சுரண்டை நகராட்சி தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக உருவாக்கப்படும் எனவும், அனைத்து அடிப்படை வசதிகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றும் சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையாளர் லெனின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள சுரண்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நலச் சங்கங்கள் பல வருடங்களாக தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தென்காசி எம்எல்ஏ வும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ் பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சில பத்மநாதன் ஆகியோர் உள்ளாட்சித்துறை அமைச்சர், மற்றும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர். அதை தொடர்ந்து சுரண்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையாளராக நெல்லை மண்டல பேரூராட்சிகளின் துணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த லெனின் நியமிக்கப்பட்டு நேற்று சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் புதிதாக துவக்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் எனவும், குடிநீர் சுகாதாரம் சாலை வசதி போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக புதிய முதல் நகராட்சி ஆணையாளரை தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.