அழுத்த மின் விளைவு மற்றும் புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பிரெஞ்சு இயற்பியலாளர், பியேர் கியூரி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 19, 1906).

பியேர் கியூரி (Pierre Curie) மே 15, 1859ல் பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை டாக்டர் யூஜின் கியூரி தாயார் சோபி கிளாரி டெபௌளி கியூரி ஆவார். இவருடைய தந்தை ஒரு பொதுநல மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பியேர் கியூரிக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது. தனது 14 ஆம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைக்கு நிகரான பட்டத்தைப் பெற்றார். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் அப்பட்டத்திற்குரிய தகுதியான பணிகளைச் செய்ய இயலவில்லை. தாழ்ந்த ஊதியம் பெற்ற ஆய்வக உதவியாளராக மட்டுமே இவரால் பணியில் அமர முடிந்தது.

ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கியமான அறிவியல் ஆய்வில் இவர் ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக் (Piezo Electric Effecr) கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மேம்படுத்த உதவின.

அழுத்த மின்விளைவுத் தத்துவத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சு மின்னோட்டமானியை உருவாக்கினர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது. பிறகு மைக்ரோபோன், குவார்ட்சு கடிகாரஙக்ள், மின்கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது. முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர் முறுக்குத் தராசு (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார். காந்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும், பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இவருடைய முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று ‘கியூரி விதி’ என்று அழைக்கப்படுகிறது.

மாறுநிலை வெப்பநிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் தங்களுடைய காந்தத் தன்மையை இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலைதான் கியூரி புள்ளி (Curie Point) எனப்படுகிறது. 1895ல் சில ஆய்வுகளுக்காக மேரி கியூரி இவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட தொடர்பில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். துணைவியார் மேரி கியூரியுடன் இணைந்து பொலோனியம், ரேடியம் முதலிய தனிமங்களைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரும் “கதிரியக்கம்”(Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர். அது தொடர்பான ஆய்விலும் சிறந்து விளங்கினர். மேரியின் முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வுகளுக்கு பியேர் கியூரியால் வடிவமைக்கப்பட்ட ‘படிக மின் அழுத்தமானி’ மிகவும் பயன்பட்டது.

பியேரியும் அவருடைய மாணவர் ஒருவரும் சேர்ந்து ரேடியம் துகள்களிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலை உணர்ந்ததன் மூலம் அணுக்கரு ஆற்றல் குறித்த முதல் கண்டுபிடிப்பை வெளியிட்டனர். கதிரியக்கத் தன்மையுடைய பொருள்களிலிருந்து கதிரியக்கம் வெளியேறுவதையும் முதலில் கண்டு பிடித்தனர். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளியேறிய துகள்களில் சில நேர் மின்தன்மை உடையன என்றும் , சில எதிர்மின்தன்மை உடையன என்றும், சில நடுநிலை மின்தன்மை உடையன என்றும் கண்டறிந்தனர். இவையே ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள் (Alpha, beta and gamma rays) எனப்பட்டன. கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி என்பபடும். ஒரு கியூரி என்பது நொடிக்கு 3.7×10^10 சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது கணக்கீடு. 1910ல் ‘கதிரியக்கத் துறை காங்கிரஸ் ‘(Radiology Congress) என்ற அமைப்பு பியர் கியூரியைப் பெருமைப் படுத்த, கதிரியக்கத்தை அளக்க இந்த அலகை அறிமுகப்படுத்தியது.

ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் ஏப்ரல் 20, 1898ல் மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர். மேடம் மேரி கியூரி ஒரு இயற்பியல், வேதியியல் விஞ்ஞானி. உலகத்தின் முதல் பெண் அறிவியலாளர். கதிர்வீச்சு என்ற அறிவியல் கோட்பாட்டில் முக்கிய விளைவுகளை அறிமுகப்படுத்தியவர். அவர் கண்டுபிடித்த ரேடியம் (Radium) புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது யுரேனியத்தை விடப் பல லட்சம் மடங்கு கதிர்வீச்சு உடையது. ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய பியரி கியூரி தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதே சமயம் ரேடியத்தைப் பயன்படுத்திப் புண்களைக் குணமாக்கவும் முடியும் எனக் கண்டறிந்தனர். இதற்குக் கதிரியக்க சிகிச்சை அல்லது ரேடியம் சிகிச்சை என்று பெயர். மேலும் ரேடியம் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. பாக்டீரியா மற்றும் நுண்ணிய கிருமிகளை அழிக்கக்கூடியது, விதைகள் முளை விடுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது, சில தோல் நோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது.

கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல், மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர். 1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம், பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக தாவி விருது வழங்கப்பட்டது. . டேவி மெடல், மேட்டூசி மெடல், எலியட் க்ரஸன் பதக்கம் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். ஏப்ரல் 19, 1906ல் பாரிசில், புயலுடன் கூடிய கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போது ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இவர் கடக்கும் போது பெரிய சரக்கு வண்டி ஒன்று இவரை மோதிக் கீழே தள்ளியதால் இவர் மரணம் அடைந்தார். கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..