கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா அருகில் முக்கிய பகுதியில் தெரு விளக்கு பல மாதங்களாக எரியவில்லை என்று செய்தி வெளியிடப்பட்டது.
நகராட்சி
வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கீழக்கரை ‘சட்ட விழிப்புணர்வு இயக்கம்’ சார்பாக 65 க்கும் மேற்பட்ட சட்டப் போராளிகள் மனு செய்திருந்தனர்.
அதே போல் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கீழக்கரை தாலுகா அலுவலக அதிகாரிகள் சம்பந்தமாக புகார் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜராகி மனுதாரர்கள் விளக்கமளிக்க அழைப்பு தரப்பட்டு இருந்தது. இதனையடுத்து நேற்று 09.05.2018 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் திரு ரெ.சுமன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரான சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சட்டப் போராளிகள், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் இல்லாதது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்கு செய்யப்பட்ட புகார் மனு மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் வருவாய் கோட்டாட்சியரிடம் கீழக்கரை தாலுகா அலுவலக அதிகாரிகள் குறித்து பின் வரும் குற்றச்சாட்டுக்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்து விளக்கமான மனு அளித்துள்ளனர். அதன் சாராம்சம் பின்வருமாறு :
மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் :
1. கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் பணிக்கு காலை 11 மணிக்கு மேல் மிக தாமதமாக அலுவலகத்திற்கு வருகின்றனர்.
2. வேலை நேரத்தில் அதிகாரிகள், தங்கள் இருக்கைகளில் அரை மணி நேரம் கூட அமர்ந்து பணி செய்வது இல்லை.
3. வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பணி நேரங்களில் எங்கு இருக்கின்றனர் என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை.
4. இளநிலை அதிகாரிகள், கணக்காளர்கள் மற்றும் உதவியாளர்கள் அலுவலக வேலை நேரங்களில் அலுவலகத்தில் பணி செய்யாமல், சொந்த வேலைகளை செய்ய வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.
5. பல்வேறு அரசு சான்றிதழ்கள் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்காக கீழக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம ஊராட்சிகளில் இருந்து கீழக்கரை தாலுகா அலுவலகம் வரும் பாமர மக்கள் நாள்தோறும் அலைக்கழிக்கப்பட்டு சொல்லொண்ணா துயரம் அடைந்து வருகின்றனர்.
6. கீழக்கரை தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்களின் கோரிக்கைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கனிவுடன் விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கில் செயல்படுகின்றனர்.
மனுதாரர்களின் கோரிக்கைகள் :
1. கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் வேலை நேரத்தில் தாலுகா அதிகாரிகள் அனைவரும் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகை பதிவினை பொருத்த வேண்டும்.
2. அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றுவதை கண்காணிக்க தாலுகா அலுவலகத்தில் முப்பரிமாண CCTV கேமரா அமைக்க வேண்டும்.
3. அலுவலக வேலை நேரங்களில், தாலுகா வேலை காரணமாக வெளியே செல்லும் இளநிலை அலுவலர்களை கண்காணிக்க உரிய பதிவேட்டில் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதற்கான காரணத்தை பதிவதற்கு உத்தரவிட வேண்டும்.
4. கீழக்கரை தாலுகாவில் களப் பணிகள் மற்றும் சிறப்பு தளப் பணிகள் ஆற்றுவதற்காக அலுவக வேலை நேரங்களில் வெளியே செல்லும் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் உரிய அறிவிப்புப் பலகையில், தான் வெளியே செல்வதற்கான காரணம், தாலுகா அலுவலகத்திற்கு திரும்பி வரும் நேரம் குறித்து அறிவிப்பு செய்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
5. கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களை, அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத வண்ணம், உரிய அதிகாரிகள் கனிவுடன் விசாரித்து, சரியான வழிமுறைகளை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, தாலுகா அலுவலக புரோக்கர்களிடம் ஏமாறுவதில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.
அதே போல் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில், திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, வேலை நேரத்தில் பணியில் இல்லாத அதிகாரிகளை கண்டறிந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உரிய விசாரணை செய்து பொதுமக்களின் மன உளைச்சலை போக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் உச்ச நீதிமன்ற வழக்கு எண் 6237/1990 தீர்ப்பு நாள் : 05.11.1993 லக்னோ வளர்ச்சி அதிகாரக் குழு -Vs- M.K.குப்தா என்பவர் வழக்கில் ‘ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு’ என்பதனை சட்டப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகவே மரியாதைக்குரிய வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பொதுநலன் சார்ந்த இந்த மனு மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விடாது துரத்தும் டெங்கு.. அச்சத்தில் கீழக்கரை மக்கள்.. என்றும் போல் உறக்கத்தில் நகராட்சி…:
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் தொடரும் பந்தம் போல் தொடர்ச்சியாக பொது மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதித்த வண்ணம் உள்ளனர். இதற்கு முக்கிய கீழக்கரை நகரில் ஆங்காங்கே மழை போல் உருவெடுத்தது கிடக்கும் குப்பை கிடங்குகள். இது சம்பந்தமாக 6 மாதங்களுக்கு முன்பே SDPI, மக்கள் டீம், சட்ட போராளிகள், விடுதலை சிறுத்தை, நகர் நல இயக்கம், நாம் தமிழர் மற்றும் இன்னும் பல சமூக அமைப்புகளும் புகார் மனுக்களை அளித்தனர். அச்சமயத்தில் மாவட்ட ஆட்சி தலைவரும் கீழக்கரைக்கு வந்து நகராட்சி செய்ய வேண்டிய வேலைக்கு தனி நபர் மீது பல லட்சங்களை வசூல் செய்து விட்டு சென்றார், ஆனால் டெங்கு காய்ச்சலை நிரந்தரமாக ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கீழக்கரையில் பழைய காவல் நிலையத்தில் இருந்து வடக்கு தெரு செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கு மற்றும் 3வது வார்டுக்குட்பட்ட முகமது காசிம் அப்பா தர்கா ரோடு பகுதியில் சுவர் இடிந்து கிடக்கும் பழைய குப்பை கிடங்கு ஆகியவைகளை உதாரணமாக சொல்லலாம். ஆனால் கவனிப்பாரற்று கிடக்கும் குப்பை கிடங்குகள் ஏராளம். அதேபோல் இந்த குப்பை கிடங்கு அருகில் வழிபாட்டு தலங்கள் கோயில்,மசூதி, வீடுகள் அதிகம் உள்ளதால், குப்பைகளினால் வரும் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.
தற்சமயம் கீழக்கரையைச் சார்ந்த பலர் இராமநாதபுரம் மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் கீழக்கரையில் 3/199 வார்டுக்குடபட்ட புது கிழக்கு தெரு பகுதியே சார்ந்த முஹைதீன் மகன் 10_வது படிக்கும் பள்ளி மாணவர் அப்சல், மீன் கடைத் தெரு 10/46வது வார்டு ஜெமில் கான் மகள் நஸ்மீன், 10/59 வது வார்டுக்குட்பட்ட சேரன் தெரு பகுதியில் சுல்தான் தஸ்தகீர் மகள் அபுரோஸ் நிஷா மற்றும் வடக்குத்தெரு 20வது வார்டு பகுதியில் முஹம்மது ஹுசைன் மகன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அறியப்படுகிறது. இன்னும் பல நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அத்தெரு மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக கீழக்கரை நகர் SDPI கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “நகராட்சி நிர்வாகம் நகருக்குள் உள்ள குப்பை கிடங்குகளை நீக்காவிட்டால் மக்களை திரட்டி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என கூறியுள்ளனர். மக்கள் வெகுண்டெழும் முன்பு தூக்கதில் இருந்து களையுமா???
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமைப்புகளும், மனுக்களும் கூடினாலும் பிரச்சினைகளுக்கு கீழக்கரையில் தீர்வில்லை.. கீழக்கரை ஊர்மக்கள் / கூட்டமைப்பு சார்பாக மனு…
கீழக்கரை நகராட்சியில் நடைபெற்று வரும் நிர்வாகச் சீர்கேடுகள் என்பது சீர் செய்வது கடினம் என்ற அளவுக்கு புற்று நோய் போல் முற்றி கொண்டேதான் வருகிறது. கீழக்கரையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் மனுக்கள் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே உள்ளது.
கடந்த 31.01.2018 அன்று கீழக்கரை நகராட்சி ஆணையாளராக இருந்த வசந்தி குறுகிய காலத்திலேயே பல அதிருப்பதிகளுடன் பணியிடம் மாறுதலுக்கு பின் பரமக்குடி ஆணையாளர் நாராயணன் கீழக்கரை நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பேற்று பணி புரிந்து வருகிறார், அவரிடமும் மனுக்கள் குவிந்த வண்ணம்தான் உள்ளது.
இன்று (07/05/2018) கீழக்கரை ஊர்மக்கள் மற்றும் கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் மக்கள் நல பாதுகாப்பு கழகம், மக்கள் டீம், SDPI கட்சி, நிஷா பவுண்டேசன், விடுதலை சிறுத்தை ஹமீது யூசுஃப், கீழை பிரபாகரன், MSS.முகைதீன், முகைதீன் இபுராஹிம் மற்றும் இன்னும் பல சமூக ஆர்வலர்கள் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கீழக்கரை நகராட்சியில் ஏற்பட்டுள்ள நிர்வாக கேடுகளை பட்டியலிட்டு புகார் மனு அளித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் நாளை (26/04/2018-வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும்.
இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)
கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் பொருள்களுடன், கை தேர்ந்த சமையல் கலைஞர்களின் கண்காணிப்பில், பக்குவமாக தயாரிக்கப்படும் மாசிப் பொரியல், இறால் பொரியல், நெத்திலி பொரியல், சென்னா கூனி பொரியல் உள்ளிட்ட அசத்தும் பொரியல் வகையறாக்களை வாங்கி ருசிக்கும் ‘ஸ்பைசி ஹலால்’ பிரியர்கள், இந்த பொரியல் வகைகள் தங்கள் சாப்பாட்டு தட்டில் இல்லாமல் மதிய உணவினை சாப்பிடுவதே இல்லை.
அது போல் கடல் தாண்டி வளைகுடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ‘ஸ்பைசி ஹலால்’ பிரியர்கள் தங்களோடு இந்த நாவிற்கினிய பொரியல் வகையறாக்களுக்கும் சேர்த்து விமான டிக்கெட்டு எடுத்து விடுகின்றனர். ‘ஸ்பைசி ஹலால்’ நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் ருசிப்பதற்கு இலகுவாக தயார் நிலையில் இருப்பதால் மீண்டும் சமைக்க வேண்டியதில்லை. அப்படியே சாப்பிடுவதற்கு ஏதுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரமலான் நோன்பு காலங்களில் இஸ்லாமிய மக்களால் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கீழக்கரை தொதல், பணியம், ஓட்டுமா, கலகலா வரிசையில் இப்போது ‘ஸ்பைஸி ஹலால்’ உணவு தயாரிப்புகளும் பிரபலமாகி வருகிறது. வெளி நாடுகளில் வசிக்கும் நம் கீழக்கரைவாசிகள், ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும் போதும், இந்த ஸ்பைஸி ஹலால் உணவு வகைகளை வாங்கி சென்று தங்களுடன் பணி செய்யும் நண்பர்களுக்கு பரிசளிப்பது வழக்கமாகி வருகிறது.
இது மட்டுமல்லாமல் சுத்தம் செய்யப்பட்ட மாசித் தூள், இறால் கருவாடு, நெத்திலி கருவாடு, சென்னா கூனி கருவாடு உள்ளிட்ட தித்திக்கும் துணை உணவு வகை தயாரிப்புகளும் இங்கு கிடைக்கிறது. தற்போது கீழக்கரை, இராமநாதபுரம் நகரின் சிறப்பங்காடிகள் மட்டுமல்லாது தமிழகமெங்கும் இந்த ‘ஸ்பைஸி ஹலால்’ உணவு வகைகள் அனைத்து கடைகளிலும் முக்கிய இடத்தை பிடித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதே போல் திருவனந்தபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, பாண்டிச்சேரி, கோயம்பத்தூர் நகரங்களில் இருக்கும் போத்தீஸ் சூப்பர் ஸ்டார் சிறப்பங்காடிகளிலும் இந்த ‘ஸ்பைஸி ஹலால்’ உணவு தயாரிப்புகள் கிடைக்கிறது.
இது குறித்து ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனர்களில் ஒருவரான பவுசுல் அலியுர் ரஹ்மான் கூறுகையில் ”இறைவனுடைய அருளால் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் கடல் கடந்து அனைவராலும் நேசிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பைசி ஹலாலின் பொருட்கள் மட்டுமே பெரும்பாலோருக்குத் தெரியும், முதன் முதலாக ஸ்பைசி ஹலாலின் உரிமையாளர்களையும் இவ்வுலகுக்கு கீழை நீயூஸ் டி.வி மூலம் அறிமுகப்படுத்திய அல்லாஹுக்கே எல்லாப் புகழும். கீழை நீயூஸ் டி.விக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் உங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து எங்கள் நிறுவனத்திற்கு தர வேண்டும்.” என்று தெரிவித்தார்.
‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தாரின் வியாபாரம் செழிக்க கீழை நியூஸ் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு
கீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் சூழ்ந்த பகுதிகளில் உலவும் கஞ்சா வியாபாரிகளிடம் தங்கள் பொன்னான எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர்.
இதனால் இன்று வீட்டுக்கு வீடு கஞ்சா அடிமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் படு ஜோராக எவ்வித அச்சமும் இல்லாமல் தொழில் நடத்தும் இந்த இரக்கமில்லாத கஞ்சா வியாபாரிகளிடம் சிக்கும் தங்கள் பிள்ளைகளை, திருத்தி நல்வழி படுத்திட முடியாமல் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர்கள் தினமும் இரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் இந்த கஞ்சா மற்றும் போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிக்க கோரியும், இந்த அபாய போதை பொருள்களை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வரும் தேச விரோத ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்(போதை தடுப்பு பிரிவு) அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், ஆகியோரை கீழக்கரையை சேர்ந்த சமூக நல அமைப்பினர் சந்தித்து இன்று மனு அளித்தனர்.
இந்த நிகழ்வில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை நகர் நல இயக்கம், இஸ்லாமிய கல்வி சங்கம்(A I E), சட்டப் போராளிகள் இயக்கம், வடக்குத்தெரு சமூக நல அமைப்பு(N A S A) அரசியல் கட்சியினர் SDPI கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டு மனு அளித்தனர். அதுமட்டுமல்லாது கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக 60 க்கும் மேற்பட்ட ஆன்லைன் பெட்டிசன்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த மனுவில் ”இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களின் வியாபாரம் எவ்வித அச்சமும் இன்றி நடைபெற்று வருகிறது. கீழக்கரை நகர் பகுதிகளான புது கிழக்குத் தெரு, முஹம்மது காசீம் அப்பா தர்ஹா பகுதி, சிவகாமிபுரம், பட்டாணி அப்பா தர்ஹா பகுதி, கீழக்கரை டி.எஸ்.பி அலுவலக பின்புறம், கஸ்டம்ஸ் ரோடு வள்ளல் சீதக்காதிவசந்த மாளிகை பகுதி, சாலை தெரு 18 வாலிபர்கள் தர்ஹா பகுதி அருகாமை, கலங்கரை விளக்கம் பகுதி, அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதி உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள் படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரிகள் எந்த பயமோ தயக்கமோ இல்லாமல் தைரியமாக வெளிப்படையாகவே செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கீழக்கரை நகரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நடைபெற்று வரும் இந்த போதை பொருள் வியாபாரத்தால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதோடு நம் தேசத்தின் நலனும், சீர்மிகு மனித வளமும் சீர்கெட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது பள்ளி கல்லூரி அருகாமையில் பான்பராக், குட்கா, சைனி கைனி, போதை புகையிலை வஸ்துக்கள் விற்பனையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது .
இது சம்பந்தமாக 04.04.2018 நாளிட்ட தினகரன் நாளிதழ் மதுரை பதிப்பில் (கீழக்கரையில் மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?) என்கிற தலைப்பில் செய்தி வெளியாகி மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு குடும்பத்தை சீரழிக்கும் இந்த கஞ்சா வியாபாரத்தை முற்றிலும் ஒழித்திட சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மூன்று நாள் தொடர் மழையில் ஈரமாகிய நிலங்கள்.. நோயின் பயத்தில் மக்கள்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், திருமண உதவி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காகவும் வந்து செல்கின்றனர்.
கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு கீழக்கரை பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாது ஆலங்குளம், எக்கக்குடி, ஏர்வாடி, இதம்பாடல், களிமண்குண்டு, காஞ்சிரங்குடி, மல்லல், மாணிக்கனேரி, நல்லிருக்கை, பள்ள மோர்குளம், பனைக்குளம், பெரியப்பட்டினம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, வேளானூர் உள்ளிட்ட 25 கிராமவாசிகளும், பாமர மக்களும் அரசு சார்ந்த வேலைகளை முடிப்பதற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் வேலை நேரங்களில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வேலை நேரங்களில் பணிக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்கு மனு செய்துள்ளனர்.
இந்த மனுவில் ”கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியரும் அவருடைய இருக்கையில் இருப்பதில்லை. எங்கு செல்கிறார் என்று தெரியவில்லை. துணை வட்டாட்சியரும் அவருடைய இருக்கையில் அமர்ந்து பணி செய்வதில்லை. இதனால் தாலுகா அலுவலக எழுத்தர்களும், அலுவலக உதவியாளர்களும் வேலை நேரங்களில் தங்கள் சொந்த வேலைகளை செய்ய வீட்டுக்கு சென்று விடுகின்றனர். இதனால் அலுவலக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு, பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ஆகவே மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அவர்கள், பல மைல்களுக்கு அப்பால்இருந்து கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வரும் இந்த அப்பாவி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழக்கரை தாலுகா அதிகாரிகள் அனைவரையும் வேலை நேரங்களில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றிட உத்தரவிடுமாறும், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளின் வருகையை கண்காணிக்க CCTV கேமரா மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டினை ஏற்படுத்த ஆணையிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு
கீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கீழக்கரை நகரில் நிலவும் சுகாதரக்கேட்டினை சீர் செய்து டெங்கு காய்ச்சலை ஒழிப்பது சம்பந்தமாக உள்ளூரில் இருக்கும் பொதுநல அமைப்புகள், சமூக நல சங்கங்கள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை நாளில் கொடுக்க வேண்டி கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக்கு கழகம் சார்பாக நேற்று சமூக வலை தளங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இன்று கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத் துறையினர் எவ்வித சுகாதார நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கில் இருந்து வருவதை சுட்டிக் காட்டியும், அவசர அவசியம் கருதி கீழக்கரை நகராட்சி பகுதிகளில் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் சட்டப் போராளிகள் இயக்கம், மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை நகர் நல இயக்கம், இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11
கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகரில் பல் மருத்துவம் என்பது என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
கீழக்கரை நகரில் இருந்து பல் மருத்துவம் பயின்ற கிழக்குத் தெருவை சேர்ந்த டாக்டர்.ஹஃப்ஸா பாத்திமா, டாக்டர்.சில்வியா ஜெயத்துடன் இணைந்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் பல் மருத்துவ பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
‘‘பல் போனா சொல் போச்சு’ என்பார்கள். இந்தப் பொன் மொழியின் அவசியத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என்பதை ஆதி காலம் தொட்டு சொல்லி வருகிறார்கள். ஏனெனில், பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான தலை வாசல்’’ என்பதை இன்றைய மருத்துவ உலகமும் வலியுறுத்தி வருகிறது. பல் ஆரோக்கியமின்மை இதயத்தையும் பாதிக்கும்.
நமது வாய் தான் எல்லாவற்றுக்குமே நுழைவாயில். இந்த வாயிலில் நுழைந்து தான் அனைத்துக் கிருமிகளும் நோய்களும் நம் உடலின் உள்ளே போகும் என்பதால் பற்களை பன்மடங்கு அக்கறையோடு நாம் பராமரிக்க வேண்டும். சரி… இப்போது பற்களை பராமரிப்பது பற்றி பல் மருத்துவம் மற்றும் பல் சீரமைப்பு நிபுணர்களான டாக்டர்.ஹஃப்ஸா பாத்திமா மற்றும் டாக்டர்.சில்வியா ஜெயம் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோமா…?
செய்ய வேண்டியவை :
உணவு சாப்பிட்ட பிறகு ஒவ்வொவொரு முறையும் தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்பொழுதுதான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.
பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். ஓரல் இரிகேட்டர் என்பது வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன் படுத்தலாம். இவை தவிர வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல் டாக்டரின் ஆலோசனை படி சுத்தம் செய்வது அவசியம்.
பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உடம்கொள்வது, தொண்டை, வயிறு அல்லது நுரையீரலில் பிரச்னை போன்றவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் எடுத்துக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு துர்நாற்றம் வீசாது.
பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கண் எரிச்சல், மூட்டு வலி, சரும பிரச்னை இருந்தால் அதற்கு பல் சொத்தையும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம்.
செய்யக் கூடாதவை :
கடினமான உணவுப் பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக் கூடாது. கடவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.
பேனா பென்சில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பல்லால் கடிப்பது , பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக் கூடாது.புகை, பாக்கு, வெற்றிலை மெல்லுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கும் போது, அவர்கள் சாப்பிட்ட பிறகு, உடனடியாக தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பற்களில் பாக்டீரியா தங்கி கரை படியும் வாய்ப்பு உள்ளது.
சிறு வயதிலிருந்தே நமது பற்களின் மீது தனி கவனம் செலுத்தி வந்தால் எவ்வளவு வயதானாலும் நம் பற்களைப் பழுதடையாமல் வைத்து கொள்ளலாம்.
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இரவில் பால், சர்க்கரை சேர்ந்த பால், சாக்லெட், பிஸ்கெட் போன்றவற்றைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி சாப்பிட்டால், வாயைக் கழுவாமல் பல் துலக்காமல் படுக்கக் கூடாது.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பற்களோ, தாடையோ சீராகச் சரியான வடிவத்தில் வளர்ச்சி பெறாமல் இருந்தால், அதைச் சிறு வயதிலேயே கவனித்து, கட்டுப்படுத்தி முக அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
பொதுவாகவே அதிக அளவு சாக்லெட், ஐஸ்கிரீம், கார்போனேடட் பானங்கள், சிட்ரிக் ஜூஸ்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
வெள்ளை வெளேரென்று இருந்தால்தான் அவை அழகான, ஆரோக்கியமான பற்கள் என்பதில்லை. லேசான பழுப்பு நிறத்தோடு தான் பற்கள் இருக்கும். பல்லில் உள்ள கரையை நீக்க ப்ளீச்சிங் அல்லது லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பல் தூக்கலாக இருந்தால் ப்ரேசஸ் போட்டுக் கொள்ளலாம். பற்கள் இல்லை என்றால் அதையும் நிரந்தரமாகப் போடலாம். அனைத்து வசதிகளும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை பல் மருத்துவ பிரிவில் உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது
கீழக்கரை நகராட்சி பகுதிகளில் குரங்குகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் குரங்குகள் பிரச்சனைக்கு தீர்வு வேண்டி மனு செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் கீழக்கரை வனச் சரக ஆய்வாளர் சிக்கந்தர் பாட்சா குரங்குகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து வரும் குரங்குகளை பிடித்து அதன் வாழ்வாதார பகுதிகளில் விட பரமக்குடியில் இருந்து பிரத்யேக கூண்டுகள் கொண்டு வரப்பட்டன.
அதனையடுத்து குரங்குகள் அதிகம் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் கூண்டுகளை வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு சட்டப் போராளிகள் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று கீழக்கரை வனக்காப்பக காவலர் மகேந்திரன் தலைமையில் கீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் வளாகம், மேலத் தெரு அஹமது முஸ்தபா தோட்டம், வள்ளல் சீதக்காதி சாலை S.V.M கிட்டங்கி, நடுத் தெரு பெத்தம்மா கபுரடி பகுதி உள்ளிட்ட நான்கு இடங்களில் வாழைப்பழம், கொய்யப் பழங்களை கூண்டுக்குள் தொங்க விட்டு குரங்குகளை சிக்க வைக்க தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.
ஆனால் கூண்டுக்குள் சிக்க குரங்குகள் தயாரா…? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் ‘டெங்கு கொசு’ உற்பத்தியாகும் பகுதி கண்டுபிடிப்பு – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?
கீழக்கரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 3 வது வார்டு புதுக் கிழக்குத் தெரு மற்றும் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டெங்கு கொசு எங்கு உற்பத்தியாகிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. தற்போது இந்த டெங்கு கொசுவின் உற்பத்தி தொழிற்சாலை கீழக்கரை நகரின் மைய பகுதியான லெப்பை டீக்கடை அருகாமையில் உள்ள நகராட்சி தண்ணீர் தொட்டியில் இருந்து வழிந்தோடும் நல்ல தண்ணீரில் இருந்து தான் உருவாவது பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சட்டப் போராளி. ஆசிரியர் அஹமது சுஹைல் கூறுகையில் ”இந்த தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியாக்கப்படும் நீர் இந்த பகுதி முழுவதும் ஓடி பல நாள்கள் தேங்கி கிடக்கிறது. கீழக்கரை நகராட்சி பொதுமக்களையும், சின்னஞ் சிறு பள்ளிக் குழந்தைகளையும் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும் விதமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த தண்ணீர் தொட்டியில் இருந்து செல்லும் நீரை முறையாக கால்வாய்க்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கீழக்கரை பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்தார்.
”இந்த டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது நல்ல தண்ணீரில் தான்” என கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் கடந்த ஆண்டு அறிவியல் சான்றுகளுடன் பள்ளிக் கூடம் பள்ளிக் கூடமாக சென்று மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களை ஏமாற்றும் கீழக்கரை நகராட்சி – வடிவேலு கிணற்றை காணோம் பாணியில் ஊரணியை காணோம்??…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து துறை அரசு அலுவலகங்களான நகராட்சி, தாலுகா அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் போன்றவைகளை கீழக்கரை சார்ந்த இஸ்லாமிய பெருமக்கள் கீழக்கரை பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் நிலத்தை இலவசமாக கொடுத்தாலும், அரசு அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை. நேற்று தினந்தந்தி நாளிதழில் நகராட்சி சார்பாக நடைபெற்ற பணிகளை பட்டியலிட்டு விளம்பரம் செய்துள்ளனர்.
அதில் கீழக்கரையில் உள்ள அனைத்து ஊரணிகளும் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்கி வைக்கும் நிலையில் பராமரிப்பில் உள்ளதாக விளம்பரம் வந்துள்ளது. கீழக்கரையில் ஊரணிகள் எங்குள்ளது..? எங்கு சுத்தம் செய்யப்பட்டது..? என்று தெரியவில்லை.
இதுபற்றி 21வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஜெயபிரகாஸ் கூறியதாவது, “தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து விபரம் கேட்டுள்ளேன். எனக்கு விபரம் தெரிந்தவரை ஊரணிகளை கண்டதே இல்லை. ஆனால் எந்த ஊரணியை தூர் வாரினார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கழித்து கடலை சுத்தம் செய்தோம் என்று கூட விளம்பரம் செய்யலாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லலை” என்றார்.
கீழக்கரை மக்களையும், அரசியல் கட்சியினரையும், சமூக ஆர்வலர்களை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நன்றாக ஏமாற்றுகிறது என்பது மட்டும் தெளிவாகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சியில் கடந்த சில வருடங்களாக நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. மேலத் தெரு, சாலை தெரு, புதுக் கிழக்குத் தெரு, ரஹ்மானியா நகர் உள்ளிட்ட தெருக்களில் வசிப்போர் இரவு நேரங்களில் நாய்களின் அட்டகாசத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல் அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லும் இஸ்லாமிய மக்களும் நாய்களின் தொந்தரவால் அச்சமடைந்து உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கீழக்கரை நகரில் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்களையும் மூத்த குடி மக்களையும் நாய்கள் கடித்து குதறியுள்ளது. கடந்த ஆண்டு சாலை தெருவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் நாய் கடித்து பலியானான். இந்நிலையில் மீண்டும் உருவெடுத்துள்ள நாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த கோரி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும், பொதுநல சங்கத்தினரும் வேண்டுகோள் விடுத்தனர்.
தற்போது நேற்று இரவு முதல் தஞ்சாவூரை சேர்ந்த அன்னை கம்சளை தொண்டு நிறுவனம் மூலம் கீழக்கரை நகராட்சி பகுதியில் நாய்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு நடக்க இருப்பதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவில் மட்டும் 46 நாய்கள் பிடிபட்டுள்ளதாக தெரிகிறது. கீழக்கரை பொதுமக்கள் தங்கள் தெரு பகுதியில் நாய்கள் தொந்திரவு இருந்தால் உடனடியாக நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி மற்றும் ஹாஜா ராவுத்தரை கீழ் காணும் அழைப்பு பேசி எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
சக்தி : 9840909198
ஹாஜா ராவுத்தர் : 9994046329
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் கவிழ்ந்து கிடக்கும் ‘தூய்மை இந்தியா’ – சீர்படுத்தி ‘சிறுவர் பூங்கா’ அமைக்க சட்டப் போராளிகள் கோரிக்கை
கீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகை நிலமானது ‘அரசுக்கு சொந்தமான நிலம்’ என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி கீழக்கரை நகராட்சியின் பராமரிப்புக்கு கீழ் சென்றது. தனியார் வசம் இருந்தவரை வேலி போட்டு அடைக்கப்பட்டு இருந்த இடம், நகராட்சியின் வசம் வந்த உடன் குப்பை கொட்டும் கூடாரமாகவே மாறிப்போனது. இதனால் இந்த பகுதி மக்கள் டெங்கு. சிக்கன் குன்யா, மலேரியா போன்ற வியாதிகளினால் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.
இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு கீழக்கரை நகராட்சி ஆணையராக இப்பொறுப்பில் இருந்த சந்திரசேகரிடம் கீழை நியூஸ் சட்டப் போராளிகள் சார்பாக நேரடியாக பேட்டி கண்டு கீழை நியூஸில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அப்போது நகராட்சிக்கு சொந்தமான வடக்குத் தெரு பகுதி இடத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பூங்கா அமைத்து தர வேண்டும் என சட்டப் போராளிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று வரை இந்த பகுதியில் பூங்கா அமைக்க எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் சட்டப் போராளி ஹமீது யூசுப் கூறுகையில் ”தூய்மை இந்தியா திட்டத்தின் (2016-2017) ஒரு பகுதியான திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளின் படி வாங்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கடந்த ஓராண்டு காலமாக இந்த வடக்குத் தெரு ட்ரக் கொட்டகையில் கவிழ்ந்து கிடக்கிறது.
இதனால் மீண்டும் இந்த பகுதியில் டெங்கு கொசுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது. இந்த பகுதியினை உடனடியாக சுத்தம் செய்து சிறுவர்கள் விளையாட பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும்” என நகராட்சி நிர்வாகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் பல இடங்களில் Transformer முதல் மின் கம்பம் வரை மிகவும் சிதிலம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதிலும் முக்கியமாக சொக்கநாதர் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர், 500 ப்ளாட் பகுதி, அல் அக்ஷா நகர், புது கிழக்கு தெரு, 14 & 15 வார்டு பகுதிகளில் மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதே போல் வருகின்ற கோடை காலத்தை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகளையும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை கீழக்கரை உதவி மின்பொறியாளர் பால்ராஜ் பார்வைக்கு திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைமயில் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜமால் பாருக், நகர் துணை செயலாளர். S.K.V முகம்மது சுஐபு, செயற்குழு உறுப்பினர். மக்கள் டீம் காதர், நகர் வர்த்தக அணி மர்ஹபா சித்திக், நகர் விவசாய அணி ஆகியோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் தயார் – வனத் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்
கீழக்கரையில் சமீப காலமாக காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் மரங்கள் அடர்ந்த பகுதி இல்லாததால் கூட்டமாக திரியும் இந்த குரங்குகள் கூட்டம் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்களை சூறையாடி வருகிறது. மேலும் கைக் குழந்தைகளும், பள்ளி செல்லும் சிறுவர்களும் தாவித் திரியும் இந்த குரங்குகளை கண்டு அஞ்சி நடுங்கி வருகின்றனர்.
இதனால் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் காட்டு குரங்குக்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மற்றும் கீழக்கரை சட்ட போராளிகள் இயக்கம் சார்பாக மனு அளித்த அடிப்படையில் கீழக்கரை வன காப்பக அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க பரமக்குடி வன காப்பகத்தில் இருந்து கூண்டுகளை வரவழைத்துள்ளனர். இந்த கூண்டுகளை குரங்குகள் அதிகம் நடமாடும் தெருக்களில் வைத்து குரங்குகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் முதலாவதாக குரங்கு பிடிக்கும் கூண்டு வைப்பதற்கு, குரங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியான மேலத்தெரு புதுப் பள்ளிவாசல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் வேறு எந்தெந்த பகுதிகளில் இந்த குரங்கு பிடிக்கும் கூண்டுகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்குமாறு கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மற்றும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் தரப்பட்ட மனுவின் அடிப்படையில் குரங்குகளை பிடிக்க தயார் நிலையில் இருக்கும் குரங்கு கூண்டுகளை சட்டப் போராளிகள் முகைதீன் இபுறாகீம், பாபா பக்ருதீன், சாலிஹ் ஹுசைன் பார்வையிட்டு கீழக்கரை வன உயர் அதிகாரி சிக்கந்தர் பாட்சாவிடம் ஆலோசனை நடத்தினர். கீழக்கரை நகரில் குரங்கு பிடிக்கும் கூண்டு வைப்பது சம்பந்தமாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை கீழ் காணும் அலைபேசி எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம்.
96776 40305 / 97917 42074 / 78458 19238
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆழ்ந்த நித்திரையில் கீழக்கரை நகராட்சி.. மீண்டும் தலை தூக்கும் வெறி நாய் தொல்லைகள்…
கீழக்கரையில் வெறி நாய் தொல்லை என்பது தீராத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. கடந்த வருடம் ஒரு சிறுவனின் உயிர் பலியாகியது, அது போல் ஒரு இளம் பெண்ணும் வெறி நாயினால் பெரும் காயத்திற்கு உள்ளானர்.
அதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களின் தொடர் அழுத்தத்தால் வெறி நாய்களை பிடிக்க தனியார் தன்னார்வ நிறுவனம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதை சரிவர செயல்படுத்தாத காரணத்தால் மீண்டும் வெறி நாய்களின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளது.
இன்று (22-03-2018) கீழக்கரை புதுத் தெருவில் ஒரு ஆணும், சிறு பெண் குழந்தையும் நாய் கடிக்கு ஆளாகியுள்ளார்கள். இதன் விபரம் அறிந்த தவ்ஹீத் ஜமாத்தினர் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறியதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பிரச்சினையை கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.
மேலும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி சில வாரங்களுக்கு முன்பு SDPI, நாம் தமிழர், தமுமுக போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் நல பாதுகாப்பு கழகம், மக்கள் டீம் மற்றும் இன்னும் பல சமூக நல அமைப்பு சார்பாக கீழக்கரை ஆணையரிடம் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாறிக் கிடக்கும் ‘நடுத்தெரு’ 18 வது வார்டு பகுதி – நிலை மாறுமா…? நடவடிக்கை எடுக்குமா.. கீழக்கரை நகராட்சி
கீழக்கரை நகராட்சி நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதியில் இன்று அதிகாலை முதல் கீழை மர செக்கு நிறுவனம் அருகாமையில் இருந்து ஜும்மா பள்ளி பின் வாசல் வரை வழிந்தோடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளி செல்லும் சிறுவர்களும், நடைபாதையில் செல்லும் பெரியவர்களும் நடந்து செல்ல வழி இல்லாமல் தட்டுத் தடுமாறி பாதையை கடந்து சென்று வருகின்றனர்.
பல்லலாண்டு காலமாக அடிக்கடி திடீரென சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதியாக இந்த நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதி இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணியாக பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததும் ஒன்றாகும். நடுத் தெரு ஜும்மா பள்ளி பின் பகுதி முழுவதிலும் செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்று கொட்டி விட்டு பல நாள்கள் கழித்து தான் அள்ளிசெல்கின்றனர்.
அது போல இந்த பகுதியில் வீடு கட்டுபவர்கள் முறையாக சாக்கடை வாருகால்களை மூடி போட்டு சரி செய்து விட்டு கட்டுமான வேலைகளை பார்ப்பதில்லை. இதனால் கட்டுமான சாமான்கள் சாக்கடை வாருகால்களுக்குள் விழுந்து சாக்கடை ஓட வழியில்லாமல் பொங்கி எழுந்து சாலையில் ஓடுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
You must be logged in to post a comment.