ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் தலைவர் ஜாஃபர் ஜலாலுதீன் நன்றி தெரிவித்தார்.
Category:
ஆன்மீகம்
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமையாக்களின் பேரரசு-4
(கி.பி 661-750)
மத்திய தரைக்கடலின்
அந்த கடல்பகுதி திடீரென பரபரப்பாகியது.
தங்களது கப்பலை ரோமக் கப்பல் வரிசையை நோக்கி செலுத்த உத்தரவிட்டார் தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள்.
நெருப்பு அம்புகள் பறந்து வந்ததை லட்சியம் செய்யாத
முஸ்லீம்களின் போர் கப்பல்கள் ரோமப்பேரரசின் கப்பல் அணிவகுப்புக்குள்
நுழைந்தன.
முஸ்லீம்களின் நூறுகப்பல்கள் ரோமர்களின் ஐம்பது கப்பல்களை சுற்றி வளைத்தன.
அப்போதுதான் ரோமர்களின் கப்பல்படை தலைவருக்கு தனது தவறு புரிந்தது.
தங்கள் அமைச்சரை மீட்க அந்த கப்பலை துரத்தி பிடிப்பதற்கு பதிலாக தேவையில்லாமல்
இந்த முஸ்லீம்களின்
கப்பல் படையிடம் சிக்கி கொண்டதை அறிந்து மிகவும் வருந்தினான்.
கப்பல்களை காப்பாற்ற உயிருடன் திரும்பிப் போக சமாதானத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்து தலைவனின் தலைமை கப்பலில் வெள்ளைக்கொடி ஏற்றினார்கள்.
வெள்ளைக்கொடி ஏற்றப்பட்ட செய்தியறிந்த
தளபதி உக்பா அவர்கள் ரோம கப்பல்படை தலைவரை தங்கள் கப்பலுக்கு வரவழைத்தார்.
முஸ்லீம்களின் கப்பலுக்கு வந்த ரோம கடற்படைத் தலைவன்
தங்களின் அமைச்சரை மீட்க சக்ரவர்த்தி அனுப்பியதாக கூற,
உங்கள் சக்ரவர்த்தியிடம் போய் இஸ்லாமிய பேரரசிடம் சரணடைய சொல்லுங்கள்.
மிகவிரைவில் இஸ்லாமிய படைகள் ரோமப்பேரரசின் தலைநகரை முற்றுகையிடும்.
அதற்கு முன்பே எங்கள் கலீபா முஆவியா (ரலி) அவர்களிடம் பணியச் சொல் என்று கூறி,
அவர்களை விடுவிக்க ஈட்டுத்தொகையாக
பல கப்பல்களை
பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்தார் தளபதி உக்பா.
ஐரோப்பியாவின் சைப்ரஸ் தீவை நோக்கி முஸ்லீம்களின் கப்பல்படை பயணித்தது.
சைப்ரஸ் தீவு தூரத்தில் தெரிந்தது.
அதன் கலங்கரை விளக்க ஒளி காற்றில் மின்னியது.
ஏறக்குறைய இரவு மசமசத்து விடியல் நேரம் நெருங்கி இருந்தது.
முஸ்லீம்களின் கப்பல்படை
சைப்ரஸ் தீவுக்கு வெகுதூரத்திலேயே நங்கூரங்களை பாய்ச்சியது.
இரவு கவிவதற்காக முஸ்லீம்களின் படை காத்திருக்க துவங்கியது.
தூரத்தில் சைப்ரஸ் துறைமுகம் சிறுபுள்ளியாக மின்னியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுவனத்தை நிரப்பும் ஏழை, எளிய மக்கள்! ..ரமலான் சிந்தனை – 29..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மனிதர்களில் ஏழை பணக்காரர் என்னும் தகுதி பிரித்தலை மனிதனே உருவாக்கி கொண்டதால் ஏழைகளும் பணக்காரர்களும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பேதம் கொண்டு பார்க்கப்படும் சூழல் உள்ளது.
இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் ஏழை என்னும் உளவியல் சிந்தனையை உள்வாங்கி கொண்டால், தம்மிடம் இருக்கும் பணம்,நகை,சொத்து சுகம் இவையாவும் மனித சமுதாயத்திற்கு பொதுவானதென்பதை புரிந்து கொள்வான்.
அல்லாஹ் தனது இறைமறையில் சொல்லும் போது “இறைவனோ தேவைகள் அற்றவன். நீங்கள்தான் அவனிடம் தேவையுள்ளவர்களாக இருக்கின்றீர்கள்” என்று சொல்லியுள்ளான். அதாவது நானே பணக்காரன் எனது அடியார்களான நீங்கள் தாம் ஏழைகள் என்னும் பொருள் கொண்ட வார்த்தை பிரயோகத்தை அல்லாஹ் தெளிவாக உணர்த்தி விட்டான்.
பணம் கொழித்தவர்கள் ஏழ்மை நிலையில் இருப்போரை பரிகாசம் செய்யாமல், அவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு தமது செல்வத்தில் சிலதை அவர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்விப்பதும் ஓர் அழகிய இறைவணக்கமாகவே பார்க்கப்படுகிறது.
பணக்காரர்கள் என்று மனிதரால் அடையாளம் காட்டப்படுபவரை விட ஏழைகள் என்று அல்லாஹ்வினால் அடையாளம் காட்டப்படும் மக்களே சுவனத்திற்குள் முதலாவதாக நுழைவார்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
“ஏழைகள் பணக்காரர்களை விட ஐநூறு வருடங்கள் முந்தி சுவர்க்கத்தில் நுழைவார்கள்”.(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), இமரான் பின் ஹூசைன் (ரலி) ஆகிய நபித் தோழர்கள் அறிவிக்கிறார்கள் : நான் சுவனத்தை உற்றுப் பார்த்தேன் அதில் வசிப்பவர்களில் அதிகமானோர் ஏழைகளாக இருப்பதை கண்டேன்.(புகாரி, முஸ்லிம்)
ஆம், நாளை மறுமையில் சுவனத்தை நிரப்பும் மக்களாக ஏழை,எளியவர்களே இருப்பார்கள் என்பதைத்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ்களில் காணமுடிகிறது.
செல்வந்தர்களே! நீங்கள் கொடுக்கும் தர்மங்கள், உணவுகள், உடைகள் இவையாவும் வெறுமனே ஏழைகளுக்கு மட்டுமானதென்று கருதாமல் சுவனத்தை நிரப்பும் மக்களுக்கானதென நினைத்துப்பாருங்கள். உங்களின் செல்வங்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு வாரி கொடுக்க தூண்டும்.
ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் ஷிக்கீர்(ரலி) அறிவிக்கிறார்கள் : நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமுகம் வந்தேன். அப்பொழுது செல்வம் குறித்த எச்சரிக்கையை உணர்த்தும் “அல்ஹாகு முத்தகாஸுர்” என்னும் 102வது சூராவை அவர்கள் ஓதிகொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஆதமின் மகன் என் செல்வம் என் செல்வம் என்று கூறுகிறான். ஆதமின் மகனே! உன் செல்வத்திலிருந்து நீ சாப்பிட்டு அழித்தவை தவிர , அல்லது நீ உடுத்திக் கிழித்தவை தவிர அல்லது தானதர்மம் செய்து முடித்தவை தவிர வேறு ஏதேனும் உனக்கு (மீதமாக) உள்ளதா ? என அண்ணல் நபி (ஸல்) கேட்டார்கள். (முஸ்லிம்)
இறைவன் தந்த செல்வம் யாவும் தமது தேவைக்கு போக மிச்சமீதியெல்லாம் ஏழைகளுக்குரியதாக கருதவேண்டுமே தவிர ஏழு தலைமுறைக்கு சொந்தமானதாக பார்க்க கூடாது என்பதை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
ஏழைகளுக்கு கொடுக்காமல் கஞ்சனாக இருப்பவனை பார்த்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:-(மறுமையின்)தீர்ப்பைப் பொய்யாக்குபவனை நீர் பார்த்தீரா? அவன் தான் அநாதைகளை வெருட்டுபவன். மிஸ்கீன்(ஏழை)களுக்கு உணவளிக்கத் தூண்டாதவன்.( அல்குர்ஆன் -107:1-3)
இப்படிப்பட்ட மனிதனுக்கு நாளை மறுமையில் அவனது பதிவேடு இடது கரத்தில் கொடுக்கப்படும் போது, “என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!” என்று கதறுவான்.(அல்குர்ஆன்: 69:28)
நாளை மறுமையில் சுவனத்தை நிரப்பும் இன்றைய நமது ஏழை, எளிய மக்களை நமது தர்மத்தாலும், உதவிகளாலும் கண்ணியப்படுத்துவோம், நாமும் சுவனவாசிகளாவோம்.
நமக்கான ரமலான் கூலியை அல்லாஹ்விடம் யாசிப்போம்! இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 30ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உள்ளம் மூன்று வகையான குணாதியசங்கள் கொண்டவையாகும்! ..ரமலான் சிந்தனை – 28..கீழை ஜஹாங்கீர் அரூஸி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
பொதுவாக ஒருமனிதனின் உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சீரான உள்ளம், மரணித்த உள்ளம், நோய்வாய்ப்பட்ட உள்ளம்.
“சீரான உள்ளமானது” மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றை விட்டும் விலகியதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளமானது முழுமையாக அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு சிரம் தாழ்த்தக்கூடியதாக இருக்கும்
இத்தகைய உள்ளம் படைத்தவர்களே நிச்சயமாக மறுமை நாளில் ஈடேற்றம் பெறக்கூடியவர்களாக இருப்பர்.
இது குறித்து இப்றாஹீம் (அலை) அவர்களின் ஒரு பிரார்த்தனைபற்றி அல்லாஹுத்தஆலா கூறும் போது: “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன்தராது” என்கிறான். (26: 88,89)
“மரணித்த உள்ளமானது” சீரான உள்ளத்திற்கு மாற்றமானதாகும். மேலும், இவ்வுள்ளமானது தன்னுடைய இரட்சகனை அறியாத நிலையிலும் அவனை வணங்காத நிலையிலும் காணப்படும். தனது இரட்சகனின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக முழுமையாக மனோ இச்சைக்கு வழிப்பட்டதாக இருக்கும்.
இத்தகைய உள்ளம் குறித்து நபியவர்கள் கூறும் போது: “அல்லாஹ்வை நினைப்பவனுக்கும் நினைக்காதவனுக்கும் உதாரணம்:- உயிரோடு இருப்பவனும் மரணித்தவனும் ஆவார்கள்.”என்றனர். (புகாரி, முஸ்லிம்)
“நோய்வாய்ப்பட்ட உள்ளமானது” இவ்வுள்ளம் உயிரோட்டமுள்ளதாகக் காணப்படினும் நோயுற்றதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளத்தில் அல்லாஹ் மீது அன்பும் உறுதியான விசுவாசமும் காணப்படும்.
எனினும் தவறான விடயங்களின் விசயத்தில் ஆர்வம் கொண்டதாகவும் அதில் அதிக ஈடுபாடு உடையதாகவும் இருக்கும். சில சமயம் இந்நோய் முற்றி ஒருவரை அல்லாஹ்வின் நினைவை விட்டும் விலக்கி அவரை மரணித்த உள்ளம் உடையவர் என்ற நிலைக்குக் கூட தள்ளிவிடும்.(நவூதுபில்லாஹ்)
இருவகையான நோய் கொண்ட உள்ளங்கள்: முதலாவது சந்தேக நோயுடன் தொடர்புடையது, இது அல்லாஹ்வின் மீதும் அவனது ஆளுமை மீதும், அல்லாஹ்வின் இறைத்தூதர் மீதும் அவர்களின் ஹதீஸ்களின் மீதும் ஆராய்ச்சி என்னும் தர்க்கம் மூலம் இறைமறுப்பு நிலைக்கு கூட ஒருவனை கொண்டு போய்விடும்.
இத்தகைய உள்ளம் கொண்ட மனிதரைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:- “அவர்களுடைய இதயங்களில் (வஞ்சகம், சந்தேகம் ஆகிய) நோயுள்ளது. ஆகவே, அந்நோயை அவர்களுக்கு அல்லாஹ் அதிகப்படுத்தி விட்டான். மேலும், அவர்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்ததின் காரணமாக அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு”.(அல்குர் ஆன் – 2:10)
இந்நோயில் இருந்து நாம் விடுபட வேண்டுமென்றால், அல்லாஹ்வையும் அவனது ரசூலையும், வேதத்தையும், நபிகளாரின் ஹதீஸ்களையும், நபித்தோழர்களையும் அவர்களின் வாழ்வியல் வழிகாட்டு நெறிமுறைகளையும் சந்தேகமின்றி ஏற்று வாழ முன்வருவது தான்.
இரண்டாவது இச்சையுடன் தொடர்புடைய நோய்கள்:- இவ்வகை நோய்களில் மனிதன் நன்றாக அறிந்து வைத்துள்ள அனைத்து வகையான பாவமான காரியங்களும் உள்ளடங்கும். அதனடிப்படையில் பொறாமை, உலோபித்தனம், விபச்சாரம், மற்றும் ஹராமான பார்வை போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.
இத்தகைய மனநோய்களுக்குக் காரணமாக இருக்கக்கூடிய உள்ளத்தைப்பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது: “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பீர்களானால், குழைந்து பேசாதீர்கள். ஏனெனில், எவனது உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ, அவன் ஆசை கொள்வான்” என்கிறான். (33:32)
எந்த நேரமும் அல்லாஹ் நம்மை கண்காணிக்கின்றான் என்ற இறையச்ச உணர்வு மட்டுமே இத்தகைய நோய்களில் இருந்து நமது உள்ளத்தை சீர்படுத்தும்.
உள்ளம் பிரகாசமாய் நோயின்றி வாழ்வதற்கு அல்லாஹ்வை வணங்குதல், அவனை திக்ருகள் செய்தல், இம்மை மறுமை சிந்தனையை உள்வாங்குதல், மரண சிந்தனையோடு இருத்தல், அதிகமாக (தவ்பா) பாவமன்னிப்பு கோருதல், நல்லோர்களுடன் நட்பு கொள்ளுதல் போன்ற அழகிய பண்புகளை நாம் வளர்த்துக் கொள்வோமேயானால்…தூய்மையான உள்ளத்துடன் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் பாக்கியம் பெற்றவர்களாவோம்.
சுவனத்தை நிரப்பும் ஏழை, எளிய மக்கள்! குறித்து
இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 29ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நல்லோராய் வாழ்வதற்கு உள்ளத்தை சீர்படுத்துவோம்…ரமலான் சிந்தனை – 27..கீழை ஜஹாங்கீர் அரூஸி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஒவ்வொரு மனிதரும் தான் நல்லோராய் வாழ வேண்டுமெனெ விரும்புவதை பார்க்கிறோம். அப்படி வாழ்வதற்கு தன்னிடமுள்ள பணமோ, பதவியோ, சொத்துக்களோ தேவையில்லை. உள்ளம் சீராக இருந்தாலே போதும்.
மனிதனின் தேகத்தில் உள்ளம் மிகச் சிறப்பு வாய்ந்த ஓர் அங்கமாகும். எவருடைய உள்ளம் உயிரோட்டமான உள்ளமாக இருக்கின்றதோ அவர் உயிரோட்டமுள்ள மனிதனாகவும், எவருடைய உள்ளம் மரித்த நிலையில் இருக்கின்றதோ அவர் மரித்த மனிதனாகவும் கருதப்படுவார். இதனடிப்படையிலேயே அல்லாஹ்வும் அவனது தூதரும் மனித குலத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்). (அல்குர்ஆன்- 33:5)
நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம் இருக்கின்றது, அது சீர் பெறுமானால் உடல் முழுமையும் சீர் பெற்றுவிடும், அது கெட்டுவிட்டால் உடல் முழுமையும் கெட்டுவிடும், அதுவே உள்ளமாகும்.” (புகாரி, முஸ்லிம்)
பெரும்பாலான மனிதர்கள் தவறான பாதைகளின் பக்கம் தடம் புரள்வதற்கு உள்ளமே காரணமாக அமைவதை காணலாம். உள்ளமானது எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. அவ்வப்போது நிலை மாறக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கும். அதற்கான காரணத்தை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் காண்போம்.
“ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.
இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டு வந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம் இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்)
இப்படி உள்ளமானது நிலைமாறும் தன்மையைக் கொண்டிருப்பதால், அதனைச் சீர் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது நமது கடமையாகும். அல்குர்ஆனிலும் நபி மொழியிலும் அதற்கான பிரார்த்தனைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளன.
அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (அல்குர்ஆன்- 3:8)
“இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னை வழிப்படுவதின் பக்கம் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (முஸ்லிம்)
“மேலும், உன்னிடத்தில் அமைதியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)
நமது உள்ளங்கள் தடம் புரளாமல் சீராக இருக்க வேண்டுமென்றால், “ஃபித்னா” என்னும் குழப்பமான பேச்சுக்கள்,செயல்களில் இருந்து நம்மை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.
இன்றைய உலக வாழ்வியல் குழப்பம் மிகுந்ததாகவே இருப்பதை நாமறிவோம். முன்பெல்லாம் மனிதருக்கு மனிதர் நேருக்கு நேராக குழப்பம் செய்த காலம் மாறி இன்று சமூக வலை தளங்களின் மூலமாகவும் குழப்பம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
ஒரு மனிதன் (ஃபித்னா) குழப்பங்களுக்கு உட்பட்டு, அவற்றில் ஆர்வம் கொண்டு, ஈடுபாடு காட்டினால் அவனது உள்ளம் காலப்போக்கில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிய முடியாத அளவுக்கு இருளடைந்துவிடும். அதேபோன்று மற்றொரு மனிதன் குழப்பங்களை விட்டு ஒதுங்கி தன்னைத் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தால் அவனது உள்ளம் பளிச்சிடும் வெண்ணிறத்தை அடையும் என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். (முஸ்லிம், அஹ்மத்)
இதுபோன்ற குழப்பங்களை உள்வாங்கும் உள்ளம் மூன்று வகையான குணாதியசங்கள் கொண்டதாக இருக்கும். அவற்றை
இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 28ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மம் செய்வதும் ஓர் அழகிய வணக்கம் தான்!..ரமலான் சிந்தனை-24..கீழை ஜஹாங்கீர் அரூஸி
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இறைவனுக்கு பிடித்த எத்தனையோ நல்ல அமல்களில் மனிதர்கள் செய்யும் தர்மமும் ஒன்றாகும். “தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்” எனக்கூறப்படும் “சதக்கத்துல் ரத்துல் களா, வரத்துல் பலா” என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான நிகழ்வுகள் உண்டு.
‘விசுவாசம் கொண்டோரே! தங்கள் பொருட்களை (தர்மத்திற்காக) இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலி அவர்களது ரட்சகனிடம் உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) யாதொரு பயமுமில்லை. (இம்மையில் விட்டுச் சென்றதைப் பற்றி) அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்”.(அல்குர்ஆன் – 2:271)
தர்மங்களில் பல வகையுண்டு. ஒருவர் தனது குடும்பத்திற்காக செலவு செய்வதும் கூட தர்மத்தின் ஒருவகை என அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி),நூல் : புகாரி- 55)
அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத்தவிர வேறெதுவுமில்லாமல் இருக்கும் மறுமை நாளில் சுட்டெரிக்கும் வெப்ப சலனத்தில் இருந்து ஒவ்வொரு ஆத்மாவும் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத்தேடி ஏங்கி தவிக்கும் போது, தமது இடது கரத்துக்கு தெரியாமல் வலது கரத்தில் தர்மம் செய்த நல்லடியானுக்கு மட்டும் தனது அர்ஷின் நிழலில் ஒதுங்கிட அல்லாஹ் அனுமதியளிப்பானாம்.(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல் : புகாரி 660)
ஒருவருக்கொருவர் தர்மம் செய்வதின் மூலம் அல்லாஹ் அடைகின்ற மகிழ்ச்சி குறித்து, “ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல் : புகாரி 5352)
பணம்,பொருள்,தங்கத்தை தர்மம் செய்வது போன்று ஒருவர் மரம்,செடி ஏதேனும் ஒன்றை மண்ணில் ஊன்றி அதை வளர்த்தாலும் அதுவும் தர்மம் என்கிறார்கள் பெருமானார்(ஸல்) அவர்கள்.
ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி),நூல் : புகாரி 2320)
சிறு பேரீச்சம் பழத்தின் தர்மமும் கூட நரகத்தில் இருந்து ஒரு அடியானை காக்கும் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். (அறிவிப்பாளர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்-புகாரி:6539)
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு, அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல்:புகாரி: 1410)
இறந்து போனவர்களின் பெயரால் செய்யப்படும் தர்மத்திற்கான நற்கூலியை குறைவின்றி இறந்தவர்களின் கணக்கில் அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள், “நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்” என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி:2756)
மறுமையில் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு ஷஹீதானவர்கள் ஜிஹாத் என்னும் சுவனத்தின் வாசல் வழியாகவும், தொழுகையாளிகள் தொழுகையின் வாசல் வழியாகவும், நோன்பாளிகள் ரய்யான் என்னும் வாசல் வழியாகவும் சொர்க்கத்திற்குள் அழைக்கப்படுவதைப் போன்று தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துன்பமும் இல்லையே! எனவே எவரேனும் சுவனத்தின் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல் : புகாரி :1897)
அல்லாஹ்வின் அடியானை ஒவ்வொரு நாளும் கண்காணிக்கும் மலக்குகள்!
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். இன்னொருவர், “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூல்-புகாரி:1442)
ஈந்துவக்கும் ஈகையாளர்களாய் வாழ்ந்து இம்மையிலும் மறுமையில் வெற்றி பெறுவோமாக!
குடும்ப உறவைப் பேணுவதும் அழகிய இபாதத்துதான்! என்பதை இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை- 25ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இறையச்சமில்லாத மனிதன் வேடதாரி என்பதற்கு பெருமானாரின் விளக்கம்!..ரமலான் சிந்தனை -23..கீழை ஜஹாங்கீர் அரூஸி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
புனிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யும் தொழுகைகள், அமல்கள், திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் போன்ற நன்மைகளை ரமலான் அல்லாத காலங்களிலும் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டால் “வேடதாரிகள்” என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிடுவோம்.
ஒருமுறை ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள், ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்களை சந்தித்தபோது என்ன ஹன்ளலா எப்படி இருக்கீங்கனு? நலம் விசாரித்தார்கள். அதற்கு தாம் வேடதாரியாக இருப்பதாக பதில் கூறினார்கள் ஹன்ளலா(ரலி) அவர்கள். இதை சற்றும் எதிர்பாராத அபுபக்கர்(ரலி) அவர்கள் சுபுஹானல்லாஹ், ஏன் இப்படி சொல்றீங்கனு கேட்டார்கள்?
ஆமாம், இறைத்தூதரின் அவையில் இருக்கும் போது அவர்களின் இம்மை, மறுமை போன்ற அழகிய உபதேசங்களை கேட்கும் போது சொர்க்கம், நரகம் இவைகளை நேரில் பார்ப்பது போன்ற உணர்வில் ஒன்றிணைந்து விடுகிறோம்.
வெளியே வந்ததும் மனைவி, மக்கள், வியாபாரம், சொத்து, சுகம், நிலபுலன்கள் என இவற்றுடன் கலந்து விடுகிறோம். அண்ணலாரிடம் இருந்த போது உள்ள உணர்வுகளை இழந்து விடுகிறோமே இது வேடதாரி இல்லையா? எனக்கேட்டார்கள் ஹன்ளலா(ரலி) அவர்கள்.
இஸ்லாத்தின் ஆரம்பகால கட்டத்தில் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு வஹீ இறங்கும் போது அதனை பதிவு செய்பவர்களில் ஒருவராக இருந்தவர்கள் ஹன்ளலா(ரலி) அவர்களாகும்.
இப்படியொரு சிறப்புமிக்க நபித்தோழர் ஏன் இப்படி கூற வேண்டும்? என்ற யோசனையோடு அண்ணலாரிடம் வந்து நடந்த விபரத்தை கூறினார்கள் அபுபக்கர்(ரலி) அவர்கள்.
“எனது உயிர் தன் வசம் வைத்திருக்கும் அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் அவையில் அமர்ந்திருக்கும் போது நீங்கள் இருந்த மனோ நிலையில் மாறாது எப்போதும் இருப்பீர்களேயானால் உங்கள் படுக்கையறையிலும், வீதிகளிலும் மலக்குகள் சந்தித்து கை குலுக்குவார்கள்” என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எந்த அவையில் நமக்கு அழகிய போதனைகள் வழங்கப்படுகிறதோ? அந்த போதனைகளை கேட்கும் ஆர்வத்தை விட அதனை நமது வாழ்வியல் நடைமுறையாக்கிட வேண்டுமென்னும் ஆர்வத்தினை அதிகப்படுத்திடல் அவசியம் என்பதைத்தான் ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்களைப்போன்ற நபித்தோழர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.
ரமலான் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் கடந்த கால வாழ்க்கை நடைமுறையை சீர்படுத்தி வைக்கும் ஓர் அற்புத மாதமாகும். இம்மாதத்தில் நாம் எந்த மாதிரியான ஆன்மீக சிந்தனைகளை உள்வாங்கினோமோ அதே போன்று வாழவும் முயற்சிக்க வேண்டும்.
புனிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யும் தொழுகைகள், அமல்கள், திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் போன்ற நன்மைகளை ரமலான் அல்லாத காலங்களிலும் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டால் ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்கள் கூறியதைப் போன்று “வேடதாரிகள்” என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிடுவோம்.
வேடதாரிகள் என்னும் பழிச்சொல்லில் இருந்து நம்மை பாதுகாத்து வாழ இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக ஆமீன்.
தர்மம் செய்வதும் ஓர் அழகிய வணக்கம் தான்!
இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 24ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இறையச்சம் நம்மில் எப்படி இருக்க வேண்டும்? ..ரமலான் சிந்தனை-22..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இறைவனின் அடியார்களிடம் “தக்வா” என்னும் இறையச்சம் இருக்க வேண்டுமென்பதையும் அதனால் அம்மனிதன் இம்மை, மறுமை ஈருகிலும் கண்ணியப்படுத்தப்படுவதையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் வான்மறையும் அழகிய முறையில் நமக்கு பாடங்களாக உள்ளன.
இறையச்சம் குறித்து இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்:- “முஃமீன்களே! அல்லாஹ்வை _அவனை அஞ்ச வேண்டிய முறைப்படி பயப்படுங்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டவர்களாகவே அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்” (அல்குர்ஆன் – 3:102)
இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்கு அச்சப்பட்டு வாழ்வது குறித்தும் மரணத்தின் போது முஸ்லிமாக மரணிக்க வேண்டுமென்பது குறித்தும் அல்லாஹ் கூறியுள்ளான்.
மனிதரிடம் அல்லாஹ்வின் அச்சம் எப்படி இருக்க வேண்டுமென்பதை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:- “நீங்கள் எங்கு இருக்கின்ற போதும் அல்லாஹ்வினைப் பயந்து கொள்ளுங்கள்”
(திர்மிதி)
மனிதனிடம் இருக்கும் இறையச்சத்தில் சக மனிதனின் நலம் நாடுதலும் இருக்கிறதென்பதை அவன் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப வாழவேண்டுமென்று அல்லாஹ் தனது இறைமறையில் இவ்வாறு கூறுகிறான்:-
“நன்மை செய்வதிலும் அல்லாஹ்வை அஞ்சி நடப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருங்கள். மேலும் பாவம் செய்வதிலும் வரம்பு மீறுவதிலும் ஒருவருக்கொருவர் உதவியாளராக இருக்காதீர்கள்” (அல்குர்ஆன் – 5:2)
சக மனிதனின் நலம் நாடுவதில் மிகவும் முக்கியமானது, எந்த வகையிலும் ஒருவனை இறைமறுப்பு கொள்கையின் பக்கம் சென்று விடாமல் தடுப்பதும், அதையும் மீறி அவன் சென்று விட்டால் அவனது செயலை நியாயம் கற்பிக்காமல் இருப்பதும் நமக்கான கடமை என உணர வேண்டும்.
வரம்பு மீறுவதில் ஒருவருக்கொருவர் உதவியாளராக இருக்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்வதை இன்று நம்மில் சிலர் புறந்தள்ளிவிட்டு இஸ்லாத்தின் உயரிய மாண்புகளுக்கு எதிராக இவ்வுலக அற்ப வாழ்க்கைக்காக எம்மதமும் சம்மதம் என பேசக்கூடிய நிலையும் அது அவரவர் விருப்பம் என மற்றவர் கூறுவதையும் காணலாம்?
இத்தகைய மனிதர்கள் நாளை இறைவனின் முன்பாக நிற்கும் போது கைசேதப்பட்ட நிலையில் காணப்படுவார்கள் என்பதையே அல்லாஹ் தனது இறைமறையில் பல்வேறு இடங்களில் எச்சரித்திருக்கின்றான்.
அல்லாஹ் மூன்று விஷயங்களில் ஓர் அடியானிடமிருந்து உண்மையான, போலித்தனமில்லாத நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றான்.
1) அல்லாஹ்வை மதிக்கும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்..
“அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு அவர்கள் மதிக்கவில்லை”. (அல்குர்ஆன்- 6:91)
2) அல்லாஹ்விற்காக தியாகம், அர்ப்பணிப்பு செய்யும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்…
“(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எவ்வாறு தியாகம், அர்ப்பணிப்பு செய்ய வேண்டுமோ, அவ்வாறு தியாகம், அர்ப்பணம் செய்யுங்கள்”. (அல்குர்ஆன்- 22:78)
3).அல்லாஹ்வை பயந்து வாழும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்…
இதற்கான இறைவனின் எச்சரிக்கை வசனத்தை இந்த பதிவின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.
இறையச்சமின்றி வாழும் மனிதன் குறித்து நபித்தோழர் ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்கள் கூறிய வார்த்தை “வேடதாரிகள்” என்பதாகும்.
இதுகுறித்து அபூபக்கர்(ரலி) அவர்கள் பெருமானாரிடம் தகவல் சொன்னதற்கு அண்ணலாரின் பதில் எதுவென்பதை?
இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 23ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குகைக்குள் சிக்கிய மூவர் மன்னிப்பின் மூலம் மீண்டது எப்படி? ..ரமலான் சிந்தனை – 21..கீழை ஜஹாங்கீர் அரூஸி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
எந்த மனிதன் தனது செயல்கள் ஒவ்வொன்றிலும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர்பார்த்தவனாக வாழ்கின்றானோ? நிச்சயம் அம்மனிதன் இறையருளுக்குரியவன் என்பதை தான் கீழ்வரும் குகைவாசிகள் மூவர் விசயம் நமக்கு உணர்த்துகின்றன.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. செய்வதறியாது திகைத்த அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) இறையச்ச செயல் தான் காப்பாற்ற முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், இறையச்சத்துடன் நடந்து கொண்ட விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.
எனவே, அவர்களில் ஒருவர் “இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.
ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது.
இறைவா! நான் இதை உனது அச்சத்தினால் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அப்போது (பாறை விலகி) சிறிது இடைவெளி உண்டானது.
மற்றொருவர்;- “இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் ஒருத்தி எனக்கு இருந்தாள். அவள் மக்களிலேயே எனக்கு அதிகப் பிரியமானவளாக இருந்தாள். நான் அவளை எனக்கு ‘இணங்குமாறு’ அழைத்தேன். நான் அவளிடம் நூறு தீனார்களைக் கொண்டு வந்தாலே தவிர எனக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டாள். நான் அதனைத் தேடி அடைந்தபின் அவளிடம் எடுத்துக்கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் தன்னை என் வசம் ஒப்படைத்தாள்.
நான் அவளிடம் உடலுறவிற்காக அமர்ந்த பொழுது அவள், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள். எனது கன்னித்தன்மையை அதற்குரிய (சட்டப்பூர்வமான) உரிமையின்றி (திருமணம் முடிக்காமல்) திறக்காதே’ என்று சொன்னாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். நூறு தீனார்களை (அவளிடமே)விட்டுவிட்டேன். நான் இதை உன் அச்சத்தின் காரணத்தால் செய்ததாக நீ கருதினால், எங்களைவிட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக!’ அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவிற்கு (இன்னும் சற்று) விலகியது.
மற்றொருவர், “இறைவா நான் மூன்று ஸாவு (ஒரு ஃபரக்) கேழ்வரகு அல்லது நெல் கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை (வாங்கிக் கொள்ளாமல்) விட்டுவிட்டுச் சென்றார். அந்தக் கேழ்வரகு அல்லது நெல்லைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன்.
பிறகு (ஒரு நாள்) அவர் என்னிடம் தன் கூலியைக் கேட்டு வந்தார். நான் அவரிடம் ‘அங்கு சென்று, இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன்.
அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை என்றதும், ‘உங்களிடம் எனக்குரியது ஒரு ஃபரக் அளவு தானியம்தானே!’ என்று கேட்டார். நான் அவரிடம், இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் (நீவிட்டுச் சென்ற) அந்த ஒரு ஃபரக் தானியத்தை பயிர் செய்து அதன் மூலம் கிடைத்தவை தாம்’ என்று சொன்னேன்.
அவர் அவற்றை மகிழ்ச்சியோடு ஓட்டிச் சென்றார். (அதை நீ அறிவாய்) நான் அதை உன் அச்சத்தின் காரணமாகவே செய்ததாக நீ அறிந்திருந்தால் எங்களைவிட்டு (மீதமிருக்கும் அடைப்பையும்) நீக்குவாயாக!” என்றார். எனவே, அல்லாஹ் அவர்களைவிட்டு பாறையை (முழுமையாக) நீக்கிவிட்டான். அவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள். என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி), புகாரி – 2215)
பெற்றோர்களை நேசம் கொள்வதும் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் பணிவிடை செய்வதும் அல்லாஹ்வின் அருளுக்குரியதாக இந்த குகைவாசிகள் சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளன.
விபச்சாரம் அல்லாஹ்வின் கோபத்திற்குரியதும், அதனை விட்டு விலகி இருப்பதும் அல்லாஹ்வின் அருளுக்குரியதாக இங்கே பார்த்துள்ளோம்.
அடுத்தவரின் பொருள் நயா பைசாவாக இருந்தாலும் அது அமானிதம் என்பதும், அதை உரியவரிடம் ஒப்படைப்பது அல்லாஹ்வின் அருளுக்குரியதாகவும் இங்கே பார்த்துள்ளோம்.
நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அல்லாஹ்வை அச்சம் கொள்வோமானால், எத்தனை பெரிய சோதனைகளானாலும் அதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான் என்பதை இந்த குகைவாசிகள் மூலம் நம் உணர்ந்து இறையச்சம் உடையோராய் வாழ்வோமாக!
இறையச்சம் நம்மில் எப்படி இருக்க வேண்டும்? என்பதை இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 22ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனது தவறை உணர்வதும், அதை திரும்ப செய்யாமல் இருப்பதுமே தவ்பாவின் சித்தாந்தமாகும்! ..ரமலான் சிந்தனை -19..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
“எவர் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து அல்லாஹ்வை விசுவாசமும் கொண்டு நல்ல அமல்களை செய்தார்களோ; அவர்கள் சுவனம் செல்வார்கள். அவர்கள் சிறிதும் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்”.(அல்குர்ஆன் – 19:60)
“எவர்கள் மறைவிலும் அர்ரஹ்மானுக்கு பயந்து வாழ்ந்து அவன்பால் மீளக்கூடிய பரிசுத்த உள்ளத்துடன் வருகிறார்களோ; அவர்களுக்கு சுவனம் நெருக்கமாக்கப்படும்”(அல்குர்ஆன் – 50:33)
மேலே நாம் பார்த்துள்ள இரண்டு வசனங்கள் மட்டுமல்ல, ஏராளமான வசனங்கள் மனிதன் தனது தவறை உணர்ந்து அதற்காக படைத்தவனிடம் மன்னிப்பு கோருதல் பற்றியும் அவ்வாறு மன்னிப்பு கோருவதின் மூலம் அவன் இவ்வுலகில் பரிசுத்தமாவதுடன் மறுமையில் சுவனவாசியாகவும் தகுதி உண்டு என்றே வலியுறுத்துகின்றன.
ரமலானில் மட்டும் தான் தவ்பா செய்யவேண்டும் என்பதல்ல, எப்போது ஒருவர் அல்லாஹ்வுக்கோ அல்லது அவனது அடியாரான சக மனிதருக்கோ தவறு செய்ததாக உணர்கிறாரோ, அப்போதே அந்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருதலே தவ்பாவின் சிறப்பாகும்.
அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரும் மனிதன், தனது தவறை அல்லாஹ்வுக்காக விடுவதும், செய்த தவறுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருவதும், இந்த தவறை இனிமேல் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பதும், மரண தருவாய் வரை காத்திருக்காமல் உடனடியாக மன்னிப்பு கோருவதும் தான் தவ்பாவின் சித்தாந்தமாகும்.
தொண்டை குழியில் உயிர் ஊசலாடாதவரை அடியானிடமிருந்து தவ்பாவை அல்லாஹ் அங்கீகரிக்கின்றான் என்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.(திர்மிதி)
தவ்பா என்பது, தான் செய்த தவறு குறித்து கவலை கொள்வதே என நபிகள்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.(இப்னுமாஜா)
அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய இபாதத்துகள், கடமைகளில் ஒருவன் தவறு செய்தால், அதற்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு விடுவான்.
ஆனால் சக மனிதனுக்கு ஒரு தவறையோ அல்லது அடுத்தவரின் பொருளை அபகரித்தோ, அடுத்தவரின் நிலத்தில் சில அடியை ஆக்கிரமித்தோ, அல்லது அடுத்தவரின் உரிமையை பறித்தோ வாழும் மனிதன் தவ்பா செய்வதற்கு முன்பு பாதிக்கப்பட்ட மனிதரிடம் சென்று மன்னிப்புக் கோருதல் அவசியமாகும்.
அடுத்தவரின் பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்து விட்டு அவருக்கு நாம் செய்த அநியாயங்கள் குறித்து அவரிடம் எடுத்து சொல்லி என்னை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுங்கள் எனக்கூறி அவர் மன்னித்தால் மட்டுமே அல்லாஹ்வும் நமது பாவத்தை மன்னிப்பான்.
ஒரு மனிதன் தனது குற்ற உணர்வுகளில் இருந்து மீள்வது அல்லாஹ்வின் நேசத்திற்குரியதாகும் என்பதை அருள்மறை குர்ஆன் மூலம் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:- “பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான், இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.(அல்குர்ஆன் – 2:222)
எந்த மனிதன் தனது பாவங்களை நினைத்து கண்ணீர் வடித்து அல்லாஹ்விடம் மன்றாடி மன்னிப்பு கோருகிறானோ? அத்தகைய மனிதனை மறுமையில் அல்லாஹ் நேசம் கொள்வதோடு தனது வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து ஜிப்ரீலே நான் நேசித்த இந்த மனிதனை நீங்களும் நேசியுங்கள் என்பான்.
பின்னர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சக வானவர்களை அழைத்து, வானவர்களே…அல்லாஹ்வினால் நேசிக்கப்பட்ட இந்த மனிதனை நானும் நேசித்துள்ளேன். நீங்களும் நேசியுங்கள் என்றதும் அனைத்து வானவர்களும் அல்லாஹ்விடம் தவ்பா செய்த மனிதனை நேசம் கொள்வார்கள்.
அல்லாஹ்வின் மிகச்சிறந்த அருட்கொடைகளில் சுவனமே மிகவும் உயர்ந்தது. இத்தகைய சுவனம் தனது தவறுகளை உணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பா செய்யும் மனிதருக்கு எளிதாக கிடைக்கும் என்று அண்ணலார் நவின்றுள்ளார்கள்.
நாம் அனைவரும் அதிகமதிகம் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி நமது இதயங்களை சுத்தம் செய்வோம், நாளை மறுமையில் சுவனத்தை பரிசாக பெறுவோம்.
மனிதரிடம் மன்னிப்பு கோருவதின் அம்சங்கள் என்னவென்பதை இன்ஷா அல்லாஹ்..
ரமலான் சிந்தனை 20ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அபுஜஹல் தலையை வெட்டி வீழ்த்திய இரண்டு சிறுவர்கள்!..ரமலான் சிந்தனை – 18..-கீழை ஜஹாங்கீர் அரூஸி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:- பத்ருப் போரின் போது நான் படையினரோடு நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளம்வயதுடைய இரு அன்சாரி சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் என்னை நோக்கி கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹலை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை திட்டுகிறான் என்று கேள்விப்பட்டேன்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்.) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.
சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை நோக்கி சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹலை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள்.
அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக்கறை தென்படுவதால்) அபூ ஜஹலுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ருக்கு உரியவை என்று கூறினார்கள்.
அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ரு (ரலி) அவர்களும் ஆவர். (புகாரி 3141)
குறைஷியரின் முக்கிய தலைவனான அபூஜஹல் கொல்லப்பட்ட பின்னர் எதிரிகளின் வேகம் குறைய ஆரம்பித்தன. குறைஷியர்களின் மிக முக்கிய தலைவர்களான உத்பா, ஷைபா, வலீது போன்ற 24 பேர் கொல்லப்பட்டனர்.
எதிரிப்படையில் மொத்தமாக 70 பேர் கொல்லப்பட்டு, 70 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்காவில் நபியவர்கள் கஃபாவில் தொழும்போது ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனைப்படுத்தியவர்கள் பத்ரு களத்தில் வேரறுத்த மரங்களாக சரிந்தனர் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.(புகாரி:3976)
முஸ்லிம்களில் 14 பேர் ஷஹீதாகினர். அவர்களில் 6 முஹாஜிர்கள், 8 அன்ஸாரிகள் ஆவர். எனவே, முஸ்லிம்களுக்கு பத்ர்களத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது. (புகாரி:3976)
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆண்டிலேயே சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1440 ஆண்டுகளாகி விட்டன.
சத்திய வழி நடப்போர் பலவீனர்களாய் இருந்தபோதிலும் அசத்தியவாதிகள் எவ்வளவு தான் பலமுள்ளவர்களாய் இருந்தபோதும் சூழ் நிலைகளை மாற்றி சத்தியவாதிகளுக்குப் பாதுகாப்பையும் வெற்றியையும் அளித்திட இறைவனால் முடியும் என்பதை “பத்ரு” போரில் வானவர்களைக்கொண்டு இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிந்ததன் மூலம் இறைவன் அதனைச் செய்தும் காட்டிவிட்டான்.
சத்தியத்திற்காக போராடுவதும் அதற்காக உயிரையே இழப்பதும் கூட ஓர் வணக்கம் என்பதைத்தான் பத்ரு போரில் தன்னுயிர் நீத்த 14 ஷுஹதாக்கள் நிரூபணம் செய்து அல்லாஹ்வின் உயரிய இறைநேசர்களாய் தகுதி பெற்றுக்கொண்டனர்.
இறை வழியில் தியாகம் செய்வது ஓர் இறைவணக்கமே. இந்த உணர்வுகள், படிப்பினைகள் என்றும் பசுமையோடு இருக்க “பத்ரு” போர் நிகழ்ச்சிகள் நமக்கு என்றென்றும் படிப்பினையாக இருக்கட்டும்! வல்ல அல்லாஹ் போதுமானவன்.
பாவத்தை விட்டும் நீங்கிடவும்,பாவத்தின் பக்கம் நெருங்காமல் இருப்பது குறித்தும் இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 19ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்ரு போரின் முதல் மூன்று முன்னணி வீரர்கள்!..ரமலான் சிந்தனை-17..-கீழை ஜஹாங்கீர் அரூஸி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதே “பத்ரு போர்” ஆகும். இது ஒரு நீண்ட நெடிய வரலாற்று தொகுப்பாகும். நாம் சுருக்கமாக விவரித்துள்ளோம்.
மதீனாவில் பெருமானாரோடு இருந்த நபித்தோழர்களோடு கலந்திருந்த ஒன்றிரண்டு முனாஃபிக் என்னும் நயவஞ்சகர்கள் மக்காவின் குறைஷியர் எதிரி படைகளுக்கு ரசூலுல்லாஹ் மக்காவின் மீது படையெடுக்க வருகிறார்கள் என்னும் பொய் செய்தியை அனுப்பி மக்காவையும் மதீனாவையும் ஒருவித பதட்டத்துடன் வைத்து ரசித்தனர்.
இன்னொரு பக்கம் மக்கா குறைஷிகள் முப்பது பேருடன் வியாபார நிமித்தமாக சிரியா சென்று பெரும் பொருட்களோடு மக்கா திரும்பிக் கொண்டிருந்த குறைஷித் தலைவர்களில் ஒருவரான அபூசுப்யானை தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதற்கு முஹம்மது நபியின் ஆட்கள் வருவதாக அபூசுப்யான் காதில் விழுவது போன்று நயவஞ்சகர்கள் வதந்தியை பரப்புகின்றனர்.
இந்த இரண்டு வதந்திகளும் தான் மக்கத்து குறைஷியர்களை போருக்கு தூண்டியது. அதன் விளைவாக ஏற்பட்டதே பத்ரு போர்.
வதந்தியை நம்பிய அபூசுப்யான் மக்கத்து குறைஷியரிடம் பாதுகாப்பு கேட்கவே, முஸ்லிம்களின் மீது கடும் சினம் கொண்ட அபுஜஹல் தலைமையிலான படை மக்காவை நோக்கி புறப்பட்டனர். பின்னர் தமது பயணத்தை மதீனாவை தவிர்த்து வேறொரு பாதை வழியாக மக்கா செல்ல ஆரம்பித்ததும் தமக்கு பாதுகாப்பு தேவையில்லை குறைஷியர் படை மக்கா திரும்பட்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அபூசுப்யானின் கோரிக்கையை நிராகரித்த அபூஜஹல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொண்ட தமது படையை பத்ரில் களமிறக்கினான்.
குறைஷிகள் படை திரட்டி வருகிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் பெருமானார் அவர்களும் தற்காப்புக்காக 300 க்கும் மேற்பட்ட சஹாபாக்களைக் கொண்டு படை ஏற்படுத்தி பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமலான் பிறை 17 அன்று நடைபெற்றது. இஸ்லாத்தில் நடைபெற்ற முதல் போர் இது.
நபி (ஸல்) அவர்கள் நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும். அதில் முதலாவது போர் பத்ருதான் (ஜைத் பின் அர்கம் (ரலி) புகாரி 3949).
பத்ரு போரில் 60க்கும் கூடுதலான முஹாஜிர்(மக்காவாசி)களும், 240க்கும் கூடுதலான அன்சாரி (மதினாவாசி)களும் கலந்து கொண்டனர். (பரா இப்னு ஆஸிப் (ரலி): (புகாரி 3956,3957,3958)
முஸ்லிம்களின் படைப்பிரிவில் 3 குதிரைகளும், 9 உருக்குச் சட்டைகளும், 8 வாள் ஆயுதங்களும், 70 ஒட்டகங்களும் இருந்தன.
எதிரிகள் படையில் 100 குதிரைகளும், 700 ஒட்டகங்களும் ஏராளமான யுத்த தளவாடங்களும் இருந்தன.
நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இப்போரில் முஸ்லிம்கள் நோன்பு வைத்திருந்தார்கள். போர்க்களத்தில் ஐவேளை தொழுகை, திக்ரு, துஆ, இரவு நேர தொழுகை மற்ற இபாதத்துகள் தவறாமல் நடைபெற்று வந்தன.
யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.
இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்)
நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.
“நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்மு) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்”. (அல்குர்ஆன் 08:09)
நபி (ஸல்) அவர்கள் தனது போராளிகளை அணிவகுக்கச் செய்து யுத்த தர்மங்களைப் போதித்து, அறிவுறுத்தினார்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு, ரமழான் மாதம் பதினேழாம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது. இஸ்லாமியப் போராளிகள் நோன்புடனும், காபிர்கள் ஆபாச களியாட்ட லீலைகளுடனும் களம் புகுந்தனர்.
அன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் மோதுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர். இதனடிப்படையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர்.
முஸ்லிம்கள் சார்பாக அன்சாரிகள் மூவரை நபிகளார் அனுப்பியபோது எங்களுக்கு நிகரான குறைஷிகளை அனுப்புங்கள் என்றனர். அப்போது நபியவர்கள் உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி), அலீ (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். இவர்கள் மூவரும் காஃபிர்களில் வந்த பின்வரும் மூவருடன் போரிட்டு அவர்கள் தலைகளை நிலத்தில் உருட்டினர்.
ஹம்ஸா (ரலி)அவர்கள் உத்பாவையும், உபைதா (ரலி)அவர்கள் வலீத் என்பவனையும், அலீ (ரலி)அவர்கள் ஷைபா என்பவனையும் வெட்டி தலைகளை பூமியில் உருட்டினர். அல்லாஹு அக்பர்!
குறைஷியரின் மூன்று முன்னணி தலைவர்களை கொன்றதும் போர்க்களம் சூடு பிடிக்கிறது. யார் யாரை வெட்டினர் என்ற குறிப்பு சரியாகக் கிடைக்கவில்லை. களத்தின் நடுவில் புகுந்து போர் புரிந்ததால், அவற்றை சரியாக கூர்ந்து யாராலும் சொல்ல முடியாது. எனினும், அபூஜஹலை கொலை செய்தது மட்டும் இரண்டு சிறுவர்கள் என்பதை வரலாற்றில் காணமுடிகிறது.
யார் அந்த சிறுவர்கள் என்பதை இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 18ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தம் உயிரை பணயம் வைத்து அண்ணலாரை பாதுகாத்த அலீ(ரலி)! ..ரமலான் சிந்தனை – 16..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொன்றே விடுவதென குறைஷிகள் முடிவு செய்தனர். அன்றே மக்காவை விட்டு வெளியேறி விடுமாறு நபிகளாருக்கு இறைவனின் கட்டளையும் வந்தது.
இறைவனின் கட்டளையை கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘வழமையாகத் தாங்கள் படுத்துறங்கும் மஞ்சத்தில் இன்று படுத்துறங்க வேண்டாம்’ என அண்ணலாரை எச்சரித்து சென்றனர்.
அண்ணலார் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லப் புறப்பட்டபோது, அநேகமாய் அவர்களின் விரோதிகளாலும், மற்றோராலும் தங்களிடம் வைக்கப்பட்டிருந்த அமானிதப் பொருட்களை உடையவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு வருமாறு கூறி அலீ (ரலி) அவர்களை மக்காவில் இருக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
எதிரிகள் பெருமானாரைக் கொள்வதற்காக வீட்டைச் சுற்றிக் காத்திருக்கிறார்களென்பது தெரிந்திருந்தும் அலீ (ரலி) அவர்கள் கிஞ்சித்தும் அஞ்சாமல், நபிகளாரின் படுக்கையில், நபிகளாரின் போர்வையால் போர்த்திக்கொண்டு அவர் உயிருக்கே ஆபத்தான நேரத்திலும் கூட அங்கு உறங்கப் பின்வாங்கவில்லை.
நபி(ஸல்) அவர்களும் இரவோடு இரவாக மக்காவை விட்டு வெளியேறி மதீனா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய போது மக்கத்து எதிரிகளின் கண்களை விட்டும் அல்லாஹ் மறைத்து பாதுகாத்தான்.
ஹழ்ரத் அலீ (ரலி) அவர்கள் மூன்று நாட்கள் வரை மக்காவில் தங்கி தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தாங்களும் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் நபிகளாரின் இல்லத்திலேயே வந்து சேர்ந்து கொண்டார்கள்.
துள்ளும் பருவத்திலேயே துணிவாய் துளிர்விட்ட ஹழ்ரத் அலீ(ரலி) அவர்களின் வீரம் வெளிச்சமிடும் வகையாக பல போர்களின் வெற்றி அமைந்தது. பல போர்களங்களையும் கண்டார்கள். அவை அனைத்திலும் வெற்றியை சேர்க்கும் வேங்கையென முன்னின்றார்கள்.
இவர்கள் ஏராளமான யுத்தங்களில் கலந்து கொண்டுள்ளார்கள். தபூக் யுத்தத்தை தவிர்த்து ஏனைய யுத்தங்களில் நபிகளாரோடு இருந்து நிகரற்ற வீரத்தை காண்பித்தார்கள்.
பாத்திமா(ரலி) அவர்களை பெண் கேட்டு பெருமானாருக்கு முன்பு தயங்கி நின்ற ஹழ்ரத் அலீ(ரலி) அவர்களின் கோரிக்கையை புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு தமது மகளாரை 21 வயது கொண்ட ஹழ்ரத் அலீ (ரலி) அவர்களுக்கு நபிகளார் மணம் முடித்து கொடுத்தார்கள்.
அன்றைய சூழலில் ஹழ்ரத் அலீ (ரலி) அவர்களிடம் ஓர் உடைவாள், ஒரு புரவி, ஒரு போர் அங்கி ஆகியவை மட்டுமே சொத்துக்களாக இருந்தன. போர் அங்கியை விற்று அந்த பணத்திலேயே தன் திருமணச் செலவுகளை முடித்தார்கள்.
அலீ(ரலி) – பாத்திமா (ரலி) தம்பதிகளின் மணவாழ்வு மணக்கலாயிற்று. கணவரின் கரம் பிடித்து மணமகளார் தம் தந்தையிடம் பெற்றுவந்த அன்பளிப்பான ஒரு போர்வை, கயிற்றிலான ஒரு கட்டில், தோலிலான ஒரு மெத்தை, தோலிலான ஒரு குடுவை, ஒரு நீர் துருத்தி, இரண்டு திருகைகள், இரண்டு பானைகள் ஆகியவை மட்டும் கொண்டதாக இருந்தது. இதை கொண்டே இருவரும் தன் வாழ்கையை சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் ஹஸன், ஹுஸைன் என்ற மக்கட் செல்வங்களும் பிறந்து வளரலானார்கள். அண்ணலாரின் பேரக்குழந்தைகளான ஹஸன்,ஹுஸைன் இருவர்களின் தந்தை என்பதால் அலீ(ரலி) அவர்களை மக்கள் எல்லோரும் “அபுஸ்ஸிப்தைன்” இரண்டு பிள்ளைகளின் தந்தையே என செல்லமாக அழைத்தனர்.
இஸ்லாமிய வரலாற்றின் முதல் போர் என சொல்லப்படும் பத்ரு யுத்தத்தின் முதல் வரிசையின் மூன்று முன்னணி போர் வீரர்களில் ஒருவராக ஹழ்ரத் அலீ(ரலி) அவர்கள் களம் கண்டனர்.
அந்த போரின் வரலாற்றையும் அலீ(ரலி) அவர்கள் யாரை எதிர்கொண்டார்கள்? என்பதையும் இன்ஷா அல்லாஹ்..
.ரமலான் சிந்தனை 17ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் கூறிய நற்சான்றுகள்!..ரமலான் சிந்தனை 14..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய தோழராகவும் பெருமானாரின் மொழி பெயர்ப்பாளராகவும் பெருமானாரால் சொர்க்கவாசி என அடையாளம் காட்டப்பட்டவராகவும் திகழ்ந்தார்கள் ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள்.
நபிகளாரின் தாயிஃப் பயணத்தில் உடன் சென்று பெருமானாருக்கு உறுதுணையாக இருந்தார்கள். தாயிஃபில் இருந்து மக்கா திரும்பும் வழியில் நக்லா பள்ளத்தாக்கில் நபிகளாருடன் தங்கியவர்கள் ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள் என்பதை ரமலான் சிந்தனை 4ல் பார்த்தோம்.
ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:- இரண்டு விஷயத்தில ஜைத் (ரலி) அவர்களுடன் போட்டியிட்டு வெல்ல எவராலும் இயலாது. 1) திருக்குர்ஆன் தெளிவு, 2) வாரிசுரிமைச் சட்டம், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட சட்டத் தெளிவு. இவ்விரு விஷயங்களிலும் ஜைது (ரலி) அவர்கள் தன்னிகரற்று விளங்கினார்.
மஸ்ரூக் (ரலி) சொல்கின்றார்கள்: நான் மதீனாவிற்கு வந்த போது ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களைக் கல்வியில் மிகச் சிறந்து விளங்கும் அறிஞர்களில் ஒருவராகக் கண்டேன்.
ஸாபித் பின் உபைத்(ரலி) சொல்கிறார்கள்: ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து இருக்கும் போது மிகவும் கலகலப்பாக இருப்பார். மக்களுடன் அமர்ந்திருக்கும் போது அமைதியாக இருப்பார்.
அரபுலக மக்களின் மதிக்கத்தக்க ஒரு சகாபியாகவும், மார்க்க சட்ட மேதையாகவும் வாழ்ந்த ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள் தமது குடும்பத்தாரோடு இருக்கும் போது கலகலப்பாகவும்,நகைச்சுவையாக பேசக்கூடியவராகவும் இருந்த பண்பு பெருமானாரிடம் கற்றதாகும்.
ஆம், அண்ணல் நபி(ஸல்) அவர்களும் தமது குடும்பத்தாரிடம் நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் பேசக்கூடியவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை அன்னை ஆயிஷா பிராட்டியாரின் பல்வேறு தகவல்களில் காணலாம்.
கபீஸா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: ஜைது பின் தாபித் (ரலி) அவர்கள் ஷரீஅத் நீதிமன்றத்தின் மாபெரும் நீதிபதியாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் முஃப்தியாக, நன்றாக மாமறை திருக்குர்ஆனை ஓதத் தெரிந்த காரியாக, பாகப்பிரிவினைச் சட்ட நிபுணராக இருந்திருக்கின்றார்.
ஆக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், பிறகு அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் காலத்திலும் பின், உமர் கத்தாப் (ரலி) அவர்கள் காலத்திலும், பின் உத்மான் (ரலி) அவர்கள் காலத்திலும் திருக்குர்ஆன் மனனம் செய்து பிறகு அதைத் தொகுத்து சரிபார்த்து வழங்கிய பெருமை இநத நபித்தோழருக்கு உண்டு. இதை விடச் சிறந்த ஒரு பணி வேறு இருக்கவே முடியாது.
இத்தனை சிறப்பு வாய்ந்த ஜைது பின் தாபித் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 45 ஆம் ஆண்டு தனது 55 வது வயதில் இவ்வுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தாரகள். ஆம், இறைவனின் நாட்டப்படி இவ்வுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார்கள்.
ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) அவர்களின் மறைவு செய்தியறிந்து பல்வேறு நபித்தோழர்களும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.
ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்களின் இரங்கல் செய்தியில், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முஸ்லிம் உம்மாவின் மிகப் பெரிய அறிவு ஜீவி இன்றைய தினம் மரணமடைந்து விட்டாரே! என்று குறிப்பிட்டார்கள்.
மர்வான் (ரலி) அவர்கள், ஜைத் பின்தாபித் (ரலி) அவர்களின் ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள். சகாபிகளில் மிகப்பிரபலமான கவிஞர் ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) போன்றவர்கள் இவர் மீது இரங்கற்பாக்களைப் பாடி தங்களின் மனக்கவலைகளை வெளிப்படுத்தினர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களது மார்க்கப்பணிக்கு மறுமையில் உயரிய நற்கூலியை வழங்கிச் சிறப்பிப்பானாக!
இஸ்லாத்தை ஏற்ற முதல் வாலிபரின் வரலாற்றை இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 15ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இறை வசனங்களை ஒருங்கிணைத்து குர்ஆன் பிரதிகளை வழங்கிய உத்மான்(ரலி) அவர்கள்! ..ரமலான் சிந்தனை – 13..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கலீஃபா உத்மான்(ரலி) காலத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு பிரதிகள் எடுக்கும் வேலை முழுவேகத்துடன் தொடங்கியது. ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் பணி துவங்கியது.
கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு “யமாமா” போர் நடந்தது. அதில் திருக்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்த காரிகளும், நன்றாக மனப்பாடம் செய்திருந்த ஹாபிஸ்களும் கலந்து கொண்டனர். அந்த யுத்தத்தில் ஹாபிஸ்களில் 70 பேருக்கு மேல் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து கொண்டனர்.
ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களும் அந்த யுத்தத்தில் காயமடைந்தவர்களில் ஒருவராகும். நபித் தோழர்கள் இந்த யுத்தத்தில் உயிர் நீத்தது உமர் (ரலி) அவர்களை பெரிதும் வாட்டியது.
யமாமா யுத்தம் முடிந்ததும் உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து இது போன்ற யுத்தத்தில் கலந்து எஞ்சிய ஹாபிஸ்கள் யாவரும் உயிர் நீப்பதற்குள் திருக்குர்ஆனை ஒருங்கிணைத்து பாதுகாத்துக் கொள்ளும் பணியை துவக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இம்மாதிரி யுத்தம் நடைபெறும் பட்சத்தில் திருக்குர்ஆன் மனனம் செய்தவர்கள் இல்லாமல் போய் விடுவார்களோ என்ற அச்சம் தெரிவித்தார்.
உமர்(ரலி) அவர்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுத்த கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துக் கூறி திருக்குர்ஆனை தொகுத்து தரும் பொறுப்பை ஏற்கும் படி வேண்டிக் கொண்டார்கள்.
தனது பணி குறித்து ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:- குர்ஆனை பலரிடமிருந்து பெற்று மரப்பட்டைகளிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்கவில்லை, (ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமரிடமும் அதன்பின் அவர்களின் மகள் ஹஃப்ஸாவிடமும் இருந்தது. (அறிவிப்பவர்: ஜைத் பின் ஸாபித்(ரலி) நூல்: புகாரி- 4986)
இஸ்லாம் பல நாடுகளிலும் பரவியபோது ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறையில் குர்ஆனை மக்கள் படித்தார்கள். அதேபோல் குர்ஆனின் வார்த்தைகளை தங்கள் பகுதி உச்சரிப்பின்படி படித்தனர்.
இதனால் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் கூடினால் குர்ஆனை ஓதுவதில் வேறுபாட்டை கண்டனர். ஒவ்வொரு பகுதியினரும் தாங்கள் ஓதுவதே சரியான முறை என்றும் மற்றவர்களுடைய கிராஅத் தவறு என்றும் கூறினர்.
இதனால் பல இடங்களில் குர்ஆனை ஓதுவதில் சர்ச்கைகள் எழுந்தது. ஆகவே ஒரே வித கிராஅத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றினைப்பது அவசியமானது என்பதை தீர்மானித்த உஸ்மான்(ரலி) அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் அதனை செய்தும் முடித்தார்கள்.
கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள் அன்னை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த மூல குர்ஆனைப் பெற்று, ஜைத் பின் தாபித், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஸஈத் பின் அல்ஆஸ், அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் ஆகிய நால்வர் குழுவிடம் அதனைப் பிரதி எடுக்கும் படி உஸ்மான்(ரலி) அவர்கள் பணித்தார்கள்.
அப்போது உத்மான் (ரலி) இந்நால்வரில் குறைஷிகளாகிய பிந்திய மூவரையும் பார்த்து. நீங்கள் குர்ஆனின் ஏதேனும் வார்த்தையை எந்த விதத்தில் எழுதுவது என்று (மதீனாவாசியாகிய) ஜைத் பின் தாபித்தோடு முரண்பட்டீர்களென்றால் அந்தவார்த்தையை குறைஷிகளின் பேச்சு வழக்குப்படியே எழுதுங்கள். ஏனெனில் குர்ஆன் குறைஷிகளின் பேச்சுவழக்கில் தான் இறங்கியது என்றார்கள்.
அதன் படி அவர்கள் நால்வரும் குர்ஆனை பல பிரதிகளாக எழுதி முடித்தபோது மூல குர்ஆனை அன்னை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் உத்மான்(ரலி) திருப்பிக் கொடுத்தார்கள். பிரதி எடுக்கப்பட்டதை எல்லாப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். மேலும் அதற்கு முன்பிருந்த எல்லா குர்ஆன் பிரதிகளையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார்கள். (நூல்: புகாரி 4987)
கலீஃபா உத்மான்(ரலி) அவர்களின் காலத்தில் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆன் தான் இன்று நமது கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஒரே விதமான உச்சரிப்போடு வார்த்தை மாறாமலும் அதன் அர்த்தம் மாறாமலும் நாம் ஓதிக்கொண்டிருப்பதற்கு கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சியே காரணமாகும்.
பெருமானாரின் மறைவுக்கு பிறகு குர்ஆனின் சூராக்கள், வசனங்கள் அரபுலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நபித்தோழர்களிடம் மனனமாகவும், அவரவர் ஓலைச்சுவடிகளிலும் எழுதி பாதுகாத்து வைத்திருந்ததை ஒன்று திரட்டி “முஸ்ஹஃப்” என்னும் ஒரே தொகுப்புக்குள் கொண்டு வந்தவர்கள் ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) அவர்களாகும்.
ஜைது பின் தாபித்(ரலி) அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் அவர்களின் அறம் சார்ந்த பணிகளும் இஸ்லாமிய வரலாற்றில் என்றென்றும் நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் கூறிய நற்சான்றுகளை இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 14ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இறை வசனங்களை ஒருங்கிணைத்து குர்ஆன் பிரதியாக்கிய உத்மான்(ரலி)!..ரமலான் சிந்தனை – 12..கீழை ஜஹாங்கீர் அரூஸி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஜைத் பின் தாபித் (ரலி) நன்றாக ஓதத் தெரிந்தவர், எழுத்தறிவு உள்ளவர் என்று அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ஜைத் பின் தாபித் (ரலி) ஓதுவதை அண்ணலார் (ஸல்) அவர்கள் செவிமடுத்தார்கள். தெளிவாக ஓதினார், துள்ளியமாக உச்சரித்தார். கற்று உணர்ந்தவர் போல் வசனங்களின் பொருளையும் நன்றாகப் புரிந்து ஓதினார்.
எழுதுவதிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்ததை அண்ணலார் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள். இம்மாதிரி தகுதி கொண்டவர்கள் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்டார்கள். பின்பு அண்ணலார் (ஸல்) அவர்களின் அறிவுரைக்கேற்ப யூதர்களின் மொழியை 15 நாட்களிலும், சிரிய மொழியை 17 நாட்களிலும் கற்றுத் தேர்ந்தார்கள்.
இவ்வாறு நபித்தோழர்கள் மத்தியில் மாபெரும் அறிஞராகவும், அண்ணலார் (ஸல்) அவர்களின் மொழி பெயர்ப்பாசிரியராகவும் விளங்கிய ஜைத் (ரலி) அவர்கள் நம்பிக்கையிலும், நேர்மையிலும் சிறந்து விளங்கினார்கள். இதனால் அண்ணலார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வஹியை (வேத வசனங்களை) எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் நியமித்திருந்தார்கள்.
ஏதேனும் ஒரு வசனம் இறங்கி விட்டால் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களை அழைத்து வரச் சொல்லி அவ்வசனத்தைப் பதிவு செய்வார்கள் பெருமானார். அவ்வப்போது இறங்கிக் கொண்டே இருக்கும் வசனங்களை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். வசனங்கள் இறங்க இறங்க, இறங்கிய மாதிரி அண்ணலார் (ஸல்) அவர்களிடமிருந்து வாயோடு வாயாகக் கேட்டுத் தெரிந்து எழுதினார்கள்.
எந்த வசனம் எப்பொழுது இறங்கியது? ஏன்? எதற்காக இறங்கியது? என்பதெல்லாம் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களுக்குக் கை வந்த கலை. சுருங்கக் கூறின் இவர் ஓர் அறப்போர் வீரர், திருக்குர்ஆனின் நல்லாசிரியர். திருக்குர்ஆனைப் பார்க்காமல் ஓதும் ஹாபிஸ், இனிமையாக ஓதும் காரி, அறிவு ஞானம் மிகுந்த சட்ட மேதை, பல மொழிகள் தெரிந்த பன்மொழிப் புலவர், வஹி எழுதும் எழுத்தாளர், கலீஃபாக்களின் ஆலோசகர்.
கலீஃபா உமர்(ரலி) காலத்திலும், கலீஃபா உத்மான்(ரலி) காலத்திலும் தற்காலிக கலீஃபாவாக செயல்பட்டவர்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் போதெல்லாம் அவருடைய அலுவலகப் பொறுப்பைக் கவனிக்க இவரை தற்காலிக கலீஃபாவாக நியமித்திருக்கிறார்.
சிரியாவுக்கு பயணமான போதும் இவரையே தற்காலிக கலீஃபாவாக உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நியமித்து விட்டுச் சென்றார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த ஜைது பின் தாபித்(ரலி) அவர்களின் தலைமையில் தான் திருக்குர்ஆனை தொகுக்கும் பொறுப்பினை கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள் ஒப்படைக்கிறார்கள்.
திருக்குர்ஆன் ஒரே தடவையில் இறங்கியது அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி 20க்கும் கூடுதலான ஆண்டுகளில் முழுமையடைந்தது. திருக்குர்ஆன் இறங்கும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அக்காலத்தில் காகிதங்களாக அறியப்பட்டிருந்தவற்றில் எழுதச் செய்து பிறகு அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்கச் செய்தார்கள்.
சிலர் திருக்குர்ஆனை தங்கள் நெஞ்சங்களில் மனனம் செய்தும் பாதுகாத்தனர். இவர்களில் எழுதியும், மனனம் செய்தும், பாதுகாத்தவர்களில் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் மிக முக்கியமானவராகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்த போது திருக்குர்ஆன் வெவ்வேறு சுவடிகளில் எழுதப்பட்டும் பலரது நெஞ்சங்களிலும மனனம் செய்யப்பட்டும் பாதுகாக்கப்பட்டது. வசனங்கள் மற்றும் அத்தியாயங்கள் யாவும் தனித்தனியாக இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும் தினச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது. ஒரே ஏட்டில் அனைத்தும் எழுதி வைக்கப்பட்டதாக இருக்கவில்லை
பெருமானார் காலத்தில் ஒரே ஏட்டில் அனைத்தும் எழுதி வைக்கப்பட்டதாக இருக்கவில்லை. அதற்குரிய தேவை அன்று ஏற்படவில்லை. ஏனெனில் வஹி (வேத வெளிப்பாடு) அன்று தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது. அதன் வரத்து அன்று நின்று விடவில்லை.
கலீஃபா அபூபக்கர்(ரலி) காலத்தில் நடைபெற்ற சில யுத்தங்களில் குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த ஹாபிஸ்களான சகாபிகளில் சிலர் ஷஹீதாகிய போதுதான், திருக்குர்ஆன் வசனங்களையும், அத்தியாயங்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் அனைவரிடமும் எழுந்தது.
அதன் நிறைவாகத்தான் கலீஃபா உத்மான்(ரலி) காலத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப்படும் வேலை முழுவேகத்துடன் தொடங்கியது. ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் பணி துவங்கியது.
எவ்வாறு அது முழுமை பெற்றது என்பதை இன்ஷா அல்லாஹ்..
ரமலான் சிந்தனை 13ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இறையில்லங்களை நிர்வகிக்கும் முறையை கற்றுத்தந்த உத்மான்(ரலி)…ரமலான் சிந்தனை – 11..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபாவான உத்மான்(ரலி) அவர்களின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. மக்கா, மதீனா பள்ளிகளை சுற்றி சுவர் எழுப்பி பாதுகாப்பினை பலப்படுத்தியதும் இவர்களின் ஆட்சியில் தான்.
மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியை சுற்றி இருந்த யூதர்களுக்கு சொந்தமான தோட்டங்கள், காலி மனைகளை தமது சொந்த பணத்தில் கூடுதல் விலைக்கு வாங்கி பெருமானாரின் குடும்பத்தவர்களுக்கு இருப்பிடங்களாக்கி கொடுத்தார்கள் கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள்.
மஸ்ஜிதுன் நபவியை சுற்றி ஏராளமான நிலங்களை வைத்திருந்த யூதர்கள் காலப்போக்கில் தங்களின் ஒன்றிரண்டு இடங்களையும் மதீனத்து முஸ்லிம்களிடம் விற்று விட்டு வெளியேறினர்.
இன்று மதீனத்து பள்ளி மிகுந்த பாதுகாப்புக்குள் இருப்பதற்கு கலீஃபா உத்மான்(ரலி) அவர்களின் சமயோசிதமான நடவடிக்கை தான். இன்று நம்முடைய பகுதிகளில் உள்ள மஸ்ஜிதுகளை சுற்றியுள்ள கடைகள்,கார் ஷெட்டுகள்,வாடகை வீடுகள் போன்றவற்றை நாம் எப்படி பயன்படுத்த கொடுத்திருக்கோம்னு? யோசித்து பாருங்கள்.
அல்லாஹ்வின் இல்லங்களை எப்படி பாதுகாக்க வேண்டும்? பராமரிக்க வேண்டுமென்பதை கலீஃபா உத்மான்(ரலி) அவர்களின் வரலாற்றை படித்தால் உணர்ந்து கொள்ளமுடியும்.
இறையில்லங்களை பாதுகாப்பதில் காட்டிய அக்கறையைப் போலவே வான்மறை வசனங்களை ஒற்றை பிரதியாக்கிடும் விசயத்திலும் காண்பித்தார்கள்.
உத்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்திற்கு வெற்றிகள் குவிந்த வண்ணமிருந்தன. பல ஊர்களில் இஸ்லாமிய அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருந்தார்கள். முஸ்லிமல்லாத பல ஊர்கள் வெற்றி கொள்ளப்பட்டன.
திருக்குர்ஆனை நன்றாக மனனம் செய்திருந்த ஹாபிஸ்களும் அதை நன்றாக ஓதத் தெரிந்த காரிகளும் புதிய இஸ்லாமிய ஊர்களில் குடியேறினர். அங்குள்ள மக்கள் அந்த ஹாபிஸ்கள், காரிகளிடமிருந்து திருக்குர்அனை ஓதக் கற்றுக் கொண்டனர். மொழிகள் யாவும் உச்சரிப்பதிலும் பேச்சு வழக்கிலும் நகரத்துக்கு நகரம் மாறுபட்டன, வட்டாரத்துக்கு வட்டாரம் வித்தியாசமாக இருந்தன.
இவ்வாறு ஓதுவதினால் திருக்குர்ஆனின் கருத்துக்கோ பொருளுக்கோ எந்த மாறுதலும் ஏற்படாது. அன்று ஏற்படவுமில்லை. அதன் பிறகு இஸ்லாம் பரவத் தொடங்கிய போது அரபியல்லாத மக்கள் அரபு மக்களுடன் சேர்ந்து புது சமூக அமைப்பை உருவாக்கினர். அரபி மொழியையும் பேசத் தொடங்கினர். இதனால் அம்மொழியிலும் அதன் உச்சரிப்பு விதத்திலும் சிறிய,சிறிய மாறுதல்கள் உண்டாயின. ஒவ்வொருவரும் அவரவர் உச்சரிப்புக்கு ஏற்ப திருக்குர்ஆனை ஓதினர்.
பிரபல நபித்தோழர் ஹுதைபத்துல் யமான் (ரலி) அவர்கள் அன்று ஈராக்கில் தங்கியிருந்தார். அவர் மட்டுமல்ல அவரைப் போன்ற வேறு நபித்தோழர்களும் தங்கியிருந்தனர். அவ்வூர் மக்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக திருக்குர்ஆனை ஓதுவதை அவர் கவனித்தார். சிலர் தவறாக உச்சரித்து ஓதுவதையும் கவனித்தார்.
இப்படியே போனால் காலப் போக்கில் பிரச்னைகள் பல உருவாகக் கூடும் எனக் கருதினார். அரபி மொழியில் உள்ள உச்சரிப்பின் அழகும் இனிமையும் போய்விடும் என்று அவர் அஞ்சினார்.
ஆங்காங்கே உள்ள வட்டார வழக்கங்களின்படி திருக்குர்ஆன் ஓதுவது அனுமதிக்கப்படும் பட்சத்தில், திருக்குர்ஆனில் குளறுபடிகள் தோன்ற வாய்ப்பு உண்டு? என உணர்ந்து அமீரில் முஃமினீன் உத்மான் (ரலி) அவர்களிடம் தம் கருத்தைத் தெரிவித்தார்.
இதை அறிந்த உத்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து உதவி கோரிய பிறகு, மற்ற நபித்தோழர்களிடமும் ஆலோசித்த பின்னர் சில முடிவுகளை எடுக்க ஆரம்பித்தார்கள்.
அதற்கு முன்பு பெருமானார்(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் வசனங்களை மனனம் செய்தும் எழுதியும் வந்த நபித்தோழர்களில் ஹழ்ரத் ஜைத் பின் தாபித்(ரலி) மிக முக்கியமானவர்களாகும். இவர்களின் மூலமாகவும் இன்னபிற சகாபிகள் மூலமாகவும் பாதுகாக்கப்பட்ட இறைவசனங்கள் முஸ்ஹஃப் என்னும் ஒரு அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டன.
இதற்கான முன் முயற்சியினை முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் காலத்திலும் பின்னர் உமர்(ரலி) அவர்களின் காலத்திலும் முன்னெடுக்கப்பட்டு மூன்றாம் கலீஃபா உத்மான்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நிறைவு செய்யப்பட்டன.
இதன் வரலாற்றை இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை – 12ல் பார்க்கலாம்!
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபா உத்மான்(ரலி) வரலாறு!..ரமலான் சிந்தனை- 10..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்கள் தங்களின் இறுதி காலம் (மரணம்) நெருங்குவதை உணர்ந்து உடனடியாக ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து மூன்றாம் கலீஃபாவை தேர்வு செய்யுமாறும் இந்த தேர்வு மூன்று நாட்களுக்குள் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்கள்.
இந்தக் குழுவில் பெருமானாரால் சுவர்க்கவாசிகள் என கூறப்பட்ட உத்மான்(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), சஅது(ரலி), அப்துர்ரஹ்மான்(ரலி), அலி(ரலி) போன்றோர் இடம்பெற்றனர். இவர்களில் அலி(ரலி) அவர்களை தவிர மற்ற ஐவரும் இஸ்லாத்தின் ஆரம்ப கால ஏகத்துவ பரப்புரையாளர்களாகும்.
உமர் (ரலி) அவர்களை நல்லடக்கம் செய்த பின் மிஸ்வர் பின் மஃரமா(ரலி) இல்லத்தில் ஆறு பேரும் தங்கள் முதல் கூட்டத்தைக் கூட்டினார்கள். அக் கூட்டத்தின் பயனாய்ச் சொந்தத்தையோ, வேறெந்த உறவு முறையோ பாராது மக்களின் நல்லதையும், நேர்மையையும், சத்தியத்தையும் மட்டுமே இத்தேர்தலில் மேற்கொள்வதாக வாக்களித்த அப்துர் ரஹ்மான் (ரலி)அவர்கள், மூன்று இரவும் பகலும் மதீனாவில் சஹாபாக்களிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர்களின் விருப்பமெல்லாம் அறிந்த பின்னர் முஹாஜிர்கள், அன்ஸார்கள் மற்றும் பிரமுகர்கள் யாவரையும் பள்ளிக்கு அழைத்து, அவர்கள் முகதாவில் உதுமான் (ரலி) அவர்களைப் பார்த்து ‘அல்லாஹ்வை முன்வைத்து, குர்ஆன், பெருமானாரின் முன்மாதிரி, இரு ஆன்றோர்களாகிய அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியவர்களின் அடிச்சுவடு இவைகளைப் பின்பற்றி நடப்பதாய் வாக்களியுங்கள்’ என்றார்கள்.
அப்படியே வாக்களித்தபின் எல்லோரும் உத்மான் (ரலி) அவர்களை கலீபாவாகத் தெரிந்தெடுத்து அவர்கள் கரத்தில் உறுதிமொழி செய்தார்கள். உத்மான் (ரலி) அவர்களின் கிலாஃபத்தின் துவக்கம் கி.பி. 644ம் வருடம் ஹிஜ்ரி 24 முஹர்ரம் முதல் தேதியாகும்.
உத்மான்(ரலி) அவர்கள் இயற்கையாகவே அமைதியான குணமுடையவர்களாக உள்ளவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள், அதிகம் வெட்கப்படக் கூடியவர்கள், அல்லாஹ்வின் தண்டனைக்கு அதிகம் பயந்தவர்கள் இப்படி ஒரு நல்ல மனிதனுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் அனைத்தும் இருந்துள்ளது.
மேற்சொன்ன நற்குணங்களுக்கு மட்டுமல்ல, ஒரு தயாள குணமுடையவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் ஏராளம் காணலாம். மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் வந்த பிறகு மதீனாவில் முஸ்லீம்களுக்கு தண்ணீர் தேவை என்றால் யூதர்களை நம்பியே இருந்தார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம் “யூதர்களிடம் இருக்கும் பிரசித்திப்பெற்ற பிஃரூமா என்னும் இந்த குடிநீர் கிணற்றை விலைக்கு வாங்கி தருபவர்கள் யார்? இந்த உதவி செய்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மிகப்பெரிய நதியை தருவான்” என்று கூறினார்கள்.
உடனே உத்மான்(ரலி) அவர்கள் தன்னிடம் இருந்த 20,000 தங்க தினார்கள் நபி(ஸல்) அவர்களிடம் தந்து யூதர்களிடம் அந்த தண்ணீர் கிணற்றை வாங்கினார்கள். அந்த கிணற்றிற்கு பெயர் உத்மான் என்று அழைக்கப்பட்டது. இன்றும் கூட இந்த பிஃரூமா கிணற்றை மதீனாவில் காணலாம்.
தயாள குணம் கொண்ட உத்மான்(ரலி) அவர்களின் பொருளாதாரம் இஸ்லாமிய வளர்ச்சிக்காக வாரி வாரி வழங்குவது ஆரம்பமானது. இஸ்லாத்திற்காக பொருளுதவி செய்வதில் உத்மான்(ரலி) அவர்கள் மற்ற நபித்தோழர்களுக்கு முன் மாதிரியாகவும் வாழ்ந்துள்ளார்கள் என்று சொன்னால் மிகையில்லை.
மதீனாவில் இஸ்லாம் வளர்ந்தது, மஸ்ஜித் நபவியை விரிவாக்கம் செய்ய விரும்பினார்கள் நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுடைய பள்ளிக்காக அதற்காக உதவி செய்பவர்கள் யார்? என்று வினவினார்கள், உடனே கொடைவள்ளல் உத்மான்(ரலி) அவர்கள் தன்னிடமிருந்த சொத்துக்களை கொடுத்து மஸ்ஜித் நபவி விரிவாக்கத்துக்கு பேருதவி செய்தார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் கடினமான போர் என்று வர்ணிக்கப்பட்ட தபுக் போருக்காக நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களிடம் உதவி கோரினார்கள். அந்த சமயம் முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாக இருந்தார்கள், அப்போதும்கூட உத்மான்(ரலி) அவர்கள் தன்னிடமிருந்த ஆயிரம் தங்க பொற்காசுகளை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்காக வாரி வழங்கினார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த கொடைவள்ளல் உத்மான்(ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தமது கொடைத்தன்மையையும் மக்கள் நல சமூக பணியையும் அதிக ஆர்வத்துடன் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இவர்களது ஆட்சியில் மக்கா, மதீனா பள்ளிகள் புனரமைப்பு செய்யப்பட்ட விதமும் அல்குர்ஆன் வசனங்களை ஒன்று திரட்டிய விதமும் இன்றும் கூட வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 11ல் பார்க்கலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அபூபக்கர்(ரலி) அவர்களை அல் காரினைன் என ஏன் அழைக்கப்பட்டது? ..ரமலான் சிந்தனை – 9.. கீழை ஜஹாங்கீர் அரூஸி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில், அதாவது வயது வந்தோர்களில் முதலாவது நபராகும்.
எப்பொழுது இஸ்லாத்தை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அப்போதிருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அவர்களது வாழ்க்கை முழுவதுமே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக மாசு மறுவில்லாமல் தன்னையே இழந்த சரித்திரச் சான்றுகளைத் தான் நாம் காண முடியும்.
இன்னும் ஹஸ்ரத் உதுமான் (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) போன்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸாபிக்கூன் அவ்வலூன் என்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முன்னோடிகளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவராக கணிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்களது அப்பழுக்கில்லாத தியாக வாழ்வு தான் என்றால் அதில் மிகையில்லை.
இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமைக்காக ஏகப்பட்ட அடிமை முஸ்லிம்கள், அவர்களது எஜமானர்களால் துன்புறுத்தப்பட்ட பொழுது அந்தக் கொடுமையைச் சகிக்காது தன்னுடைய சொந்த செல்வத்தைக் கொடுத்து, அந்த அடிமை வாழ்வு வாழ்ந்த முஸ்லிம்களை விடுதலை செய்த பண்பாளராக அபுபக்கர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
அண்ணலாரை மனமுவந்து ஏற்றுக்கொண்ட அபூபக்கர்(ரலி) அவர்களும் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) இருவரும் இணைந்து தமது பனீதைம் குலத்தாரின் மற்ற மக்களிடமும் ஏகத்துவத்தின் பால் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட குறைஷியர் குலத்தின் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட நவ்ஃபல் இப்னு குவைலிது என்பவர் அபூபக்கர்(ரலி), தல்ஹா(ரலி) இருவரையும் பிடித்து இழுத்து வரச்செய்து இருவரையும் ஒரே கயிற்றால் கட்டிப்போட்டு அடித்து வதைக்க ஆரம்பித்தார்.
இதை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பனீதைம் கோத்திரத்தார் உள்ளிட்ட யாருமே இவர்களை விடுவிக்க முன்வரவில்லை. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் இருவரும் “முதன் முதல் இஸ்லாத்திற்காக, துன்பம் அனுபவித்த இரண்டு வீரர்கள்” (அல் காரினைன்) என்று அழைக்கப்பெறுகின்றனர்.
இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை தங்களின் உயர்வான தலைவராக மதிக்கப்பட்ட அபூபக்கர்(ரலி) அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக தூக்கி எறிந்து விட்டனர் மக்கத்து குறைஷியர்கள்.
பெரும் செல்வந்தரான அபூபக்கர்(ரலி) அவர்களும் தல்ஹா(ரலி) அவர்களும் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டு வீதிகளில் வருவோர் போவோரெல்லாம் பார்த்து எள்ளி நகையாடிய அந்த நிகழ்வினை நம்மோடு வாழும் இன்றைய செல்வந்தர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தம்மிடம் இருக்கும் தங்கம்,வெள்ளி, மாடமாளிகை, சொத்து சுகம், வாகனம் எல்லாமே தாம் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தின் கொள்கைக்கு முன்பு ஒன்றுமே இல்லை என்பதைத்தான் அல்காரினைன் என்று அழைக்கப்பெறும் அபூபக்கர்(ரலி) அவர்களும் தல்ஹா(ரலி) அவர்களும் நமக்கு உணர்த்தியுள்ளனர்.
இப்படிப்பட்ட தியாக சிந்தனைகள் இன்றைய நமது செல்வந்தர்களிடம் இருக்கிறதானு கேட்கவில்லை? இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். ஈந்துவக்கும் ஈகைப்பணியில் தமது செல்வம் அனைத்தையும் அர்ப்பணித்த அன்னை ஹதீஜா பிராட்டியார், அபூபக்கர்(ரலி), ஹழ்ரத் உத்மான்(ரலி) போன்றவர்களின் தியாக வாழ்க்கை நாம் ஒவ்வொருவரும் கற்று உணர வேண்டிய பாடமாகும்.
அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆரம்ப கால ஏகத்துவ பரப்புரையின் மூலம் ஈர்க்கப்பட்ட மிக முக்கிய ஐந்து நபர்களான உத்மான் இப்னு அஃப்பான்(ரலி), ஜுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), சஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) குறிப்பிடத்தக்கவர்களாகும்.
இந்த ஐந்து நபர்களும் பெருமானாரின் கொள்கைகளை ஏற்று அவர்களின் சீரிய வழிகாட்டலில் தங்களை முழுமையாக இணைத்துக்கொண்ட பின்னர் தொடக்க கால இஸ்லாமிய பிரச்சாரகர்களாகினர். இந்த ஐந்து நபர்களின் தீவிர ஏகத்துவ பரப்புரையின் மூலம் சுமார் ஐம்பது நபர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.
அபூபக்கர்(ரலி) அவர்களின் ஏகத்துவ பரப்புரையில் தன்னை இணைத்துக்கொண்ட முதல் ஐந்து நபர்களில் ஒருவர் ஹழ்ரத் உத்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களும் ஒருவராகும்.
உமையா கோத்திரத்தின் மிகப்பெரும் செல்வந்தரான ஹழ்ரத் உத்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் தமது செல்வம் அனைத்தையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்கள்.
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபாவான உத்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள், தங்களின் இறுதி காலத்தில் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி பல நாட்கள் துன்புறுத்தப்பட்ட நிலை குறித்து இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 10ல் காணலாம்…
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் வரலாற்று பின்னணி…ரமலான் சிந்தனை – 8…கீழை ஜஹாங்கீர் அரூஸி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
குல வம்சம் கோலோச்சிய அன்றைய மக்காவின் குறைஷியர் வம்சத்திலேயே “பனீதைம்” என்ற உயரிய கோத்திரத்தில் உதுமான் இப்னு ஆமிர் – சல்மா பின்த் சக்ர் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தவர்கள் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள், தமது வம்சத்தை சார்ந்த முன்னோடிகளின் வரலாறு மற்றும் முன்சென்ற சமுதாயங்கள் குறித்த தெளிவான ஞானம் கொண்டவர்களாவும், மிகச்சிறந்த வணிகராகவும், செல்வந்தராகவும் வாழ்ந்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். மக்காவின் மிக முக்கிய 10 நபர்களில் அன்னை ஹதீஜா பிராட்டியாரும் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களும் முதன்மையானவர்களாக திகழ்ந்தார்கள்.
மக்காவின் வணிகச் செல்வர்கள் வாழ்ந்த பகுதியில் அபூபக்கர்(ரலி) அவர்களும் வாழ்ந்தார்கள். இவர்களது வீடு பெரும் செல்வ சீமாட்டி அன்னை ஹதீஜா பிராட்டியாரின் வீடு இருந்த பகுதியிலேயே இருந்தது. வியாபார ரீதியாக அடிக்கடி யமன் மற்றும் சிரியா சென்று வந்தார்கள்.
சிறு வயது நட்புடன் மட்டுமின்றி, நபியவர்களுடன் வியாபார ரீதியாக கொடுக்கல், வாங்கலிலும் தொடர்புடையவர்களாக இருந்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். அன்பு நண்பர் அண்ணலாரின் இயல்பான குணத்திற்கு ஏற்ப அபூபக்கர்(ரலி) அவர்களும் சிலை வணக்கத்தையும், குறைஷியரின் தீய பழக்கங்களையும் வெறுத்து வாழ்ந்தார்கள்.
மக்கத்து மக்களால் மிகவும் மதிக்கக்கூடிய நபராகவும் அம்மக்கள் தங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெறுவதற்கு காத்திருப்பார்கள். இவர்கள் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கு சென்று விட்டால், அவர்கள் திரும்பி வரும் வரை காத்திருந்து தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நிலையில் தான் மக்கத்து மக்கள் இருந்தனர்.
இவையெல்லாமே அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை நீடித்த நிகழ்வுகளாகும். ஒருமுறை வியாபார ரீதியாக யமனுக்கு சென்று விடுகிறார்கள். அன்றைய சூழலில் அண்ணலாருக்கும் நபித்துவம் கிடைத்து விடுகிறது. தனக்கு கிடைத்துள்ள நபித்துவம் குறித்தும் ஓரிறை குறித்தும் அண்ணலார் மக்காவில் வெளிப்படுத்திய தருணத்தில் மக்கத்து குறைஷியர் அனைவரும் ஓரணியில் திரண்டு கடும் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர்.
குறைஷியர் தலைவர்களில் முக்கியமான அபூஜஹ்ல், உத்பா, ஷைபா போன்றோர் மக்களை அமைதிப்படுத்தி நமது மதிப்புமிகும் அபூபக்கர் அவர்கள் யமனுக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வரை அமைதி காப்போம், அவர்கள் வந்ததும் முகம்மது என்ற நபர் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்? என தற்காலிக அமைதியை ஏற்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
யமனில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு அபூபக்கர்(ரலி) அவர்கள் மக்கா திரும்பிய தகவல் கிடைத்து, உடனடியாக அவர்களின் வீட்டுக்கு குறைஷியர் தலைவர்களான அபூஜஹ்ல், உத்பா, ஷைபா போன்றோர் விரைகின்றனர்.
வந்தவர்களை வரவேற்று உபசரித்து விட்டு ஒரு பெரும் கூட்டமாய் வந்துள்ளீர்களே, ஏதேனும் விசேஷ செய்தி உண்டா? என்று அவர்களைப் பார்த்து அபுபக்கர் (ரலி) அவர்கள் வினவுகின்றார்கள். ஆம்! மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியோடு தான் வந்துள்ளோம் என்று ஒரே குரலில் கூறினர்.
அபூதாலிப்பின் பாதுகாப்பில் வளரக் கூடிய அந்த அநாதை, தன்னை ஒரு இறைத்தூதரென்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார். நாங்கள் உங்களுடைய வருகைக்காகத் தான் காத்திருக்கின்றோம். நீர் வந்தவுடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், இன்னும் இதில் உம்முடைய ஆலோசனை என்ன என்பதையும் நாங்கள் அறிய மிக ஆவலாக இருக்கின்றோம். அதற்காகத் தான் உங்களது இல்லமும் வந்தோம் என்று தாங்கள் வந்ததன் நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
சரி, நான் என்னவென்று விசாரிக்கிறேன்? நீங்கள் கலைந்து செல்லுங்கள் எனக்கூறிவிட்டு தன் ஆருயிர்த் தோழரைக் காண விரைந்து செல்கின்றார்கள். தோழரே..! நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா?
ஆம்! என்றுரைத்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
உங்களுடைய அந்த அழைப்பின் அர்த்தம் என்ன?
லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!
என்ற ஓரிறைக் கொள்கையின் தத்துவத்தை அபுபக்கர் அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.
தாமதமின்றி அண்ணலாரின் கரத்தைப் பிடித்து கலிமாவை மொழிந்து பெருமானாரின் இதயத்தோடு இணைந்தார்கள் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள்.
இஸ்லாத்தை பற்றி இதற்குப் பிந்தைய நாட்களில் கேள்விப்பட்ட அனைவரும் அந்தக் கொள்கையை முன்பு மறுத்தோ அல்லது தாமதப்படுத்தியோ தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அபுபக்கர் அவர்களோ அழைப்பின் வெளிச்சப் புள்ளியைக் கண்டவுடன், தானே சூரியனாக மலர்ந்து நின்றார்கள். உடனே ஏற்றுக் கொண்டார்கள். எந்தவித சுணக்கமும் அவர்கள் காட்டவில்லை என்பது அவருக்கு இறைக் கொள்கையின் மீதுள்ள பற்றும் இன்னும் அதனைக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் அன்பும் தான் காரணமாகும்.
இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை தங்களின் மதிப்புமிகு தலைவராக கருதிய மக்கத்து குறைஷியர்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பு அபூபக்கர்(ரலி) அவர்களை வெறுக்க ஆரம்பித்ததோடு அவர்களோடு வியாபார ரீதியிலான கொடுக்கல், வாங்கல் போன்றவற்றை தவிர்த்து சமூக புறக்கணிப்பு செய்ய ஆரம்பித்தனர்.
எதற்கும் தயங்காமல் தனது நண்பரும் நபியுமாகிய அண்ணலாரின் கரத்தை வலுப்படுத்துவதிலும் ஓரிறை என்னும் ஏகத்துவ ஜோதியை தமது குலத்திலும் குடும்பத்திலும் ஏற்றி வைப்பதில் மிகவும் தீவிரமாய் செயல்பட்டார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள்.
அபூபக்கர்(ரலி) அவர்களின் உறவினரான தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் இப்னு உத்மான் அத்தைமீ என்பவர் வியாபார நிமித்தமாக பஸராவுக்கு சென்று விட்டு அப்போதுதான் மக்காவுக்குத் திரும்பியிருந்தார். தமது உறவினர் அபூபக்கர்(ரலி) அவர்கள் அண்ணலாரை சந்தித்து இஸ்லாத்தில் இணைந்து கொண்ட தகவலறிந்து அபூபக்கர்(ரலி) அவர்களை அழைத்துச் சென்று அண்ணலாரை சந்தித்து தன்னையும் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள்.
அன்றைய குறைஷியர் குலத்தில் மிகவும் உயரிய “பனீதைம்” கோத்திரத்தைச் சேர்ந்த செல்வத்தாலும், செல்வாக்காலும் ஆளுமைகளாக திகழ்ந்த அபூபக்கர்(ரலி) அவர்களும், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் அவர்களும் இஸ்லாத்தின் ஏகத்துவ ஜோதியை தமது கோத்திரத்தாரிடம் கொண்டு சேர்ப்பதில் பம்பரமாய் சுழன்றார்கள்.
இஸ்லாத்தின் பரப்புரைக்காக இவர்கள் இருவரும் சந்தித்த மிகப்பெரிய சோதனைகளின் அடையாளமாக இவர்கள் “அல் காரினைன்” என்று அழைக்கப்பெறுகின்றனர்.
அந்த சோதனைகள் என்ன? அல் காரினைன் என ஏன் அழைக்கப்பட்டது? எனபதை இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 9ல் பார்க்கலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.