12
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இராமேஸ்வரத்திற்கு நேற்று (27/04/2018) மாலை வந்தார். இரவு இராமேஸ்வரம் அரசு விடுதியில் தங்கிய அவர் இன்று காலை இராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை சிறப்பு கலச பூஜை நடத்தினார். அதன்பின்னர் காசி விஷ்வநாதர் ஆலயம் முன்பு சுமார் 16 குருக்கள் களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. அதன் பின்னர் மூன்றாம் பிரகாரத்தை சுற்றிவந்த அவர் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
சிறப்பு யாகம் மற்றும் கலச பூஜைகள் குறித்து பாஜகவினர்களிடம் கேட்ட போது கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்தியாளர்களிடம் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: உலக அமைதிக்காக இராமேஸ்வரம் இராமநாதர் சுவாமி கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி பெறும், அதன் பின் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக இராமேஸ்வரத்திற்கு படகு போக்குவரத்து துவங்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனுஸ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு படகு போக்குவரத்து துவங்க இந்தியா தயாராக இருக்கும் நிலையில் இலங்கை அரசிடம் இருந்து உரிய பதில் இல்லாமல் அமைதியாக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் டிடிவி.தினகரன் பாராளுமன்ற தேர்தல் வரும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்று டி.டி.வி கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தினகரன் அவர்கள் நல்ல ஜோதிடராக மாறி வருகிறார் என்று பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கர்நாடகா தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய இணை அமைச்சர் இராமேஸ்வரத்தில் திடீரென சிறப்பு யாகம் நடத்தியது பிற கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.