ஜல்லிக்கட்டு போராட்டம் பிரமாண்டமாக நடந்து முடிந்து இருக்கிறது. ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல் நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் யாரோ சிலரால் தீர்மானிக்கப்பட்ட திட்டத்துடன் முடிந்தது மிகவும் துரதிஷ்டமானது. ஜல்லிக்கட்டில் ஆரம்பித்த போராட்டம் இப்பொழுது பெப்சி கோக் குளிர்பானத்தை வெளிநாட்டு பானம் என்று கூறி புறக்கணிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. அதே சமயம் வெளிநாட்டு பானத்தை புறக்கணிக்கிறோம் என்ற நிலைபாட்டில் பவன்டோ எனும் ஒரு தனி முதலாளியின் வருமானத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மையான நிலைமை. அந்நியப் பொருட்களை விற்பதில்லை என்று வணிகர் சங்கம் முடிவெடுத்தால், அந்த முடிவு இந்த இரண்டு குளிர்பானத்தோடு நின்று விடாமல், அடுத்த கட்டத்திற்கும் செல்ல வேண்டும். ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல, ஏனென்றால் இன்று சந்தைப்படுத்தப்பட்டுள்ள 90 சதவீதம் பொருட்கள் அந்நிய முதலீட்டில் உருவான பொருட்கள்தான்.
அத்தனைப் பொருட்களையும் புறக்கணிப்பது என்பது எந்த வகையிலும் சாத்தியம் கிடையாது. ஏனென்றால் சோப்பு, சாம்பு, பேனா, பென்சில், பவுடர், பல் துலக்கும் ப்ரஷ், ஹார்லிக்ஸ் பிஸ்கட், சாக்லேட் என்று லிவர் கம்பெனி, ப்ராக்டர் கேம்ப்ள், காட்பரி, நெஸ்ட்லே, என்ற அனைத்து நிறுவனங்களும் நம் அன்றாடம் உபயோகம் செய்யும் அனைத்து பொருட்களுடன் ஒன்று கலந்து உள்ளன. அதை ஒரே நாளில் வணிக சங்கம் போடும் சட்டத்தினால் நிவர்த்தி செய்து விட முடியாது. அதற்கு தீர்க்கமான தொலைநோக்கு பார்வையுடன் உள் நாட்டுப் பொருட்களை ஊக்கப்படுத்தவும், சந்ததைப் படுத்தவும் திட்ட மிட வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன் நாட்டு நலனையும், இயற்கை விவசாயத்தின் நலனையும் சிந்திக்க ஆரம்பித்தால் மட்டுமே இந்த ஒட்டு மொத்த புறக்கணிப்பு சாத்தியம்.
நம் உள்ளூர் பானத்தை ஆதரிப்பது தவறில்லை, ஆனால் அடிப்படையில் இரண்டு பேருமே நம் நிலத்தடி நீர் உறிஞ்சிதான் நமக்கு பணத்திற்கு விற்கிறார்கள் என்ற அடிப்படையை நாம் மறந்து விட்டோம், சொல்லப்போனால் நாம் தமிழர்கள் உணர்ச்சியின் அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோமே தவிர, அறிவுப்பூர்வமாக இல்லை என்றே தோன்றுகிறது.
இதற்கு என்ன மாற்று வழி இயற்கை பானங்களை ஊக்கிவிப்பதுதான். நம் தென்னகத்தில் இயற்கை பானம் மிகுந்து உள்ளது, அதை நவீன விஞ்ஞனாத்தையும், வியாபார உத்தியையும் கையாண்டு சந்தைப் படுத்துவது மூலம் நம்முடைய நிலத்தடி நீரையும் நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும், நம் இயற்கை விவசாயத்தையும், விவசாயிகளையும் வாழ வைக்க முடியும். நம் ஊரில் தெருவோரங்களில் ஏழை விவசாயிகளால் விற்கப்படும் இளநீர் வியாபாரி, பதினி வியாபாரி, தர்பூசண வியாபாரி, நன்னாரி சர்பத் வியாபாரி, மோர் வியாபாரி, பனங்கிழங்கு வியாபாரிகளிடம் எத்தனையோ வியாபாரங்கள் நடக்கிறது. நாம் எத்தனை பேர் இவர்களிடம் நம் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்தும், அவர்களை அதை உட்கொள்ளவும் உற்சாகப் படுத்தியிருக்கிறோம்.
ஆக நாம் கோக் பெப்சியை புறக்கணித்து பவன்டோவை ஊக்குவிப்பது மூலம் மீண்டும் ஒரு தனி முதலாளியின் வருமானத்தை பெருக்க வழிவகுக்கிறோமே தவிர விவசாயிக்கோ அல்லது இயற்கை விவசாயத்திற்கோ எந்த ஒரு முன்னேற்றத்தையும் உண்டாக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். ஆகையால் இளநீர், பதனீநீர், மோர் போன்ற நம் கலாச்சாரத்துடன் ஒன்றிய இயற்கை பானங்களை சந்தைப் படுத்துவோம, நம் பாரம்பரியத்தையும் இயற்கை விவசாயத்தையும் காப்போம்..
1 comment
இளநீர், பதனீர் போன்றவற்றை ஆதரிப்பது நல்ல விசயம்தான் நம்முடைய விவசாயிகள் நமக்கு ரொம்ப முக்கியமானவர்கள் அதே நேரத்தில் தறபோது உள்ள சூழ்நிலையில் அமெரிக்க ஆதிக்கத்தை ஒழிக்க உடனடியாக அதற்கு இணையான உள்ளூர் பானத்தினால் மட்டுமே முடியும்.எந்த பானமாக இருந்தாலும் நம் தமிழக இந்திய பானம் என்றால் அது சரிதான் அப்பொழுதுதான் இதைப்பார்த்து நம்முடைய இளைஞர்களுக்கும் இனிமேல் சொநதமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று எண்ணம் தோன்றும். எந்த வியாபாரம் செய்தாலும் அது தனி முதலாளித்துவம்தான் என்பதை நினைத்துக்கொள்ளவும்.
Comments are closed.