டெல்லியில் அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் தமிழக தப்லீக் ஜமாத்தினரை மீட்கக் கோரிய SDPI கட்சியின் பொது நல மனு மீதான விசாரணை மே 04ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
வழக்கு விசாரணை விவரம் பின்வருமாறு,
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக டெல்லியில் முறையான அடிப்படை வசதியில்லாமல் தவித்துவரும் 500க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தேன்
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க எனது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இன்று (ஏப்.28) இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களும் மற்றும் வழக்கறிஞர் ராஜா முகமது அவர்களும் என் மனு சார்பாக ஆஜராகி வாதாடினர்.
அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக டெல்லியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு பின்னர் கொரோனா தொற்று இல்லாத நிலையில் அங்குள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், மருத்துவ வசதி இல்லாமலும் கடும் சிரமங்களுடன் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட நீரிழிவு நோய்க்கு உரிய மருத்துவம் கிடைக்கப்பெறாத நிலையில் முஸ்தபா என்பவர் உயிரிழந்துள்ளார் என்பதையும் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இதுபோல் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம்,மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தவித்து வருவதையும் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் அஜ்மல் கான், இவர்களை பாதுகாப்பாக தமிழகம் மீட்டுக் கொண்டுவருவது தமிழக அரசின் தார்மீக பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இடைக்கால நிவாரணமாக டெல்லியில் முறையான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லாமல் கடும் சிரமங்களை சந்தித்து வரும் தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை உடனடியாக மீட்டு விமானம் மூலம் அழைத்து வர உத்தரவிட வேண்டும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘அவர்களை அழைத்து வருவதற்கான செலவை யார் அளிப்பார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினர்.
அப்போது வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்கள், மாநில அரசுக்கே அதற்கான தார்மீக பொறுப்பு உள்ளதையும், வாரணாசியில் சிக்கிக்கொண்ட 127 இந்து ஆன்மீக பக்தர்களை பொறுப்பேற்று அழைத்து வந்தது போன்ற நடவடிக்கையை அரசிடம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாநில அரசு தனது தார்மீக பொறுப்பை நிறைவேற்றத் தவறினால், அதற்கான செலவை தப்லீக் குழுவினரே ஏற்றுக்கொள்வார்கள் என உத்தரவாதமளித்தார்.
இதையடுத்து இந்த உத்தரவாதத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை மே 04ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
எனது மனு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜா முகமதுவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த வழக்கில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரின் பிரார்த்தனைகளையும் கோரியவனாக…
அச.உமர் பாரூக்
மாநில பொதுச்செயலாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு.
You must be logged in to post a comment.