ராமநாதபுரம் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர் லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர், விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர். ராமநாதபுரம் அரண்மனை, புதிய பேருந்து நிலைய வளாகம், சந்தை திடல் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு முக்கவசங்களை வழங்கி, பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுரை வழங்கினர்.மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து கொரோனோ நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், பரவி வரும் உருமாறிய கொரோனோ ஒமிக்ரான் வைரஸ் நோய் தொற்றை கருத்தில் கொண்டு மக்கள் நலன் கருதி பல்வேறு கட்டுபாடுகளை நடைமுறைபடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் (06-01-2022) முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை. இரவு நேர ஊரடங்கின் போது பால், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.வரும் ( 09.01.22) ஞாயிற்றுக்கிழமை, ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்தப்படும். மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் போன்ற அத்தியாவசிய பணிகள் இயங்க அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து இயங்காது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. கொரோனா நோய்தொற்று தற்போது வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், அரசு வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் பொது இடங்களில் கட்டாயமாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தெரிவித்தார்.ராமநாதபுரம் வருவாய் கோட்டாச்சியர் எம்.சேக் மன்சூர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், வட்டாச்சியர் வி.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
13
You must be logged in to post a comment.