கடையநல்லூர் அருகே அதிகாலையில் கோர விபத்து; அரசு பேருந்து லாரி மீது மோதி நடத்துனர் உயிரிழந்த சோகம்..
கடையநல்லூர் அருகே அரசு பேருந்து நினாறு கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் நடத்துனர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் இடைகால் இடையே சையது காட்டன் மில்ஸ் அருகில் அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை சுந்தர பாண்டியபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் செங்கோட்டை மேலூரைச் சார்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்துனராக உள்ளார். அதிகாலை நேரம் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சையது காட்டன் மில்ஸ் முன்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது செங்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் பேருந்தின் நடத்துனர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக அளவு காயம்பட்டிருந்த பொட்டல்புதுரைச் சார்ந்த பிர்தவுஸ் மற்றும் தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிறு சிறு காயங்களுடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.