சுரண்டை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த காளத்திமடம் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். உள் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடம் கிராமத்தைச் சேர்ந்த 42 வயது பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டவர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிசோதனை செய்த போது இவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அதிகாரிகள் விசாரித்த போது இவருக்கு கடந்த 11ம் தேதியன்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வழியில் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சுரண்டை-சங்கரன் கோவில் சாலையில் உள்ள இதயவியல் சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதுவரை அங்கேயே சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர் அவரது கணவர் மருத்துவரின் கடிதத்துடன் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி சீட்டு பெற்று 13-ஆம் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் அனைத்து பரிசோதனைகளுடன், கொரோனா பரிசோதனையும் செய்ததாக தெரிய வருகிறது. இதில் அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால் உடனடியாக அவர் மதுரையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதில் உடனடியாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் சுரண்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சுரண்டையில் இருந்து மதுரைக்கு காரில் அழைத்துச் சென்ற டிரைவர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் தனிமையில் இருக்க பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்றும், உள்நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும் படியும் அறிவுறுத்தி அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இந்த மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? நோயாளிகள் பார்வையாளர்கள் வருகை பதிவேடு முறையாக பராமரிக்கப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் சுரண்டை நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்த காளத்திமடம் பெண்ணிற்கு கொரோனா தொற்று எவ்வாறு உருவானது என கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.