கோவில்பட்டி அருகே வடக்கு இலுப்பையூரணியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி அருகே வடக்கு இலுப்பையூரணி ராஜிவ் நகர் பகுதி மக்கள் இன்று யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள், தங்கள் பகுதிக்கு சாக்கடை கலந்த குடிநீர் விநியோகிப்பதை கண்டித்து கோஷங்கள் முழங்கினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அ.முருகானந்தத்திடம் மனு வழங்கினர்.
மனுவில், எங்கள் பகுதியில் 100 வீடுகள் உள்ளன. இங்குள்ள கண்மாயில் ஆழ்துளை கிணறு அமைத்து எங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென எங்களது பகுதி அருகே உள்ள சாக்கடை கழிவுநீர் தேங்கும் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் சாக்கடை கலந்து, ஒரு வித எண்ணை திட்டுகளுடன் வருகிறது. மேலும், துர்நாற்றம் வீசுகிறது. இந்த குடிநீர் அருந்தினால் நோய் பரவும் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு குடம் குடிநீர் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி வருகிறோம். எனவே, எங்களுக்கு மீண்டும் கண்மாயில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
இதில், வடக்கு இலுப்பையூரணி ராஜிவ்நகரை சேர்ந்த எம்.அருண், பகத்சிங் மன்ற மாவட்ட செயலாளர் ரா.உத்தண்டுராமன், க.கணபதி, கே.முத்துமாரி, கே.பாண்டித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.