‘ஏனுங்க மறக்காம ஓட்டு போடுங்க’ – கோவையைச் சேர்ந்த முதியவர் மதுரையில் பரப்புரை

100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த முதியவர் மதுரை மாநகரில் இன்று தெருத்தெருவாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ராஜா சேது முரளி. இவர் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையிலும் தற்போது மதுரையிலும் வித்தியாசமான தோற்றத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ‘ஏனுங்க மறக்காம ஓட்டு போடுங்க – 100%’ ‘ என கொங்குநாட்டு பேச்சுவழக்கில் துண்டறிக்கை அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.அவர் வழங்கிய பேட்டியில், வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மார்ச் 28ஆம் தேதி கோவையில் தொடங்கிய இந்த பரப்புரையை இன்று மதுரை வழியாக தொடர்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் பரப்புரையை மேற்கொண்டு வருகிறேன். ஏறக்குறைய 20 ஆண்டு காலம் இந்த சமூக சேவையை செய்து வருகிறேன். இந்த சேவையில் மழைநீர் சேகரிப்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பெண் சிசுக்கொலை தடுப்பு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.வருகின்ற 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பது ஒவ்வொரு வாக்காளரின் ஜனநாயக கடமை. வித்தியாசமான மாறுபட்ட வேடத்தில் இந்தப் பரப்புரையை மேற்கொள்கிறேன். 5000 துண்டறிக்கை அச்சடித்து வருகின்ற வழி எங்கும் இதுவரை 3500 பொது மக்களிடம் நேரடியாக வழங்கியுள்ளேன். மதுரைக்கு அடுத்தபடியாக திருச்சி செல்ல உள்ளேன் என்றார்..

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..