மதுரை மாநகரில் ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதிலிருந்து பல்வேறு வகையிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனை உடனடியாக மதுரை மாநகராட்சியும், காவல்துறையும் கவனத்திற் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணவும் வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு கொடுத்தார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,மாநகர் மதுரையில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதற்காக எங்களது ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை தற்போதைய திமுக அரசு ரத்து செய்துள்ளது. புதிய ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்து வேலைகளைத் தொடங்க வேண்டும்.தற்போது மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி கோருதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதேபோன்று வீட்டு வசதி வாரியத்தில் நடைபெற்ற டெண்டரில் ஒரு சில நபர்களே கலந்து கொள்ளும் வகையில் முறைகேடு நடைபெற்றுள்ளன. இதேபோன்று திண்டுக்கல்லில் நடைபெற்று அக்குறிப்பிட்ட டெண்டரையே ரத்து செய்துள்ளனர். ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகள் பல்வேறு இடங்களில் தேவையற்றதாக உள்ளன. இவற்றையெல்லாம் குழு ஒன்று அமைத்து எங்கு தேவையோ அங்கு அமைத்துவிட்டு தேவையற்ற இடங்களில் உள்ள சாலைத் தடுப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இவை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளன.குறிப்பாக மதுரை அண்ணா பேருந்துநிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வரை உள்ள சாலையில் சாலைத் தடுப்பு தேவையற்றது. ஆம்புலன்ஸ் சென்று வருவதற்கு நெருக்கடியாக உள்ளது. இதுபோன்ற சாலைத் தடுப்புகள் நகரின் பல்வேறு குறுகிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகள் அகலமாகவும் விரிவாகவும் உள்ள இடங்களில் மட்டுமே சாலைத்தடுப்பு அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஒருவழிப்பாதைகளில்கூட சாலைத்தடுப்பு அமைப்பது தேவையற்ற ஒன்றாகும்.மதுரையில் உயர்மட்டப்பாலங்கள் அமைப்பது குறித்த பொதுப்பணித்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதிமுகவைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்டே இவற்றையெல்லாம் கோருகிறோம். இதில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.அதேபோன்று அண்மைக் காலமாக மதுரை மாநகரில் செயின் பறிப்பு, கொலை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றையெல்லாம் மாநகர காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும். கீரைத்துறை பகுதியில் புறக்காவல்நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும். தற்போது இயங்காமல் உள்ள புறக்காவல் நிலையங்களை உடனடியாக இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேர ரோந்துக் காவலை அதிகரிக்க வேண்டும் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.