தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று; ஆயிரக்கணக்கில் வாழைகள் சேதம்-அரசு நிவாரணம் வழங்குமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள்..
திடீரென ஏற்பட்ட பலத்த சூறாவளிக்காற்றினால் தென்காசி மாவட்டம் சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது பருவமழை துவங்க ஆரம்பிக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக முருங்கை உள்ளிட்ட பல மரங்கள் உடைந்து விழுகின்றன.
இந்நிலையில் சுரண்டை அருகே உள்ள இ.மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி, மாடசாமி என்பவர் தனது வயலின் ஓரு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
வாழைகள் நன்கு குலைகள் காய்த்து விற்பனைக்கு தயாராகும் நிலையில் இருந்தன. இந்நிலையில் நேற்று மாலை, திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது.
இதில் விற்பனைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்து வாழைத்தார்கள் சேதமடைந்தன. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘நடவு முதல் ஒவ்வொரு வாழைக்கும், 150 ரூபாய்க்கு மேல் செலவு செய்து. நன்கு விளைந்து விற்பனைக்கு தயாராக அறுவடை செய்யும் நிலையில், சூறாவளி காற்றால் வாழை மரங்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டன.சுமார் ஒரு லட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்’ என்றனர்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் வாழைக்காய்கள் வெளியிடங்களுக்கு சரிவர கொண்டு செல்ல முடியாத நிலையில் விலை சரிந்துள்ள நிலையில் இயற்கையால் ஏற்பட்ட சேதம் மேலும் விவசாயிகளை கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு விவசாயிகளுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.