ஜவ்வாதுமலையில் நெல்லிவாய் கிராமத்தில் சோழர் கால கல்வெட்டு பகவதி சிலையும் கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டத்தில், களப்பணியின் போது நெல்லிவாய் கிராமத்தில் 11 நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலையும், கல்வெட்டும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகன், மதன் மோகன் , பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா, ஆகியோர்களால் கண்டறியப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டது.ஜவ்வாதுமலையில் புலியூர் வருவாய் கிராமத்திற்க்கு உட்பட்ட கோட்டூர்கொல்லை என்னும் கிராம மலைப்பகுதியில் உள்ள சிறிய கோயில் ஒன்றில் கொற்றவை சிலையும் அதன் அருகில் சோழர் கால கல்வெட்டும் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13 வரிகளைக் கொண்டும் சுமார் 3 அடி உயரமும் கொண்டுள்ளது. இக்கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டு அறிஞர் சு.இராஜகோபால் அவர்கள் இக்கல்வெட்டு 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் எட்டாம் ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1078) வெட்டப்பட்டிருக்கலாம் என்றும் இக்கல்வெட்டில் நெல்வாடை மாதன் சித்திரமேழி, போடன் நக்கன், மாறன் மாதன், பன்றன் ஆகிய நால்வரும் இந்த பகவதி சிலையை செய்து அளித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.இக்கல்வெட்டில் பகவதி என்று குறிப்பிட்டிருந்தாலும் சிற்பத்தில் எருமை தலைமீது நிற்கும் துர்க்கையும்(கொற்றவை) கைகளில் சங்கு சக்கரம் கொண்டும் அமைந்துள்ளது. கொற்றவையை பகவதி என்ற பெயரிலும் வழிபடப்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இக்கல்வெட்டுடில் குறிப்பிடும் நான்கு பெயர்களில், நெல்வாடை மாதன் சித்திரமேழி என்பது நெல்லில் இருந்து வரும் வாசம் என்ற பொருளில் அமைந்த புதுமையான பெயராகவும், சித்திரமேழி என்ற பெயர் அக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற வேளாண் பெருமக்கள் குழு என்றும் அறியப்படுகிறது. இந்த பெயர்களில் வரும் நக்கன் என்பது சோழர் காலத்திய கல்வெட்டுகளில் அதிகம் புழங்கிவரும் சொல்லாகும், மாறன் என்பது பாண்டியர்களின் பட்டப்பெயராக வரும் சொல்லாகும். பன்றன் என்ற பெயரின் தொடர்ச்சி கல்வெட்டில் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த நான்கு வகையான தனிச்சிறப்பு பெற்ற பெயர்களுடையவர்கள் இந்த பகவதி சிலையை செய்து எழுந்தருளிவித்துள்ளனர் என்பதும் அதுவும் இச்சிலை 11ஆம் நூற்றாண்டிலேயே ஜவ்வாதுமலையில் அதிகம் போக்குவரத்து இல்லாத பகுதியில் கிடைத்திருப்பது ஜவ்வாதுமலை வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் அரிய வகை கல்வெட்டு என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஜவ்வாதுமலையில் கிடைத்து வரும் நடுகற்களும் கல்வெட்டுகளும் தொல்லியல் தடயங்களும் தொடர்ந்து ஜவ்வாது மலைக்கு புதிய வரலாற்றுச் செய்திகளை அளித்துவருகின்றன. இவற்றை போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..