தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே P.செட்டிஹள்ளி ஊராட்சி ஶ்ரீ காட்டுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பழமை வாய்ந்த இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்கின்றனர் மேலும் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, கோட்டூர், சீரியம்பட்டி சுற்று வட்டாரங்களில் உள்ள உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களிலும் வெளிமாநிலத்திலிருந்தும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக இக்கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். விசேஷ நாட்களில் கோயிலுக்கு வரும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு குடிநீர் வசதி, வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் , கழிப்பறை வசதி, கண்கானிப்பு கேமரா, சுற்றுசுவர், சமையல் கூடம், போன்ற அடிப்படை வசதிகள் இதுவரையிலும் செய்து கொடுக்கப்படவில்லை . காப்புகாடு மலையடிவாரத்தில் உள்ள இக்கோயில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு வசதி செய்து கொடுக்காத நிலையில் அறநிலையத் துறையினர், பக்தர்களிடம் பணத்தை கறப்பதிலேயே கண்ணும் கருத்துமாக கடமையாற்றி வருகின்றனர். குறிப்பாக சுப முகூர்த்த தினங்களில் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் 1000 என்ற நிலையில், பல ஆயிரங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. குறிப்பாக பிரும்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும் அதிகாலையில் நடைபெறும் திருமணங்களுக்கு 7000 முதல் 10000 வரையிலும் பின்னர் 6 மணிக்கு மேல் குறைந்தபட்சம் 5,000 வரை பயமின்றி பொதுமக்களிடம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மிகவும் பழமையான கோயில் என்பதால், பிரசித்தி பெற்ற இத்தலத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகிய பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கார்கள் வேன்கள் ஆகியவற்றில் வந்து கோயில் முன்பே தங்கள் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே செல்லும்போதும் இடையூறு ஏற்படுகிறது . பக்தர்களுக்கு மட்டுமின்றி வாகன ஓட்டிகளுக்கும் வண்டியை சாலையிலே நிறுத்தி கொண்டு போவது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே அறநிலையத் துறையினர் உரிய கவனம் செலுத்தி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வாகனங்களை நிறுத்த தகுந்த ஏற்பாடு செய்து தரவும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6
You must be logged in to post a comment.