திருக்குறள்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறுவதுடன், தமிழ் எழுத்துக்கள், மாதங்கள், கிழமைகள் உள்ளிட்டவற்றையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறி, உலக சாதனைகளை படைத்துள்ளார் 3 வயதே ஆன சிறுமி சுருதி.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – தளவாய்புரம் அருகேயுள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன், உஷா தம்பதியினர். இவர்களின் 3 வயது மகள் சுருதி. குழந்தை சுருதி மிகவும் துருதுருவென்று இருப்பதுடன், சொல்லிக் கொடுக்கும் தகவல்களை கவனமாக கேட்டு திரும்பிச் சொல்வதிலும் மிகவும் புத்திசாலியாக விளங்கி வருகிறார். இவரது திறமையைக் கண்ட பெற்றோர், சிறிய வயதிலேயே தங்களது மகளை உலக சாதனையாளராக்குவதற்கு உரிய பயிற்சிகளை வழங்கி வந்தனர். திருக்குறள், உயிர் எழுத்துக்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள், கிழமைகள் என அனைத்தையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கற்றுக் கொடுத்தனர். அனைத்து விஷயங்களையும் ஆர்வமுடன் கற்றுக் கொண்ட சுருதி, கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற காணொலி காட்சி வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 20 திருக்குறள்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 நிமிடங்களில் கூறி சாதனை படைத்தார். மேலும் சாதனையாளர் சுருதி, 3 நிமிடங்களில்28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 10 நதிகள், உயிர் எழுத்துக்கள், பதினாறு செல்வங்கள், மாதங்கள் மற்றும் கிழமைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறி சாதனை படைத்தார். இரண்டு சாதனைகள் படைத்த சிறுமி சுருதிக்கு, கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் டாக்டர் குமாரவேல் வெற்றி பெற்றதற்கான, சாதனையாளர் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார். கொரோனா காலம் என்பதால் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை தபால் மூலமாக வழங்கினர். சிறுமியின் சாதனையை அறிந்த அந்தப்பகுதி மக்கள் சாதனை சிறுமி சுருதியையும், அவரது பெற்றோரையும் பாராட்டி, பரிசுகள் வழங்கி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.