கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.இந்நிலையில் விவசாய உற்பத்தியை கருத்தில் கொண்டு விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மானாவாரி சாகுபடி பகுதிகளான சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளிலும் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாகுபடி பணிகள் தீவிரமடைந்து வருகிறது. அதற்கு உரங்கள், பூச்சிமருந்துகள் மற்றும் விதைகள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே ஊரடங்கு காலங்களிலும் விவசாய உற்பத்தியை கருத்தில் கொண்டு பிற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைப் போல உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உட்பட அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் விவசாயிகளும், விற்பனையாளர்களும் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.