மதுரை சிம்மக்கல் பழ மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்தவரான இந்திரா (வயது 44), நேற்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு சிம்மக்கலில் இருந்து புறப்பட்டு பெரியார் செல்லும் மாநகர பேருந்தில் பயணித்துள்ளார்.அப்போது பேருந்து பெரியார் பேருந்து பகுதியில் உள்ள கட்டப்பொம்மன் சிலை அருகேயுள்ள சந்திப்புக்கு வந்ததும் பெருந்து நின்றதும், இந்திரா வேகவேகமாக இறங்கி செல்ல முற்பட்டுள்ளார்.இந்தநிலையில் போக்குவரத்து சிக்னல் கிடைத்தவுடன் பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியதும் நிலை தடுமாறிய இந்திரா பேருந்தின் பின் சக்கரத்தில் உடல் நசுங்கி சம்பவம் இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.உடனே இதுகுறித்து மதுரை மாநகர் போக்குவரத்து போலீசார் மற்றும் திடீர்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்திராவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து பேருந்து ஓட்டுநரை பிடித்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பெரியார் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கட்டபொம்மன் சிலை அருகேயும், மேம்பாலத்திலும், பேருந்துகள் சிக்னலுக்காக நிறுத்தப்படும் சில நிமிடத்திற்கு உள்ளாகவே பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அவசர அவசரமாக இறங்கிவிடுவதால் இந்த பகுதியில் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில்,அதேபோல் சிக்னலுக்காக நின்ற பேருந்தில் இருந்து இறங்கிய பெண் நிலைதடுமாறி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.