சென்னையில் விபத்தில் படுகாயமடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.ஆவடியைச் சேர்ந்தவர், நாகராஜ். அவரது மகன் கோகுல்நாதன், 17. இருவரும், அக்., 30ல், வீட்டின் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில், லேசான காயமடைந்த நாகராஜ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.தலையில் பலத்த காயமடைந்த கோகுல்நாதனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காத நிலையில், கோகுல்நாதன் மூளைச்சாவு நிலையை அடைந்ததை, டாக்டர்கள் உறுதி செய்தனர்.இதையடுத்து, கோகுல்நாதனின் உடல் உறுப்புகளை, அவரது பெற்றோர் தானம் அளிக்க முன் வந்தனர்.அதன்படி, கல்லீரல், ஒரு சிறுநீரகம், கண்கள் ஆகியவை, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பொருத்தப்பட்டன.மற்றொரு சிறுநீரகம், இதயம் ஆகியவை, வேறு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டன. கோகுல்நாதன் உடல் உறுப்பு தானத்தால், ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கே.எம், வாரியார்:- வேலூர் செய்தியாளர்.
You must be logged in to post a comment.