the Internet”. 1997ல் அதே ஆல்வொர்த்து பதிப்பகத்தாரால் “The Internet Publicity Guide” என்னும் தலைப்பிட்ட நூலையும் வெளியிட்டுள்ளார். ஐயாதுரை, எக்கோமெயில் (EchoMail, Inc) என்னும் மின்னஞ்சல் வழங்குநிறுவனத்தின் தோற்றுநரானார். இவருக்கு மின்னஞ்சல்களைப் பராமரிக்கும் துறைகளில் மூன்று புத்தாக்க உரிமங்கள் (patents) வழங்கப்பட்டன: இவர் படைத்த இந்த மூன்று புத்தாக்கங்களும் செனரல் இண்டராக்டிவ் (General Interactive, Inc.) என்னும் நிறுவனத்துக்கு பயனுரிமம் வழங்கப்பட்டுள்ளன.

1979ல் நியூ செர்சியில் உள்ள இலிவிங்கிசிட்டன் உயர்நிலைப்பள்ளியில் (Livingston High School) பயின்றுகொண்டிருந்த 14-அகவை நிரம்பிய மாணவராகிய ஐயாதுரை தன் மின்னஞ்சல் கண்டுபிடிப்பைத் தொடங்கினார். நியூ செர்சி மருத்துவம், பல்மருத்துவப் பல்கலைக்கழகத்தினருக்காக (University of Medicine and Dentistry of New Jersey) மின்வழி அஞ்சல் அனுப்ப ஒரு புது முறையை உருவாக்கினார். இதன் அடிப்படையில் புகழ்பெற்ற வெசிட்டிங்கவுசு அறிவியல் திறனாளர் கண்டுபிடிப்புத் திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டுக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வெசிட்டிங்கவுசு அறிவியல் படிப்புத்தொகை விருதை வென்றார் (Westinghouse Science Talent Search award). தைம்சு மாகசீனின் (Time Magazine) 2011 ஆண்டு நவம்பர் இதழில் தெக்லாண்டு (Techland) பகுதியில் தகு ஆமவுத்து (Doug Aamouth) நிகழ்த்திய “The Man Who Invented Email” என்னும் நேர்காணலில் எப்படி ஐயாதுரை உருவாக்கிய மென்கலன் இன்று நாம் அறியும் மின்னஞ்சல் என்பதைத் தோற்றுவித்தது என்று கூறினார். அந்த நேர்காணலில், புரூக்கேவன் தேசிய ஆய்வகத்தில் அணுத்துகள் அறிவியலாளராக இருந்த இலசிலி மைக்கேல்சன் (Leslie Michelson) என்பார் மின்னஞ்சல் உருவாக்கும் கருத்தை ஐயாதுரைக்குச் சொல்லி செயல்படுத்தச் சொன்னார் என்றும் விளக்கியுள்ளார். தாள்களில் அனுப்பப்பட்ட மெமோ எனப்படும் குறிப்புகளை மின்வழியாக அனுப்பும் முறையை உருவாக்க வேண்டும் என்று பணித்தார். இதனைச் செயல்படுத்த வேண்டியது உன் பொறுப்பு. இதனை இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை (“Your job is to convert that into an electronic format. Nobody’s done that before”) என்றாராம்.

ஐயாதுரை வழங்கிய ஆவணங்களையும், மூல கணிநிரல்களையும் பிப்பிரவரி 2012ல் சுமித்துசோனியன் அமெரிக்க வரலாற்றுத் தேசியக் கண்காட்சியகம் பெற்றுக்கொண்டது. ஐயாதுரையின் கூற்றுகள் பல செய்தி ஊடகங்களின் பதிவுகளில் திருத்தங்களையும், தொழில் உள்ளகப் பார்வையாளர்களின் மறுப்புரைகளும் வெளிக்கொணர்ந்தன. இதனால் சுமித்துசோனியன் நிறுவனம், ஐயாதுரைதான் முதலில் மின்னஞ்சல் (ஈமெயில், EMAIL) என்பதைக் கண்டுபிடித்தார் என்று தாங்கள் முடிவுகட்ட வரவில்லை என்றும், ஆனால் அவர் வழங்கிய ஆவணங்கள் கணினிக் கல்வி, மருத்துவத்தில் கணினியின் பயன்பாடு முதலியவற்றில் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தவை என்றும் விளக்கம் அளித்தனர். கிசுமோடோ (Gizmodo) இதழுக்காக சாம் பிடுல் (Sam Biddle) என்பவர் எழுதிய கூற்றின்படி மின்னஞ்சலை இரே தாம்லின்சன் (Ray Tomlinso) என்பார் 1971 இலேயே இரண்டு கணினிகளுக்கு இடையே எழுத்துரையான மடல்களை அனுப்பினார். தாம்லின்சன் கூறியதாக சாம் பிடுல் கூறிப்பிடும் பொழுது, “(நாங்கள்) செய்தியை அனுப்பும்பொழுது தேவைப்பட்ட தலைப்புரைகள் இருந்தன. (பெறுநர் (“to”), படி (“cc”) முதலியனவும், யாரிடம் இருந்து எந்தத் தலைப்பில் என்ன தேதியில் என்னும் குறிப்புகளுடன்)” என்றார். ஆனால் ஐயாதுரை முதன்முதலாக EMAIL என்னும் சொல்லை உருவாக்கி இருக்கலாம் என்றும், தாம்லின்சனின் செய்கைகளை அறியாமல் தானாகக் கண்டுபிடித்தும் இருக்கலாம் என்றும் பிடுல் கூறுகின்றார்.

விசுக்கான்சின் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப வரலாற்றாளர் தாமசு எய்கு (Thomas Haigh) என்பார், கணினி, தகவலியல் குமுகத்தின் சிறப்பார்வக் குழுவின் வலைத்தளத்தில் (Special Interest Group Computers, Information and Society website) கீழ்க்காணுமாறு எழுதினார், “Ayyadurai is, to the best of my knowledge, the only person to have claimed for him or herself the title ‘inventor of email.” (நானறிந்த வரையில் ஐயாதுரை என்பார் ஒருவர் மட்டுமே ஈமெயில் (மின்னஞ்சல்) என்பதைப் கண்டுபிடித்தவர் என்று உரிமை சாற்றுகின்றார். பதின்ம அகவையில் (teenager) இருந்தபொழுதே இவர் ஆக்கியது மதிப்பூட்டுகின்றது எனினும் அவர் ஆக்கியிருந்தவற்றில் முன்பு இல்லாத சிறப்புக்கூறுகள் ஏதும் இல்லை. இவருடைய ஆக்கத்தின் தாக்கம் பின் வந்த அமைப்புகளிலும் ஏதும் தெற்றெனத் தெரிவதாக இல்லை. மிகவும் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், ஐயாதுரை தான் கண்டுபிடித்ததாகக் கூறும் செய்தி மிகவும் பிந்தி வந்துள்ளது. எப்படியோ முப்பது ஆண்டுகள் கழித்து உலகத்துக்குத் தான் கண்டுபிடித்த மிகப்பெரிய புத்தாக்கத்தை அறிவித்துள்ளார் என்று தாமசு எய்கு கூறுகின்றார். மின்னஞ்சலில் வரலாற்றையும் தாம்லின்சனின் “SNDMSG” என்னும் மென்கல நிரல் பற்றியும் எம்.ஐ.டி. யின் ஒத்தியங்கும் நேரப்பகிர்வு முறைமை என்பதோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார். இன்னொரு கணினி வரலாற்றாளர், கணினி வரலாற்றுக் கண்காட்சியகத்தின் பொறுப்பாளர் மார்க்கு வீபர் (Marc Weber) என்பார் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்.” (By 1978) nearly all the features we’re familiar with today had appeared on one system or another over the previous dozen years”, including emoticons, mailing lists, flame wars and spam.

இந்தப் பிணக்குரையாடல் வரும் முன்னர் மின்னஞ்சலின் தொடக்கம் பற்றி எந்த மாறுபட்ட கருத்துகளும் இல்லை என்று அர்ப்பாநெட்டு (ARPANET) ஆய்வுக் குழுமத்தைச் சேர்ந்த இடேவிடு கிரோக்கர் (David Crocke) கூறுகின்றார். வாசிங்டன் போசுட்டு (Washington Post) என்னும் நாளிதழில் மின்னஞ்சல் வரலாறு பற்றி எழுதும்பொழுது, மின்னஞ்சலுக்கான தொழில்நுட்பக்கூறுகள் பல புதுப்புனைவாளர்களிடம் இருந்து வந்தன என்றும். அர்ப்பாநெட்டின் நெடுங்கால பயன்பாட்டில் நிலைபெற்றிருந்த மின்னஞ்சலை, 14-அகவை நிரம்பிய ஒருவர் 1970-களின் பிற்பகுதியில் கண்டுபிடித்தார் என்பது பிழையான செய்தி என்றும் கூறுகின்றார்”.

தாம்லின்சனும், தாம் வான் விளெக்கும் (Tom Van Vleck), மற்றவர்களும் செய்தது குறிப்புகள் அனுப்பும் முறையே அன்றி அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்துக்கு அனுப்பும் ஒருங்கிணைந்த மின்னஞ்சல் முறை அன்று என்று ஐயாதுரை கூறுகின்றார். தன்னுடைய கூற்றுகளைப் பற்றிக் குறைகூறுபவர்களுக்கு மறுப்புரையாக தன்னுடைய வலைத்தளத்தில் ஐயாதுரை தன்னுடைய “EMAIL” ஐ முழுவதும் ஒருங்கிணைக்கப்பெற்ற தரவுதளத்தால் இயக்கப்பெற்று தாள்களில் பரிமாறப்பெற்ற அஞ்சல் முறையை மின்முறையாக பெயர்த்த முதல் வகையான மின்னஞ்சல் முறை என்று கூறுகின்றார். இன்று “Gmail”, “Hotmail” போன்ற வலை-முகப்புடன் இயங்கும் மின்னஞ்சல்களில் உள்ளது போலவே பல கூறுகளையும் கொண்டிருந்த முதல் அமைப்பு என்கிறார். ஐயாதுரை எம். ஐ.டி-யில் இளநிலை பட்டப்படிப்புப் படிக்கும் பொழுது அவருக்குப் பேராசிரியராக இருந்த நோம் சோம்சுக்கி(Noam Chomsky) ஐயாதுரையின் கண்டுபிடிப்பை மறுத்துரைப்பவர்களைச் சாடுகின்றார். தொழில் உள்ளகப் பார்வையாளர்கள் எழுப்பும் குழந்தைத்தனமான அடம்பிடிப்புகளாலும் குழப்பம் உண்டாக்குவதாலும் உண்மைகளில் இருந்து திசை திருப்ப இயலாது.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இவர் மின்னஞ்சல் (“EMAIL”) என்று பெயரிட்டு பெயருக்கு காப்புரிமை எடுத்த மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருள் (Email Management System) உருவாக்கியதற்காக அறியப்படுகிறார். இவர் தானே மின்னஞ்சலின் கண்டுபிடிப்பாளர் என்று கூறி, அதனை சில மைய ஊடகங்கள் பதிவுசெய்துள்ளன. இக் கூற்று சர்ச்சைக்குரியது ஆகும். 1978ல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை “EMAIL” என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982ல் பெற்றுள்ளார். இன்று “email” என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!