திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்கம், இந்திய நுகர்வோர் சம்மேளனம் ஆகியவை இணைந்து தேசிய நுகர்வோர் பாதுகாப்பு நாள் விழா நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி மாணவ, மாணவியருக்கு தூண்டில் விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓவியப் போட்டியும், நுகர்வோர் கடமை என்ன? நுகர்வோர் உரிமை என்ன? என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க பொருளாளர் கவிஞர் சு. முத்துசாமி வரவேற்றார். கன்ஸ்யூமர் ஆப் அசோசியேசன் கவுன்சில் மாவட்ட பொறுப்பாளர் தம்பான் தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து நுகர்வோர் உரிமை கடமை குறித்து திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் இந்திய நுகர்வோர் சம்மேளன மாவட்ட தலைவர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் நுகர்வோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த பொருள் வாங்கினாலும் வரி செலுத்தி பில் வாங்க வேண்டும். வல்லவனுக்கு புல் ஆயுதம் நுகர்வோருக்கு பில்லே ஆயுதம். பில் பெற்று இருந்தால் தான் வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு முறையிடுவதற்கு முடியும். தரமான பொருட்களை வாங்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க கூடாது. நிதி முதலீடு செய்யும் போதும், நிலம் வாங்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக யார் கேட்டாலும் கைபேசியில் வருகிற ஓ.டி.பி களை யாரிடமும் கூறக் கூடாது. தேவையில்லாத லிங்கில் சென்று பணத்தை இழந்து விடக்கூடாது. விழிப்பான நுகர்வோராக இருக்க வேண்டும் என்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்க மாவட்ட தலைவர் எஸ். ஆர். அனந்தராமன் பரிசுகளை வழங்கியிருந்தார். போட்டிகளுக்கு நடுவர்களாக மனவளக்கலை பேராசிரியை கவிஞர் வேதிகா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ் துறை பேராசிரியை பாத்திமா, பி.எஸ்.என். கல்லூரி தமிழ் பேராசிரியை ஆறுமுக செல்வி, கலை ஆசிரியர் தங்கவேல் ஆகியோர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தக பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் புன்னைச் செழியன், எழுத்தாளர் மூ.வெ.ரா.பாத்திமா, அருங்காட்சியக பணியாளர்கள் உலகநாதன், வயல் ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.