தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியதை அடுத்து பொன்முடி அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை இழந்தார். எனினும், அவருக்கான தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்கக் கேட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவ்வாறு செய்த இயலாது என ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரின் செயல்பாட்டை கடுமையாகக் கண்டித்தது.
ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என்றும் ஜனநாயக முறைப்படி மனுதாரருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி முதல்வர் செய்த பரிந்துரையை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எவ்வாறு தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று கெடு விதித்தது.
இதையடுத்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறவிப்பையும் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.